வெள்ளி, 8 மே, 2026

நிலவொளி
இலைகளின் வழி
உடைந்து சிதறிக் கிடக்கிறது
இலையசைந்தால்
நிலவு அசையும் மாயம்
நிகழ்கிறது
இந்த இரவின் ஆன்மம்
பறவைக்குரலில் ஏறி வந்தது
எங்ஙனம்?
எதன் தனிமை இங்கு
கிடப்பது
எதன் முழுமை இங்கு
பெருகிக்கொண்டிருக்கிறது
கடல் மேலும்
மலை மேலும்
இச்சிறு இலைமேலும்
கிடக்கும் நிலவே
யாரும் தொடாத
பள்ளத்தாக்கின் ஆழத்தை
நீ மட்டும் தீண்டுகிறாய்
எதன் தனிமையின் மீது
விழுகிறது முழுமை
எதன் ஆழத்தில்
மிதக்கிறது வான்
நிலவு ஒளியை வீசி
கட்டியிழுத்துச் செல்கிறது
பூமியை
கலங்கரை விளக்கின் ஒளி
எக்கடலின் மீது விழுகிறது?
உன் பதில்களில்
ஏதோ ஒன்று
கடைத்தேற்றுமென
காத்துள்ளேன்
நீயோ சுவாசிக்கிறாய்
காலத்தின் பெருவீதிகளை
நிரைத்து நிரைத்து
இன்று மாலை
வானம் மஞ்சளாய் இருந்ததும்
மேற்கில்‌ நெருப்பின்
பிழம்பாய் கொதித்ததையும்
வரிசைக்கட்டி வானில் நடந்த
பறவைகளையும்
யாரும் பார்க்கவில்லை
சொல்லாமல் கொல்லாமல்
கண்வழி உள் நுழைந்த
இம்மாலையை
வாவென்று சொல்ல நாவெழாமல்
நின்றிருந்தேன்
விடைபெற்றபோது
மேற்கும் அறியாமல்
புள்ளும் அறியாமல்
ஏன் மஞ்சளும் கூட அறியாமல்
துளி எடுத்து
சிற்றகலில்
என் சிற்றில்லில்
சுடராய் வரைந்துகொண்டேன்

வியாழன், 7 மே, 2026

மலர்ந்தபின்
சொல்
விதைக்குள்
அது மௌனம்
இன்னும்‌
ஒரு நாளுள்ளது
இன்னும்
ஒரு மணி நேரமுள்ளது
இன்னும்
ஒரு நிமிடமுள்ளது
இன்னும்
ஒரு நொடியுள்ளது
கடந்தபின்னும்
காலம்‌ அப்படியே உள்ளது

தாகூர் ஜெயந்தி

 இன்று 07.05.2026 தாகூரின் பிறந்தநாள். கீதாஞ்சலி என் மனதுக்கு ப்ரியமான நூல். இமயத்தைக் கண்டு உளம் நெகிழ  நமக்கு மொழி தேவையில்லை. கவிதையின் ஆன்மத்துக்கும் அது பொருந்தும்.














'அமர் ஷோனார் பாங்ளா' எனக்குப் பிடித்த பாடல். வங்கப்பிரிவினைக்கு எதிராக சுவதேசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டபோது 1905ல் தாகூரால் எழுதப்பட்ட பாடலிது. பின்னர் 66 வருடங்கள் கழித்து 1971ல் வங்கப்போரின் போது 'ஸ்வாதின் பங்ளா பேடர் கேன்ந்ரா' எனும் வானொலி நிலையத்தால் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. ஆக இது ஒரு போரின் கவிதையும் கூட.1972ல் பங்களாதேஷின் தேசிய கீதமாக்கப்பட்டது.


அப்பாடலின் மொழிபெயர்ப்பு கீழ்வருவது,

பொன்னொளிர் வங்கம்

வங்கமெனும்‌ பொன்னே
உன்னைக்‌ காதலிக்கிறேன்

என்றும் உன் வானம்,
உன் தென்றல் 
என்னை லயத்தில் நிறுத்தி
ஆன்மத்தை குழலென்றாக்கியது

வசந்தத்தில், என் அன்னையே
அலையாத்திக் காடுகளின் மணம்
வெறியெழும் இன்பத்தில் நிரைக்கிறதென்னை
இலையுதிர்க் காலத்தில், எம்‌ அன்னையே
நெற்கொழிக்கும் வயல்களில்
கதிரெங்கும் இனிய சிரிப்பொன்று
படரக்காண்கிறேன்

ஆ, எத்தனை அழகு 
எத்தனை வண்ணம்
என்னவொரு பிரியம்
என்னவொரு கனிவு
நதிக்கரையிலும்
ஆலமரத்தினடியிலும்
எத்தனை அழகாய் இட்டுள்ளாய்
மணற்விரிப்பை

