Monday, December 14, 2020

 ஒரு கணம்
ஏதுமற்று
இப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்

ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்

ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்

ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு

 ஆவினம் செவி சாய்த்தன


புற்பெருவெளி அலையாடிற்று

மலைகள் மௌனம் சூடின

ஏரி அலைபரப்பிற்று

நதி அமைதிபெருக்கானது

குழந்தை அமுதென பருகிற்று

பெண்டிர் லயித்தனர்

நாகங்கள் சிலைத்திருந்தன

ஆன்றோர் மெய் உணர்ந்தனர்

அவ்விசையில்

கால்தடமறியா தூரத்து
நிலமொன்றில்
ஆதியந்தமிலா மலரொன்று
மீட்டிய இசையில்

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...