Sunday, December 10, 2017

அலைக்கழிக்கும் கேள்வி



தன் வாழ்வின் முக்கியமான தருணத்தை சொல்லச்சொன்னால் ஒவ்வொரு மனிதனும் விடையற்ற கேள்வியை எதிர்கொண்ட ஒரு தருணத்தைச் சொல்வான் எனப்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அனுபவத்தின் வழியாக நம்க்கான பதிலற்ற ஒரு கேள்வியை உருவாக்கிக்கொள்கிறோம். அக்கேள்வி நம்மில் உண்டாக்கும் அலைக்கழிப்பு நம்முடன் ஓயாத இருப்பாகிறது. ஒவ்வொரு மானுடனும் இக்கேள்வியை எதிர்கொள்ளும் விதம் வேரென்றாலும் இக்கேள்விகள் யாவும் ஒரு சொல்லில் குவிகிறது. விதி.. ஏன்? என்ற கேள்விக்கு விதி எனும் சொல் போதிய பதிலாக ஆகாததால் அல்லது விதி எனும் சொல்லை  போதிய அர்த்த கணத்துடன் நாம் உணராததால் நம்மை ஏன் எனும் கேள்வி தொடர்கிறது. இந்த விதிப் பெருக்கில் நாமும் நம் அகமும் கருவியாகி நம் கட்டுமீறிச் செல்வதை அறிகையில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஆணவமும் தவிடுபொடியாகிறது. நாம் மாறுகிறோம்....


நம் சிறு வாழ்வில் நாம் இக்கேள்வியை (கண் திறந்து பார்க்கும் திராணி உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில்) அடைகிறோம். நாம் நம் கேள்வியைக் கண்டு எழுப்பும் களமாகிய நம் வாழ்க்கை நதியென்றால், பாரதம் தன் கேள்விக்கு களமாகக் கொள்வது கடலை. பாரதம் போன்ற பெறும் படைப்பு அத்தனை கதாமாந்தர்களுடம் அவர்கள் அகங்களுடன் இந்த விதி என்னும் சொல்லை அர்த்த கணத்துடன் நம்மிடன் விட்டுச் செல்கிறது... ஏன்? என்ற கேள்வி யை யும் தான்.



இந்த ஏன்? எனும் கேள்வியில் துவங்கி காலத்தில் பின்சென்று ஒரு ஆய்வை நிகழ்த்துகிறது இனி நான் உறங்கட்டும் நாவல். மலையாள எழுத்தாளரான பி.கே.பாலகிருஷ்ணனால் 1970களில் எழுதப்பட்ட இந்நாவல் அவர் வாழ்நாளுக்கும் பொருளாதார ரீதியாக அவரை நிறைவாக வைத்திருந்தது.  பெரும்பாலும் வரலாறு குறித்த நூல்களும், இலக்கிய விமர்சனமும் எழுதிய பி.கே.பாலகிருஷ்ணனின் படைப்பிலக்கிய பங்களிப்பு இந்நாவல் மட்டுமே. ஒற்றை நாவலென்றாலும் இந்தியாவின் முக்கியமான நாவல்களின் வரிசையில் வைக்கத்தகுந்தது இந்நாவல்.



துரியோதனன் சாகக் கிடக்கிறான் குளக்கரையில். ஓநாய்களும் கழுகுகளும் புசிக்கக் காத்திருக்கின்றன அந்த மகராஜன் சாவதற்காக. இருட்டில் அஸ்வத்தாமன் வந்து சொல்கிறான், பாண்டவர் படைவீடுகளில் தீயிட்டதாக. திரௌபதி மைந்தர்களும் அவள் தமையனும் தீயில் இறந்தார்களென்று. துரியன் மனம் நிறைந்தவனாக இதோ நான் மகிழ்ச்சியாக சாகிறேன் எனக்கூறி மறிக்கிறான். க்ரோத்தில் துவங்குகிறது குருஷேத்ரம். ஏன்? என்ற கேள்விக்கு க்ரோதம் தன் கூர்ப்பல்காட்டி நகைக்கிறது. க்ரோதத்தின் ஜ்வாலை உள்ளிருந்து எரித்து விதிக்கு அவியாக்குகிறது வாழ்வை. இவ்விடத்தில் துவங்குகிறது நாவல். குருஷேத்ரம் தந்த பேரழிவையும் பெருந்துயரையும் அதூடே எழும் ஏனென்ற கேள்வியுடன் துவங்கிறது நாவல்.