என் அன்னையே
உம் உதட்டின் சொல்
என் காதுக்குத் தேன்

துன்பத்தின் சாயல்
உன்‌ முகம் படிகையில்
ஓ என் அன்னையே
இதயம்‌ கண்ணீரால் நிறைகிறது

பொன்னொளிர் வங்கமே
உன்னைக் காதலிக்கிறேன்

நீ ஏற்றிய அகலில்
அதன் செதில் ஒளிர்கிறது
ஒரு நாள்
நீ இட்ட கோலத்தில்
கோடுகளோடு வளைந்து
கிடந்தது
இமையாக் கண்களும்
ஓயா துடிநாவும்
என்‌ கனவுள்
வந்துவிட்டது
எத்தனை நஞ்சென்றறியேன்
அன்பே
நீ ஆசையாய் வளர்க்கும்
சிறு மலரின் தேன் துளி
விஷமுறிக்கும்தானே?

வனமெங்கும்  நிறைந்த
வசந்ததின் மலர்களாய் நின்றது
மென்மையாய் மிதந்து வந்து
நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது
அசையா வேர்களில்
தியானித்திருந்தது
வான்தொட எழுந்த
பெருவிருட்சத்தில்
நடனமாய் இருந்தது
பொழுதணையும் வேளையில்
நாளெல்லாம்‌வெட்டிய
விறகுகளை சேர்த்துக்கட்டி
பரிசலில் நதி கடக்க
இருளில் இருளாய்
காட்சியானது வேழம்
வனமென ஆகிவந்த
துளியாய்

புதன், 6 மே, 2026

முட்கள் இதென்றும்
மலர்கள்‌ இதென்றும்
விதையில் எங்ஙனம்
வகுத்துள்ளாய்?
நகரம் உயிர் நீங்கும்
விலங்கைபோல் உச்ச விசையில்
துடித்துக்கொண்டே இருந்தது

பெருஞ்சாலையெங்கும்
கிளையும்‌இலையும் சேறுமாய்
அடித்துச்செல்லும் வெல்லம்போல்
இறுகப்பற்றிய
மக்கள் ஊர்ந்துகொண்டிருந்தார்கள்

ஒளி மங்கிய இடங்களில்
பேரங்களும்
இருள் அடர்ந்த மூலைகளில்
இச்சைகளுமாய்
பொருள்படுவது பொருளென்று
மட்டும் ஆகிவிட்ட
இப்பெருநகரின் மேல்
அத்தனைக் கருணையுடன்
ஒரு வலசைப்புற்கூட்டம்
கடந்து செல்கிறது

நான் யார்?

சொல்‌ பிறந்தது
உன்னில்
சொல் சென்றோய்வது
உன்னில்
இடைப்பட்ட அச்சிறுகாலம்
அகலென ஏந்திய
சொற்சுடரொளியில்
ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால்
கணம் வாழும்
பித்தன்

செவ்வாய், 5 மே, 2026

மலர்கள்
மலர்வதின்
மாயத்தை
தியானிப்பதில்
கழியட்டும்
இச்சிறுவாழ்வு

அக்கரம்

கடலில் கோடி
உயிர்கள் உள்ளது
வானத்தில் இக்கணம்
கோடி‌ பறவைகள்
பறக்கின்றன
நிலமெங்கும் உயிர்களால்
நிறைந்துள்ளது
அனைத்தையும்‌ தொடுத்துக்
கோர்த்த கரமே
எவ்வுயிர்மலரை
எந்நாரில் கோர்த்துது
சரமாக்கிக்கொண்டுள்ளாய்
எனது என
சொல்லிக்கொண்டிருந்தேன்

தனது என‌
ஏதுமில்லை
என்றலர்ந்துள்ளது
மலர்

ஒலியுரை இறை

பருவம்
காலம்
மலர்கள்
நதி
கடல்
மலை
குளிர்
மழை
வெயில்
புள்
யானை
மேகம்
அருவி
குழவி
புல்
இலைகள்
வேர்
அன்பு
காதல்
கருணை

சொல்‌‌ சொல்
சொல் சொல்

சொற்களால்
நிறைந்துள்ளது
உலகம்

அர்த்தமேதுமற்ற
அனைத்துமுரையும்
ஒரு ஒலியில்
ஏன் நீ
குடிகொண்டுள்ளாய்

திங்கள், 4 மே, 2026

இலையோ மலரோ
உதிர்ந்துதானே போகிறது
உதிர்வதற்குள் பறக்க வேண்டும்
எரியும் நட்சத்திரங்களும்
பெரும்புயல் வீசும் கிரகங்களும்
உலவும்
அம்மோனப்பெருவெளிக்குள்
பறக்க வேண்டும்
சிறகென்பது
இச்சிறுகூட்டை வானங்களுக்குள்
திறந்துவிட
ஒரு காலத்தில்
கடலுள் திளைத்த மீன்கள்
வலை சிக்கி
துடித்திறந்து
நிலைத்தபெரும்கண்ணுடன்
திறந்தசிறு வாயுடன்
கிடக்கின்றன
அன்பே
நீ அழைத்தால் போதும்
இவ்வுடலை
உனக்கு
காணிக்கையாய் இடுவேன்
உடலை
ஆடையாய் அணிந்துள்ளேன்
புறத்தை புறம் தீண்டுவதாய்
வெயிலை மழையை
குளிரை நீரை நெருப்பை
அறிகிறேன்
அகத்துளிர்த்த அம்மலரொன்றை
எவ்வகத்தின் வளிக்கரம்
தீண்டுமோ?

