Friday, April 30, 2021

நாம் முத்தமிட்ட தருணங்கள்
களித்திருந்த காலங்கள்
ஊடி‌வெறுத்து சலித்து அலைந்து
பின்
முதற்துளி மழையென
நம்மில் நாம் பொழிந்த
பிரதேசங்கள்
கண்ணின் நீர்த்திரை
வழி மட்டும் காணக்
கிட்டும் ஓர் உலகம்
யாரும் காணா
தூரத்தில்
எத்தடமும் இன்றி
நம்மால் சிருஷ்டிக்கப்பட்டு
நம்மை சிருஷ்டித்து
நாம்
நாம்
நாம்
நாம்
எனும் ஓர் வெளி
அங்குதான் நிகழ்கிறது
மானுடம்‌ கனவெனக்
கண்ட அனைத்தும்
காற்று அலைக்கிறது
படகினை
பிணைத்திருக்கும்
முடிச்சுகள்
நெகிழ்வாலானவை
நெகிழ்வுகள்
கைவிடுகின்றன
பற்றிய அனைத்தையும்
நீர்த் தலும்பல்
மட்டும் ஒலிக்கிறது
எல்லா திசைகளிலும் 
இந்த சிறு காலம்தான்
இந்த சிறு காலம்தான்
மலர்கள்
நம்மிடம்
விடைபெற்றுச் சென்ற
இப்பருவம்
வரண்ட நிலத்தின்
வெப்ப மூச்சு
அனலாக அலையாடும்
இந்த சிறு காலம் மட்டும்தான்

ஒரு புலரியில்
விண்ணுளவும் புள்
காணும்
அங்கிங்கு நீர் பூப்பதை
மலர்கள் அலையாடுவதை
முத்தங்கள்
பதிந்த
ஆயிரம்‌வடுக்களை
வருடுகையில்
மெல்ல உதிக்கும்
மலரெனெ
மேலெழுகிறது
துளியாய் எஞ்சிவிட்ட
அன்பின் கனமொன்று

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

Thursday, April 29, 2021

அறியமுடியாமையும் அழகும்

 


இதுவரை திரைப்படமெனெ எடுக்கப்பட்ட அனைத்தும் "மானுட நாடகம்" எனும் வகைமைக்குள் அடங்கிவிடும் அல்லவா? காதல் துயரம், உறவுகளின் அழகு, முறிவு, அழகு, ஆணவம், அடைதல், வெற்றி, சரிவு, கருணை, அறம், வீரம், வீழ்ச்சி  மீண்டும் மீண்டும் மானுடமும் அதன் உணர்வுகளும். வெறும் மானுடம் எனும் ஒரு வார்த்தைக்குள் அனைத்தையும் அடக்குவதில் சிறு அநீதி இருப்பதாய் தோன்றினாலும்..... மானுடத்தின் அடிப்படைக் கேள்விகள் மானுடம் மீறிய ஒன்ற்னை நோக்கியதுதான் அல்லவா? காலம், ஒட்டுமொத்தமாய் மானுடம் எனும் உயிர்த்திரளின் நோக்கம், எல்லையற்ற  வானம் நம்முள் எழுப்புவது ஒரு கேள்வியையும் தான்.

Terrence Malickக்கின் படங்கள் மானுட நாடகத்திலிருந்து பிரபஞ்ச நாடகம் நோக்கி ஊசலாடுபவை. Tree of Life அப்படியான ஒரு படம். ஒரு மரணத்திலிருந்து எழும் "God Where are you?" எனும் கேள்வியிலிருந்து திரை ஒரு பெரும் மாயவெளியாய் பிரபஞ்ச்சத்தின் தோற்றம் நோக்கிச் செல்லும். பின் மெல்ல ஒரு பறவை தரையிரங்குவது போல மீண்டும் மானுட  நாடகத்திற்குள் வரும். ஆனால் இப்போது நாம் காண்பது வெறும் மானுட நாடகமாய் இருக்காது. பிரபஞ்சத்தின் பெருந்திரை பின்புலமென  அதற்கு அமைந்து விட்டிருக்கும். இந்த ஊசலாட்டம் எந்த ஒரு கலையின் உச்சபட்ச சாத்தியம் என்றே கருதுகிறேன்.

"Voyage of Time" - பெயரே கவித்துவமானது , காலம் பயணிக்கிறது. காலத்தின் பயணத்தினூடே சிறு குமிழிகள்தான் அல்லவா கலாச்சாரங்களும் ஒட்டு மொத்த மானுட நாடகமுமே. காலம் நிகழ்த்தும் அதிபிரம்மாண்டமான ஒரு நாடகத்திற்கும், பின் நாம் மானுடர்கள் மானுட மைய நோக்கினால் காண விரும்பும் கால நாடகத்தின் சிறு தெரிப்பான மானுட நாடகத்திற்கும் ஊசலாடுகிறது Voyage of time".

எண்ணற்ற இதுவரை நாம் கண்டிராத உயிர்கள், பல கலாச்சரங்களினூடாக எடுத்துக் கோர்க்கப்பட்ட துணுக்குகள், திகைக்கச் செய்யும் அழகுடன் இயற்கை, ஆதி மானுடர் கொண்டு சிறு மானுட நாடகம், இசை என ஒரு மாயமான நிகழ்வை விட்டுச் செல்கிறது Voyage of Time.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமானது, குறிப்பாக நிலம் சார்ந்த இயற்கைக் காட்சிகளும், விண்வெளிக் காட்சிகளும். பின்னணியில் வரும் பெண் குரல் சொல்கிறது ஒரு இடத்தில் "We know nothing". ஆம் ஏதுமறியவில்லை நாம் ஏதும் அறியப்போவதுமில்லை. ஆனால் இயற்கை நம்முடன் தொடர்புருத்தும் ஒரு மொழி உள்ளது - அழகு. இந்த பிரம்மாண்ட காட்சிகள் அறியமுடியாமையின் திகைப்பை விட்டுச்செல்லும் அதே கணம் அழகென நம்முன் எழுகிறது. தோன்றுகிறது, அர்த்தத்தை அறியமுடியாது, அழகை உணர்ந்துகொள்ளலாம். 

Voyage of Time அடிப்படையான கேள்வியை மையமிட்டுக்கொண்டு நம்முன் இயற்கையென விண் என விரிந்திருக்கும் பிரம்மாணடத்தின் முன் நாம் உணரும் அறியமுடியாமையை, அது கணமும் காட்டிச்செல்லும் அழகை பேசும் ஒரு Classic படைப்பு.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...