குருச்ஷேத்ரம் இருண்மையை, கசப்பை, அதீத துக்கத்தை விதைத்துச் செல்கிறது. அழுகையின் கண்ணீரின் நடுவே ஏன் எனும் கேள்வி. நீத்தார்கடன் செலுத்துகையில் குந்தி கர்ணனுக்கும் நீத்தார்கடன் செலுத்தச் சொல்கிறாள் தர்மனிடம். நிலைகுலைகிறான் தர்மன். காடேகப்போவதாகச் சொல்கிறான்... வென்று வந்த பாதை உண்மையின் கோர ஒளியில் சகிக்கவொண்ணாததாக ஆகிறது. அவன் ஆழத்திலிருந்து எழுகிறது அக்கேள்வி... ஏன்?



உபநிடதம், கீதை, கன்பூஸியஸின் லுன் யூ எனும் நூல் போன்றவை கேள்வி பதில்களாகவே அமைந்துள்ளன.‌ கேள்விகளும் பதில்களுமான வடிவமே பதில்களற்ற கேள்விக்கு விடை காண ஏதானவை. மேல் சொன்னவை தத்துவ நூல்கள் என்பதால் நாவலின் கலைத்தன்மை மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம். உணர்வெழுச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் தருணங்கள் நாவலில் உண்டு. தர்மனும் திரௌபதியும் எழுப்பிக்கொள்ளும் கேள்விகள் வழி பயணிக்கிறது நாவல்.



தர்மன் நாரதரிடம் தன் வேதனை மிக்க மனதை காட்டி தொடர்ந்து ஏன் இதெல்லாம் எனும் கேள்வியை முன் வைக்கிறான். பின்பொரு நெரத்தில், திரௌபது கிருஷ்ணனிடம் கேட்கிறாள் இதெல்லாம் ஏன் என. அவர்களது பதில் பதிலற்ற கேள்வியின் பதிலற்ற தன்மையை விளக்குவதாக, அந்த பதில்லற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையுமாறும் கூறுவதாக அமைகிறது. ஆயினும் நிகழ்வுகள் சுழட்டிவிடும் மனதின் கோர சுழற்சி மீண்டும் மீண்டும் 'ஏன்' எனும் கேள்விக்கே தள்ளுகிறது.



இப்படியாக கேள்விகளும் பதில்களும், எண்ண ஓட்டங்களுமாக நாவல் நவீன இலக்கியம் ஓயாது சென்று தொடும் வெறுமையைத் தொடுகிறது...



"நிகழ்ந்து முடிவுற்ற விபத்துக்களின் அடிப்படையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது , கேவலம் - நைந்து, இற்றுப்போன ஒரு சுயாபிமான பிரச்சனை மட்டுமே என்ற உண்மை நிதர்சனமாகிறது! அது குரு வம்சத்தை ஷத்ரிய குலத்தை முழுவதுமாக வினாசப் பாதையில் தள்ளியே விட்டுவிட்டது! காப்பாற்றப்பட்ட அந்த தன்மானம் என்னவாயிற்றென்றால், ஆரவாரத்துடன் மண்தரையில் விழுந்து உடைந்து போயிற்று! அதன் நச்சுச் சிதறல்கள் உயிரோடிருக்கும் அனைத்து இதயங்களிலும் தறைத்து உள்வாங்கி சீழ் கட்டி நிற்கிறது. ஆம், துர்க்கந்தம் மிக்க சீழ்."


இதோ நாவல் அந்த வெறுமையை வெரித்து நிற்கிறது. இருத்தலியம் காட்டும் வெறுமை. அதீத கசப்பை, அறியாமையின் பலவீனத்தை, மனிதனை சிறுகச் செய்து அர்த்தமற்ற சதைப்பிண்டமாக ஆக்குகிறது நாவல். 