ஞாயிறு, 3 மே, 2026

வெகு நாள்‌கழித்து
மழைநாளின்
குளிராக வருகிறாள்
என் கடலாழம்
பூத்திருக்கும்
மலரை அவளுக்காக
கொய்து வருகிறேன்
இத்தனை குளிராக
என் மேல் கவிபவளே
என் மலர்களை
வாங்கிக்கொள்ளடி
வைரக்கற்களாய்
விழுகிறது
ஆலங்கட்டி
கையில் எடுத்து
குளிரை உணர்
கைகளில் வானம்
வழிந்தோடும்
அதிசயத்தை
நிகழ்த்திக்கொள்
கண்மூடி கண்டுகொள்
பூமியை 
மாற்றி மாற்றிப் பார்க்கும்
அம்மாபெரும் கண்களை

திங்கள், 29 டிசம்பர், 2025

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி

உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன்

இத்தனை தனிமையான இரவில்

காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக்

கண்டபின் 

முழுதும் அமைதிகொண்டுள்ளேன்

இவ்வமைதி என்னை எதை நோக்கி

இட்டுச்செல்லுமோ?

உன் இருப்புகளின் பெருவெளியில் தேவதைகள் உண்டெனில்

ஒளியை சிறகாய் கொண்டுள்ள ஒரு தேவதையை

அனுப்பி வை

என் காதுகளில் நான் கேட்க விரும்புவது எல்லாம்

நதி கூழாங்கற்களிடம் சொல்லும் அச்சொல்லைத்தான்

இருப்புகளின் பெருக்கில் இயல்பாக

உதிர்ந்து போகும் ஒரு சொல்

பார்த்தல்

யாருமற்ற இம்மலையில்
என் குடிலின் முன் அமர்ந்து
மொத்த உலகும் பெருகுவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உன்னை சுட்டும் சொல்

 என்னால் வேறேதும்
செய்ய முடியாது
சொல்லை அடுக்குகிறேன்
சொல்லை கோர்க்கிறேன்
சொல்லை சரமாக்குகிறேன்
சொல் சுட்டும் திசையில்
ஓடிச்சென்று திரும்புகிறேன்
வானம் ஒரு சொல்
கானகம் ஒரு சொல்
மழையும் மலையும்  ஒரு சொல்
சொல்லாகாத ஏதுமில்லை மண்ணில்
தொன்மையான சொல்லொன்று 
குழைந்து வளைந்து
சொடுக்கி வெடித்து மறைந்தபின்
நீ எதிரொலிக்கிறாய் அகத்தில்


உரைபவன்

இதுவல்ல இதுவல்ல
என விலக்கச்சொன்னால்
இவளை
எப்படி நான் விலக்குவது?
இம்மாவிருட்சமும்
இது பிறந்த வந்த சிறுவிதையும்
இவ்விதைக்குள் உரையும் உயிர்துடிப்பும்
எல்லாம் இருக்கட்டும்
நான் மலரைப் பாடிக்கொள்கிறேன்
இதிலெல்லாம் உரைகிறான்
இவளில் அத்தனை அழகாய்
உரைகிறான் அவன்


ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும்
அதன் புகையும் கனவில்
காண்பது எதனை?
சிறு சொட்டாய் துளிர்க்கும்
சுடரில் ஒளிரும்
கனவு எது?

திங்கள், 9 ஜூன், 2025

சுடரின் நா நுனி
வெளியை
சுவைக்கிறது
வெளியின் நுனி விரல்
சுடரை‌ அலைக்கிறது
மனிதர்கள் பிராத்திக்கிறார்கள்
தம் தம் சுடரிடம்
சூரியனை ஏற்றிச்‌சென்ற
கரம் எதைப் பிராத்தனை செய்தது
எது அருள
பெருகிற்று இப்பெருக்கு

துளித் துளியாய்

ஷட்டர்கள் தடதடவென
திறக்கப்படுகின்றன
ஒன்றாய் இரண்டாய் இருந்த
மனிதர்
பெருக்காய் பெருகத்துவங்கிவிட்டனர்
சூரியன் உரைப்பாய் விழுகிறது
சிக்னலில் முன் நிற்கும்
வண்டியில் வெப்பம் ஒளிர்கிறது
சற்றுக்கெல்லாம்
கானல் எழுந்துவிடும்
புகையாய் காற்று நெளியத் துவங்கும்
காலூன்றவும் நேரமில்லா
இப்படியான ஒரு நாளில்
தன் அறைக்குள்
மழைக்கால கானகம் ஒன்றை
வரைகிறான்
ஒரு அவசரமுமின்றி
துளித் துளியாய்

