வியாழன், 7 நவம்பர், 2024

எதை
வரையப்போகிறாய்

சிறு சிதைவும்
அசைவுமின்றி
அகால அகாலமாய்
வியாபிக்கும்
காலத்தையா

இன்ன நிறமென
யாரும் வரையறுக்க
முடியா வண்ணம்
பெருகும்
அந்தியின்‌
சாந்தமான பிறழ்வையா

இரவின் ஆன்மாவை
உச்சாடனம்
செய்யும்
கிருட்டியின் நாதத்தையா

ஆழ்ந்து அகன்று
பரவிய நுண்ணிய ஒன்று
விதைக்குள்
தன்னைப் பொதிந்துள்ள
மாயத்தையா

எத்தனை வடித்தும்
இவற்றின்
பூரணத்தின் ஒரு துளி
இல்லாதாகிறது

தூரிகை
ஏந்தும் மனம்
ஒரு கணம்
மட்டும் காண்கிறது
ஒரு துளி பூரணத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?