திரௌபதியும், அவளும் பாண்டவர்களும் ஜன்ம சத்ருவாகக் கருதும் கர்ணனும்தான் மையப் பாத்திரங்கள். கிருஷ்ணன் கர்ணனை பாண்டவர் பக்கம் சேறுமாறு கூறுகையில் 'கீரீடம் தரித்து திரௌபதி பட்டமகிஷியாகக் கொண்டு கர்ணனே நீ ஆட்சி செய்வாய்' எனக் கூறுகிறான். இதனைக் கேட்கும் அவள் மனம் உலைகிறது. தன்னை வேசியென அழைத்து துகிலுரிக்கப்படுகையில் கைகொட்டி நகைத்த அவன் மேல் தான் கொண்ட பகைமை உணர்வின் மதிப்பு , புலனாகாத விதியின் முன் என்ன ஆயிற்று? கர்ணன் இட்ட உயிர்ப்பிச்சையே தன் கணவர்களின் உயிர்களென அறியும் போது அவள் மேலும் உலைகிறாள். விதியின் பகடைக்காயான குந்தியைக் காண்கிறாள். உண்மையை பல்லாண்டு சுமந்து அவள் அடைந்ததென்ன என பேதலிக்கிறாள் திரௌபதி. தர்மன் சகோதரனைக் கொன்ற பழியில் காடேக நிற்க, பெற்ற குழந்தைகளை இழந்து நிற்கும் திரௌபதிக்கு மொத்த குருஷேத்ரமும், அவள் மொத்த வாழ்வும் ஓர் அபத்தமான நிகழ்வாகப் படுகிறது. 



மொத்ததில் நாவல் ஒரு பெருந்தோல்வியைக் காண்பிக்கிறது. குருஷேத்ரத்தை தடுக்க இயலாத தன் வாழ்க்கை ஒரு படுதோல்வி என்கிறார். கர்ணன் திரௌபதி துகிலுரியக் கண்டு நகைக்கையில் தோற்கிறான். தர்மன் பதிமூன்று வருடங்களாக யாரைக் கொல்ல யாரைக் கண்டு அஞ்சினானோ அவன் தன் தமையன் என அறிந்த்ப்போது அவன் வாழ்க்கையும் தோல்வியுறுகிறது. குருஷேத்ரம் எனும் பெருந்தோல்வி    விட்டுச்செல்லும் வெறுமை நாவல் முழுவதும் கிடக்கிறது.



நாவலின் மற்றுமொரு சிறப்பு அதன் சித்தரிப்பு. நாகங்களால் பிணைக்கப்பட்டு விண்னை நோக்கி கைநீட்டி நிற்கும் சாத்தான்களாக மரங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இரத்தம் நிரம்பக் கிடக்கும் குருஷேத்ரபூமியில் கிடக்கும் யானையின் மரண ஓலங்கள், புரண்டவாரு உறங்கும் கங்கை, அதன் மேல் மானுடனைக் கண்டு கண்சிமிட்டி நகைக்கும் வானம் என நாவல் நம்மை இட்டுச்செல்லும் சோர்வு மன நிலை யின், விதியின் கோர முகத்தின் குறியீடாக அமைகின்றன சித்தரிப்புகள். 



ஆ.மாதவனின் மொழிப்யர்ப்பு பற்றி நிறைவின்மையை மற்ற வாசகர்கள்‌ வெளிப்படுத்தக் கேட்டதுண்டு. வாசிக்கும்போது அதையே நானும் உணர்கிறேன். சுத்தமாக அர்த்தமாகாத வரிகள் அங்கங்கு வருகின்றன. ததுவார்த்தாமன பல இடங்களில் மோழிபெயர்ப்பு தோல்வியுறுகிறது. சித்தரிப்புகளில் ரொம்பவும். மூல நூலைப்பற்றி அதன் ஓட்டம் பற்றி நண்பர்கள் கூறக் கேட்டதால் கூறுகிறேன் இதனை. ஆனால் இவ்வளவு இடறல் மீறியும் நாவல் ஒரு பெரும் படைப்பாக என்முன் நிற்கிறது. 



அன்பு, க்ரோதம், தர்மம், அதர்மம் என பலவாறாக விதி சூல் கொள்ளுகிறது. விதியை அதன் முழு அகோரத்துடன் காண நேரும் திரௌபதி குலைந்து சருகுகள் நிறைந்த காய்ந்த நிலமாகிறாள். இத்தனை நிகழ்வுகளின் காரணத்தை ஆய்கையில் அது ஒரு சுயாபிமானப் பிரச்சனையாகவே தோன்றுகிறது அவளுக்கு. அவளது கடைசி வரிகளாக வெளிவருவது "யுதிஷ்ட்ரா இனி நான் உறங்கப்போகிறேன்....இனி நான் உறங்கட்டும்". மரணத்தோடு மட்டும்தான் 'நான்' உறங்கச்செல்கிறது. 