ஞாயிறு, 18 மே, 2025

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள் - ஒரு தொகுப்பு

 1


பெருவிருட்சம் அடர்ந்த
இவ்வனாந்திரத் தனிமையில்
இடறி விழ நழுவி
மேலெல்லாம்
நிலவு வழிந்து கிடக்கும்
இப்பொழுதில்
உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

வனத்தின் ஏதாந்தத்தின் மேல்
ஒரு சொல்கூட துணையில்லா வானம்
கடலின் ஆழத்தில் எழுகிறது
அழுந்திய காலங்களின் குரலொன்று
நான் என் சின்ன பிரிவை
அவ்வளவு‌ கண்ணீருடன்
அணைத்து இன்புறுகிறேன்

...................

2

சொல்தான்
அழைத்துச்சென்று
நதியைக் காட்டியது
மலரைக் காட்டியது
யானைகளைக் காட்டியது
இலைகளைக் காட்டியது
வனங்களை
கடலை
வானத்தைக் காட்டியது
பின்
அளப்பரியது என்றது
சொல்லில் அடங்காது என்றது
பொருள் நேரானதல்ல என்றது
இரவின் ஓசைகளைக் கேள் என்றது
விழு நட்சத்திரம்தான் ஆதிச்சொல் என்றது
சொல்லுக்கு அப்பால் பார் என்றது
புலன்களால் அல்ல என்றது
ஆத்மம் என்றது
சொல்லின்மையில் ஆழ்ந்து போ என்றது
சிலருக்கு
சொல் தேவையில்லை
ஒரு மலரைக் கண்டால் போதுமென்றது

..........

3

சொல் எனும்‌ தெய்வம்

சொல்லின் சமிக்ஞைகள்
வான்நீலம் பாவிய விரல்களால்
அழைத்துக்கொண்டே இருக்கிறது
எழுந்து செல்வதற்கான
ஆணை ஆழத்திலிருந்து
ஒரு சொடுக்கலாக எழுந்தது
வானமே அலையென
விழுந்து அள்ளிச் சென்றது
ஆயிரம் வண்ணங்கள் காட்டி
ஓராயிரம் இருள் சொரிந்து
கசடுகளோடு அனைத்துமென்றது
இசையின் பறவைகளால் ஆன 
ஒரு அந்தியை வரைந்து காட்டி
துயரத்தின் ஆழத்தில் உரையும்‌ 
இன்பத்தைக் காண் என்றது
அதனதன் தன்மைக்கு முன் எத்தன்மையதென
அதனதன் தன்மை
எத்தன்மை நோக்கி
எழுகிறதெனக் காணச்செய்து
வனத்தீ எரிந்தடங்குகையில்
என்னை
சொல்லின்மையின் சமிக்ஞைகள்
கேட்கும் வெளியில்
விட்டுச் சென்றது

,...............

4

மொய்க்கும்  இருள்கூட்டம்
அத்தனை வேகத்தில் விலகுவதில்லை
அவ்வப்போது கடக்கும்
மின்மினி ஒன்றின் ஒளியில்
காட்சியாகிறது
அடர் இருள்
நெடும்பிறவி தவம்கொண்டு
இழுத்து வந்துள்ளேன்
சுடரும்‌ தீபமொன்றை
சுடரொளி கவரும்
சிறு வட்டத்திற்குள்
இப்பிறவி நலுங்குகிறது

....................

5

இத்தனை தூரம்
வீணாகப்
பயணித்துவிட்டேன்
குதிரைகளின்
களைப்பொலி
வனமெங்கும் ஒலிக்கிறது
இனி திரும்பிச் செல்ல வேண்டும்
எத்தனை பிறவித்தூரமோ
அத்துனைக்கும்

..........

6

ஆணவத்தின் மனம்‌கமழும்
சிற்றகல்களை
உன் சன்னதியில்
ஏற்றி ஒழிகிறேன்

என்னை பூதகணங்களுள்
ஒன்றாக்கு
உன் ஆயிரம்கால் மண்டபத்தின்
ஒற்றைத்தூணை
அழகுறச் சமைக்கிறேன்
வேறொன்றும்
வேண்டேன்
அருளினும் கொள்ளேன்

...........

7

என் வானங்கள்
தெளிவடைவதேயில்லை
வனங்கள் பற்றியுள்ளன
அணையா நெருப்புகளை
வெடித்துக்கிடக்கும்
பிலங்கள் நீருக்குக்
காத்துள்ளன
ஓயாப்பசியொன்று
கூர்திட்டிப் பதுங்கியுள்ளது
புலனெல்லாம்
பற்றிச்செல்கின்றன
தன் தன் வேட்கைகளை
பெருங்காற்று
அள்ளிவருகிறது
ஓயா இச்சைகளை
எல்லாம் கண்டிருக்கும்
நெஞ்சத்தின் ஆழச்சதுப்புகளில்
சிறு குமிழென வெடிக்கிறது
நிம் நாமம்

.............

