Tuesday, November 23, 2021

வானத்திற்கு
ஒழுங்கேது
வரையரையற்ற விரிவு
நிறம் இன்னதென
சொல்லமுடியாத
தன்மை
பெரும்கூரைமட்டுமா
அடிநிலமுமா
ஒரு பெரும்
சதுரமா
முக்கோனமா
என்ன வடிவுக்குள்
இத்தனை
கிரகங்கள்
அண்டங்கள்
இந்த வரம்பற்ற வானத்தில்தான்
அவ்வளவு ஒழுங்காய்
ஒரு குருக்குவெட்டுக்கோடாக
அமைத்துக்கொண்டு
சிறகடிக்கிறது
ஒரு புற்கூட்டம்

Monday, November 22, 2021

இவ்வந்திக்குள்
கடல் நோக்கிச் செல்லும்
பறவை
கடல் மூழ்கும்
சூரியனின்
செம்மை சூடிற்று
அலைசரிகை
எங்கும்
செம்மையொளி
அலைத்துமிகள்
தீத்துளியென ஒளிர்ந்து
பின் நீரானது
கரை நிற்கும்
அவள் தீச்சுடரென
அம்மாலை
பற்றி எரிந்தது
ரம்மியமான செஞ்சுடரென

Sunday, November 21, 2021

விருட்சங்கள்
மண் துளைத்து
வேர் வளர்கிறது
இலைகள் வெளி துளைத்து
காலூன்றி நிற்கிறது

கடல் பெரும் கூரையென
அந்தரத்தில்
தளும்பி‌ நிற்கிறது

மீன்கள்
ஏரியின் ஆழத்திலா?
வானின் விரிவிலா?
வலசைப் பறவைகள்
வானின் மேலா
கடலின் கீழா

பூமியை விரித்து
கூரை ஓவியமென
பதித்துவிட்டிருக்கிறார்கள்
வானம் கால் எட்டா
தூரத்தில்
பெருநிலமென
விரிந்துள்ளது

மேகம் கிழித்து
கீழ்நோக்கி விழுகிறது
ஒரு தலைகீழ் உதயம்

Saturday, November 13, 2021

 ஒரு கணத்தை
என்ன செய்வது
இக்கணத்தை என்ன
செய்வது
ஒரு மலையின் விரிவுடன்
ஒரு மழைத்துளியின்
எளிய கணத்துடன்
ஒரு துளி ஒளியெனத்
தலும்பும்
ஒரு பெரும் எழும்பி
நிற்கும்‌அலையென
ஒரு மழைமேகக் கூட்டமென
மேல் கவிழும்
இக்கணத்தை
என்ன செய்ய?
ஒரு மலரை சூடிக்
காட்டுகிறாய்
அப்படியே இக்கணத்தையும்
எக்கணத்தையும்
ஒரு மலராக்கி சூட்டுவதன்
சூட்டிக்கொள்வதன்
எளிய சூட்சுமத்தையும்
 வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணமானது
பூக்களின் வண்ணம்
பருகி என்றாள்

பின்
கூந்தல் காற்றாடத் திரும்பி
வண்ணப்பூக்கள்
வண்ணமானது
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம்
உண்டு
என்று சிரித்தாள்

ஆம்
வண்ணங்கள் பறப்பவை
வண்ணங்கள் மலர்பவை
வண்ணங்கள் சிரிப்பவை
வண்ணங்கள் வண்ணமயமானதன்
கதையை மட்டும்
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்

 நீ அலுங்காத போது
காற்று அசைக்கிறது
கொலுசின் சிறுமணிகளை

காற்று அசையாத போது
மெலும் மென்மையாய்
அசைக்கிறது
உன் நடை

அச்சிற்றொலியின்
தூண்டில் வீச்சுக்கு
மனம்
எழுகிறது
ஆழ் கடலில்
நீண்டு தொடும்
கதிர்க்கரங்கள்
நோக்கி எழும்
கனவுக் குமிழிகளாய்

தத்வமஸி

 பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்

கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்

காட்டில்‌ஒரு மலர்
காடே ஒரு மலர்

மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை

வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்

இச்சொல் அடுக்கில்

நான் எது
எது நான்
 சிறுமியாய்
கன்னியாய்
பெண்ணாய்
பின் முதியவளாய்
நாள் தவறாது
பூப் பரித்து
சாமிக்கு இட்டவள்
விண்ணுலக வாயில் நின்று
பூமி நோக்கினாள்
உலகை சூழ்ந்த நீர்
இதழாகவும்
நடுவில் அமைந்த
நிலம் மகரந்தச்செரிவெனவும்
ஒரு மலரைக் கண்டாள்
பின் குதிங்கால் பட்டு
கொலுசொலிக்க
உள் சென்றாள்
விண்ணுலகின்
தன் முதல்நாள்
அன்றாடங்களுக்குள்
 எட்டிப் பூப்பரிக்கும்
சிங்காரப் பெண்ணே
நுணிக்கால் பாதம்
நிலம்விட்டெழவில்லை
இறக்கைகளும்
முளைக்கவில்லை
நீண்ட உன் கைகளில்
சரிந்து மேல்விழுந்து ஒலிக்கும்
வளையலன்றி வேறு
இசையெழவுமில்லை
ஆனாலும்
விண் நுன் கைகள்
சமைத்த பூக்கள்
உன் இத்தனை அருகாமைக்கும்
கிளை நீங்காத குருவி
இலை தன் உள்ளங்கை ஏந்தி
நடன பாவனையில் உன் மேல்
உதிர்க்கும் நீர்த்துளிகள்
மேலும்‌ மேலும்
நீ
மாலைச் சிறு நடையில்
சற்று நின்றவள்
ஸ்தம்பித்துப்போய்ச்
சொன்னால்
"வானம் என
ஒன்று இல்லையல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது நிறம்
மட்டுமல்லவா"
"ஆம்"
"நிறம் என்பது
கண்கள் காண்பது அல்லவா"
"ஆம்"
"கண்கள் இல்லாவிடில்
இவையனைத்தும்
எவ்விதமோ
இருக்கும் அல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது
நம் உலகமல்லவா
நாம்‌‌ காண்பது
ஒரு உலகம் மட்டுமல்லவா"
"ஆம் கண்ணே
இல்லாத வானின்
கீழ் நாம் நம்
கால்வேண்டும்
சிறு நிலத்தில்
இச்சிறுடலோடு
இக்கண்கள் எட்டித்
தொடும் காட்சிகளோடு
பல்லாயிரம் கனவுகளோடு
காதல்கொண்டுள்ளோம்"

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...