8

என் வயல்களைக்
கடந்து வலசை செல்லும்
பறவைக்கூட்டமொன்றைக்
கண்டிருந்தேன்
ஒரு பறவை
'வருடா வருடம் இவ்வழிதான்
வலசை செல்கிறோம்' என்றது
'எத்தனை வருடமாக' என்றேன்
'அது தெரியாது
ஆனால் முதல்வலசையில்
பூமியில்
மனிதர்களே இல்லை' என்றது
நான் தாகூரைப்போல்
மூர்ச்சையடித்து
விழுந்தேன்

...........

9

மாகாலம்

இந்த சிவன்கோயில்
மட்டும் மூவாயிரம்
வருடம் பழையதல்ல
கூப்பிய கரங்களும்தான்
பட்டரும்தான்
மணிநாதமும் தான்
வாயிலில் இருக்கும்
பூக்கடையும்தான்
பூக்கட்டும் அம்மாளும்தான்
பூவை நாரில் கட்டும் விரல்களும்தான்
ஆனால்
அதன் நடனபாவத்தினிடையே
விழும் உதிர்ப்பூக்கள்
சென்று விழுவது மட்டும்
மாகாலசிவத்தில்

.............

10

காலநேரம்

காலத்துள் துறதலையும்
பிச்சைக்காரர்கள்
சிரிக்கிறார்கள்
நேரத்தை வைத்தாடும்
நம் பகடையாட்டங்களை

.............

11

நிரந்தர அடிமை

அடிமையாக்கப்படுதல் வெறு
அடிமையாதல் வேறு
ஒன்றில் ஆணவம் வெல்கிறது
மற்றொன்றில்
அழிகிறது
ஒன்று இரத்தம்
மற்றொன்று
கண்ணீர்
ஒன்று சுமை
மற்றொன்று
ஏகாந்தம்
ஒன்று அச்சம்
மற்றொன்று
சரனாகதி
ஒன்று முறிவு
மற்றொன்று
பறத்தல்
ஒன்று எஜமானனது
மற்றொன்று
தந்தையினது

..............

12

நிரந்தர அடிமை

தற்காலீகம்
கோலோச்சும்
காலமிது

இக்காலத்தில்தான்
என்னை நிரந்தர அடிமையாக்கிகொண்டேன்
ஒரு மலருக்கு

...............

13


இன்று 

ன் என்னை கைவிட்டாய் 
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் 
ஒரு மலர்கூடவா 
இல்லை எனக்குத்தர 
மலரின் சுகந்தத்தை 
வீசக்கூடவா 
உனக்கு மனமில்லை 
நீ அளித்த 
வெறுமையை அல்ல 
என் அறைமுழுதும் 
இருக்கும் மலர்களுக்கு 
மத்தியில் 
ஒரு மலரின்மையை 
வைக்கிறேன் 
ஜன்னல் வழி விழும் 
உதயத்தின் கிரணங்கள் 
மலர்கிறது மலரின்மையில் 

..............................................


14

காலமகாலம் 

 காலம்

இப்பறவை
எங்கும்
பறப்பதேயில்லை
பார்ப்பவர் மனதில்
பறப்பதாய்
ஒரு கனவை
தோன்றச்செய்கிறது

அகாலம்

இப்பறவை
அபாரமாய்
சிறகடிக்கிறது
பார்ப்பவர் கண்களுக்கு
கிளைநீங்கா
தோற்றம் தருகிறது

..............

15

காலமகாலம்

காலத்திற்கு 

உயிரில்லை 
மூச்சுண்டு 
 
அகாலத்திற்கு 
மூச்சில்லை 
உயிருண்டு


.........................................


16


லட்சம் வருடங்கள்
இருக்குமா
உன் விதையின்
பரம்பரை
என்றேன்
ஆலமரத்திடம்

கண் விழித்துப்பார்த்து
கண் மூடி ஆழ்ந்தது
ஒரே ஒரு நொடி
கேட்டது
அது லயித்திருக்கும்
அகாலத்தின்
மணிநாதம்

.................

17

ஒளிச்சொல்

இருளின் பாசுரங்களை
ஒற்றைக்குரலாய்
ஒலிக்கிறது
ஊரெல்லாம் ஏற்றப்பட்ட
அகல் சுடர்

ஊருக்கு
வெளியே
இருளுக்குள் அமர்ந்திருக்கும்
தெய்வத்தின்
முன் எரிகிறது
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென

..............

18

போதும்
சொற்கள்
என்றது ஒரு குரல்
கூட்டுக்குள்ளிருந்து

கூடொழிந்தது
பறவை
வானத்தின் கீழ்
கோடிச் சொற்கள்
காத்திருந்தன

ஒற்றை‌ஒரு சொல்தேடி
சிறகிசைத்தது புள்
துளியாய் ஆதியில்
நதி கிடந்தபோது
அது தியானித்ததொரு
சொல்

,..............

19

நீரெலாம்

இதோ
குடுவையைக் ஒட்டக்
குடித்து
டொக் என்று வைக்கிறேன்
எனக்கு பல வேலைகள் இருக்கிறது
அவசராமய் சென்றுவிடுவேன்
குடுவையின் தாகத்தை
வானம் பார்த்துக்கொள்ளும்
நீரெலாம் வான்கனிந்துதான்
அல்லவா

.................

20

வேறொன்றுமல்ல
பார்த்த ஷணத்தில்
முழுமையை வாரி வீசும்
மலரொன்றை காணத்தான்
இவ்வாழ்க்கை

நித்யம்
கனிந்து
ஆக்கும்
ஒரு‌ மலர்

...................

21

ஏரி வானத்தை
அருந்துவதை
சற்று முன்தான்
கண்டேன்
ஒரு திவளை நீர்
சிந்தியபோது
விழு நட்சத்திரமாக

.......‌‌‌.‌‌‌‌‌‌......

22

இதோ 
உள்து 
உள்படி 
வெளிப்பட்டு 
கணம் கூட ஆகவில்லை 
கிளையறியாமல் 
இலைகூட அறியாமல் 
பறத்தல் முடித்து 
அமரும் சின்னப்பறவையைப்போல் 
வந்துவிடுகிறது 
பாவனை 

இதோ 
உள்தை 
உள்படி 
கண்டு 
ஒரு ஷணம் கூட ஆகவில்லை 
நட்சத்திரம் விழுந்ததோடு 
நகர்ந்துவிட்டேன் 
பிரம்மாண்டங்களுக்கு 
முன்னிருந்த 
என் எளிய வானங்களுக்கு

.......................................

23

இதோ எஞ்ி வு 
உலகுடன் கடைசி 
பந்தமென்று 
விட்டேன் 
 
இதோ கடைசி நாணயம் 
உலகுடன் கடைசி 
பற்றென்று 
விட்டேன் 
 
இதோ கடைசி ஆடை 
உலகுடன் கடைசி 
வேடமென்று 
விட்டேன் 
 
இதோ கடைசி மூச்சு 
உலகுடன் கடைசி 
சொல்லென்று 
விட்டேன் 
 
இதோ கடைசிப் புத்தகம் 
உலகுடன்எஞ்ி 
அறிவென்று 
விட்டேன் 
 
ந்தினேன் பிட்சைக்கு 
பிச்சைக்காரனிடம்
கையில் கபாலமேந்திய
பிச்சைகாரனிடம்

..................

24

மலையை
குருவெனக்‌கொண்டு
அதன்
ஒற்றைச் சொல்
நீண்டு செல்லும்
தடத்தில் திரிகையில்
இருளைவீசும் ஒளிவாளும்
ஒளிவாளை வீசும் இருளும்
அந்தியை விழுங்கும் இரவும்
இரவை உண்ணும் புலரியும்
தவித்தலைந்து
மலைச்சொல்லின்
பெருவாள்வீச்சில்
எல்லாம் துண்டுபட்டு
அழிந்தொழிந்தபின்
அமைந்த போது
எஞ்சியது
இருளல்ல
ஒளியல்ல
பொழுதல்ல
காலமல்ல
நித்யமாய் வீற்றிருக்கும்
மலைத்துளி ஒன்று

........,..

25

நாடி கண்டுகொண்டேன்
ஸ்தூலங்களை
மீறிய
உண்மைகளை

சொற்களைக்
கடந்து நிற்கும்
அறிவை

மௌனத்தால்
நிறைந்திருக்கும்
இருப்பினை

உயிர்நிலத்திற்கப்பால்
எங்கோ செல்லும்
நதியை

.............

26

பசுகொண்டது
மந்திகள் கொண்டன
கிளி கொண்டது
பார்வையில் விழும்
மரமெல்லாம் கொண்டது
சன்னதிக்கூரையில்
முட்டைக்குள் உறங்கும்
பறவைக்குஞ்சு கொண்டது
சன்னதியின் மணமறிந்த
உயிரெலாம்‌ கொண்டது
இருகால் கொண்டலையும்
ஒன்பது வாயில்
கண்ணீர்ப்பிண்டம்
காத்துள்ளது
பிச்சைக்காக

..................

27

கடைசியில்
ஏந்தியிருந்த
பிட்சைப்பாத்திரத்தையும்
ஒழிந்தேன்
எஞ்சியது உடல்
ஏந்தியிருப்பது
மனம்

..................

28

உன்னைக் கண்டபின்
எல்லாம் ஒழிந்தேன்
என்னிடம்
பிச்சைக்கேந்துகிறாய்
கொடுக்க
உடலுண்டு
மும்மலமுண்டு
உயிருண்டு
மனமுண்டு
கொண்டபின்
விட்டுச்சென்றாய்
எஞ்சியதை

..................

29

கருவினுள்
சஞ்சலமில்லை

கருவினுள்
சந்தேகமில்லை

கருவினுள்
துக்கமேதுமில்லை

இருப்பது
உயிர்ப்பும்
இருப்பும்
மட்டும்
..................

30

செய்வதற்கொன்றுமில்லை
என ஆனபின்
உன் மலையை
அடைந்தேன்
வனமெது
மலையெது
மரமெது
வானெது
மண்ணெது
நீயெது
நானெது
என அறியமுடியாவண்ணம்
விற்றிருந்தது
உன் மலை

................

31

நோய்மையின்
திரளொன்று
ஆறென
ஒழுகிச் செல்கிறது
உன் மலை
நோக்கி
பிறழ்வுகள்
துறத்த
உய்யும் வழியறியா
உயிர்ப்பெருக்கு
மூம்மலம்
சுமந்தலையும்
முழுமையறியா
மூடர்க்கூட்டம்
அண்டத்தை
அடக்கிக்கொள்ளும்
கருவுக்குள்
இச்சிற்றுயிர்களும்
ஒடுங்கட்டும்

..................

32

யாசித்தவையெல்லாம்
வீணென்று
கண்டு
கையேந்துகிறேன்
பிச்சைக்காரனிடம்
ஈயும் கரங்கள் உன்னது
பிட்சைக்கேந்திய கரம்
என்னது
என்னையே பிட்சைப்பொருளாய்
ஈந்தாய்
இப்பேரண்டப் பிட்சைப்பாத்திரத்தில்

.........‌.

33

அந்தப் புலரியின்
நிறப் பிரளயத்தின்
முன்
உயிரற்று
நிற்கையில்
தூரத்துப் பறவைக்குரல்
விடுவித்தது
நிறத்தை சுழித்து
கலவையாக்கும்
கண்ணீர்த்துளிகளை

........

34

மாலையை
வழியனுப்ப வந்த
சிறுமியின்
கண்களில்
மிகச் சின்னதாய்
ஒரு சிறு‌உலகமும்
அதில் ஒரு துளியாய்
நீர்மையில் நிறம்கரையும்
புள்ளியென
சூரியனும்

............

35

கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்தது
அந்நாளின்
முதற்சொல்லை

பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை

பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக

அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது

.............

36

தத்வமஸி

பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்

கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்

காட்டில்‌ஒரு மலர்
காடே ஒரு மலர்

மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை

வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்

இச்சொல் அடுக்கில்

நான் எது
எது நான்

..............

37

கிளை பரப்பி 
இலை 
விரித்து 
கணமும் 
அசைவின்மையறுத்த 
பெருவிருட்சம் 
ஒன்றின் கீழ் 
அசைவின்றிக் 
கிடக்கிறது 
காற்று உண்ணும் 
பாறை 

...................................

38

அணுக்களுக்கு 
இடையே 
 
அண்டங்களுக்கு 
இடையே 
 
ஏதுமில்லாததொரு 
தூரம் 
 
தூரங்களுக்கு இடையே 
ஆங்காங்கே 
மற்றெல்லாம் 

.....................................

39

மிகை

இருப்பது 
ஒரு கோப்பை 
தாகம் 
 
அருளப்பட்டது 
ஒரு கோப்பை 
நீர் 
 
மற்றதெல்லாம் 

....................................

40

வானத்திற்கு 

ஒழுங்கேது 
வரையரையற்ற விரிவு 
நிறம் இன்னதென 
சொல்லமுடியாத 
தன்மை 
பெரும்கூரைமட்டுமா 
அடிநிலமுமா 
ஒரு பெரும் 
சதுரமா 
முக்கோனமா 
என்ன வடிவுக்குள் 
இத்தனை 
கிரகங்கள் 
அண்டங்கள் 
இந்த வரம்பற்ற வானத்தில்தான் 
அவ்வளவு ஒழுங்காய் 
ஒரு குருக்குவெட்டுக்கோடாக 
அமைத்துக்கொண்டு 
சிறகடிக்கிறது 
ஒரு புற்கூட்டம் 

..................................................................

41

விருட்சங்கள் 

மண் துளைத்து 
வேர் வளர்கிறது 
இலைகள் வெளி துளைத்து 
காலூன்றி நிற்கிறது 
 
கடல் பெரும் கூரையென 
அந்தரத்தில் 
தளும்பிநிற்கிறது 
 
மீன்கள் 
ஏரியின் ஆழத்திலா? 
வானின் விரிவிலா? 
வலசைப் பறவைகள் 
வானின் மேலா 
கடலின் கீழா 
 
பூமியை விரித்து 
கூரை ஓவியமென 
பதித்துவிட்டிருக்கிறார்கள் 
வானம் கால் எட்டா 
தூரத்தில் 
பெருநிலமென 
விரிந்துள்ளது 
 
மேகம் கிழித்து 
கீழ்நோக்கி விழுகிறது 
ஒரு தலைகீழ் உதயம் 

.....................................................................

42

காலம் 

தள்ளியிருக்கலாம் 
 
சிலரது 
சூழ்ச்சியாக்கூட இருக்கலாம் 
 
தனித்துவமான 
தனிமனிதனாகக்கூட 
நான் வந்தடைந்திருக்கலாம் 
 
தேனெடுத்து வருவதற்குள் 
காடு பற்றியெறிந்ததால் 
வழிதறிய 
பட்டாம்பூச்சியபைப்போலும் 
இருக்கலாம் 
 
இங்கு முட்டி 
அங்கு முட்டி 
நீர்வழிப்படூவும் புனைபோலிருக்கலாம் 
 
எல்லாம் வல்லது அலைக்க 
அலையும்நீர் போல் 
இருக்கலாம் 
 
ஆனால் 
ப்படியோ 
போதும் என்று 
அமர்ந்திருக்கிறேன் 
இக்கணமெனும் 
மாபெரும்‌‌ நிகழ்வில் 


....................................................

43


இம்மாபெரும் 

கூண்டுக்குள் 

சுற்றிச் 
சுற்றி 
பட்டுப்பூச்சியே 
இக்கணம்தான் 
என ப்படித்தேர்ந்து 
வந்தமர்ந்தாய் 
தூரிகை நுனியில் 
 
இறகு வழி 
ஒழுகி 
இக்கணங்களுள் 
இக்கணம்தான் 
என ப்படித்தேர்ந்து 
வந்துபரவியது 
உன் வண்ணம் 
நெஞ்சமெலாம் 

....................................................


44

கிணற்றுத்துலா 

துடிக்க துடிக்க 
எத்தனை அடிக் கயிறு 
இரக்கினேன் தெரியவில்லை 
இழுக்கத் தெம்பில்லாமல் 
கயிறுவிடவும் சக்தியின்றி 
விட்டேன் கயிற்றினை 
துலா கதறி சிலிர்த்தது 
கயறு தீர்ந்து நுனி 
சாட்டைச்சொடுக்குடன் 
கிணறுள் குதித்தது 
காதுகளை கூராகினேன் 
மிக மெல்லிதாய் கேட்டது 
வாலி சென்று தொட்ட 
பாதரசம் தட்டிப்போன 
ஆழ் உரையும் 
இன்மையின் பிலம் 


........................................


45


இம்மாஞாலத்தில் 

காலமென்பது 

எல்லாம் உள்ளடக்கி 
பெருகிக்கொண்டே இருக்கும் 
மகாநதி 
 
இம்மாஞாலத்தில் 
இக்கணமென்பது 
சில காரணங்களாலும் 
சில காரியங்களாலும் ஆன 
மெல்லிய நீரொழுக்கு 

 

...................................................


46


புன்சிரிப்பு

ஒரு அந்தியில்

அந்திக்கு
விடைகொடுப்பதைத்தவிர
செய்வதற்கொன்றுமில்லை
ஒரு இரவில்
இத்தனை இருளும்
வானத்தினதா நிலத்தினதா என
சிலாகிப்பதைக்காட்டிலும்
செய்வதற்கொன்றுமில்லை
இப்படியே
புலரி
பகல்
பொழுதுகள்
பொழுதுகள்.
தொடுவான் நோக்கி
சிறகடிக்கும் புள்
பொழுதினை காலத்தினுள்
காலத்தை அகாலங்களுக்குள்
இழுத்துச்செல்கிறது

..................................................

47

என்னை நான்

சொல்லில்

தஞ்சம்கொண்டுள்ளேன்
அதுதான்
என்னை உடைத்து
நெறுக்கி
செறிவாக்கி
தளர்த்தி
மேலும் கீழும் இழுத்து
இடம் வலம் அலைத்து

உலைத்துலைத்து

அடுக்கிக்கொள்கிறது
மெழுகால் ஆன
வீட்டைக் கட்டி
கையில் ஒரு கொல்லியைக்
கொடுக்கிறது
என்னை நான் எரித்துக்கொள்ள


,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆணை

 

சொல்

தீர்ந்துவிட்டது
சற்றுமுன் வரை
தாண்டமாடிற்று
உருகிற்று
உறுதிபூண்டது
நீர்மைசூடி ஓடி
காற்றென அலையெரிந்து
இசையை முயங்கி
வீர்யம்‌ கொண்டு
எல்லாம் இழந்து
வெறுமையைப் பாடிக்கொண்டு
துன்பங்களை வருடிக்கொண்டு
இன்பத்தின் நாளங்ளில்
பெருக்கெடுத்து
சற்றுமுன் வரை இருந்து
ஓய்ந்து எஞ்சியது
சொல்லற்று
சொல் செழித்த தடம்
பின் மெல்லிதாய்
மிக மெல்லியதாய்
எழுகிறது
நித்யத்தின் ஆணைப்படி
கருவினுள்  முதல் அசைவாய்


..........................................................



நிலவொளி இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது இலையசைந்தால் நிலவு அசையும் மாயம் நிகழ்கிறது இந்த இரவின் ஆன்மம் பறவைக்குரலில் ஏறி வந்த...