Sunday, September 10, 2017

போய்க்கொண்டிருப்பவள் (நாவல் விமர்சனம்)

A NOVEL BY KHALED HOSSEINI

நான் வாசிக்கும் கலீத் ஹுஸெய்னியின் முதல் படைப்பு இது. ஒரு தேர்ந்த கதைசொல்லியை காண்கிறேன். உணர்வுகளை வாசகர்களுக்கு கடத்தும் வித்தை முழுவதும் கூடப்பெற்றுள்ளது எழுத்தில். உணர்ச்சி நாடகம் என்று இந்நாவலைச் சொல்லலாம். சமூகத்தின் விதிகள், அதனால் இயக்கப்படும் மனிதர்கள், அதனால் வரும் தடைகள், அதனுடனான தனிமனித சுதந்திரத்திற்கான போராட்டம், பிழையான கட்டமைப்பை உடைத்து மீறி வெளிப்படும் அன்பு இப்படியாக நீள்கீறது நாவல்.

இரண்டு பெண்களின் வாழ்க்கைதான் இந்நாவல். இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் அடையும் துன்பங்களின் வழி புலனாவது ஒரு பாழடைந்த சமூக அமைப்பும் அதன் விதிகளுமே. வசதிபடைத்த ஜலீலிக்கும் அவர் விட்டின் பணிப்பெண்ணுக்கும் பிறக்கிறாள் மரியம். ஹராமி (பாஸ்டர்ட்) என்று முத்திரை குத்தப்படுகிறது. ஒரு குழந்தையின் மீது சுமத்தப்படும் கண்மூடித்தனமான சமூக வன்முறையில் துவங்குகிறது, கடைசியில் அவள் முடிவு வரை சமூகமும் அதன் விதிகளும் அதனால் உருவாகும் ஏற்கப்பட்ட வன்முறையுமே அவள் வாழ்க்கையும் நாவலின் மையமும். இதே சமூக விதிகளால், போர்ச்சூழலின் அவலத்தால் தவிக்கும் மற்றொரு பெண் லாய்லா. மரியத்தின் லாய்லாவின் வாழ்க்கை சந்திப்பதும் சென்றடையும் இடமும் திடீர் திருப்பங்களுடன் கூறப்படுகிறது. 

சமூகவிதிகள் இரு பெண்களின் வாழ்வை அவலமாக்குவதன் சித்திரம் நாவலின் ஒரு சரடு. மற்றொரு சரடு போர். ஒரு பழமைவாத விதிகளால் இயக்கப்படும் சமூகம் போரினால் துன்புறுவது இயல்பே. வீட்டிற்குள் மனைவிமேல் அவிழ்க்கப்படும் கட்டற்ற வன்முறையை ஏற்கும் சமூகம் கையில் துப்பாக்கியுடன் யாருக்கும் எதையும் செய்யும் மனிதக்கூட்டத்தையே உருவாக்கும்.  மரியம் பிறக்கும் போது தாவுத் கானின் மன்னராட்சி, மரியத்திற்கு மணமாகும் போது தாவுத்கானின் உறவினன் ஆட்சியை கைப்பற்றுகிறான். லாய்லா பிறக்கும் போது கம்யூனிஸ ஆட்சி. பின் "வார்லார்ட்ஸ்"  (WARLORDS) இடையிலான மோதல். டாலிபானின் வருகை. இப்படியாக அரசியல் சூழல் ஒரு பின்னணியாக (வெறும் செய்திகளாக) அமைகிறது. சரி, போர்... இதன் பங்கு நாவலில் என்ன? உயிரிழப்புகள் அதனால் வரும் சோகம், அவ்வளவே. ஆக போரினை நாவலின் தனிச் சரடாக கொள்ள இயலவில்லை. நாவலின் திடீர்த் திருப்ப உத்தி என்றளவில் நிற்கிறது. போர் பற்றிய தர்க்க ரீதியான ஆராய்ச்சியோ அது சென்றடைய வேண்டிய பதில்களற்ற கவித்துவ உச்சமோ நாவலில் இல்லை. வெறும் உணர்ச்சி மோத்லகள், தவிப்புகள் என நின்றுவிடுகிறது நாவல். ஒரு பழமைவாத சமூகம் (குறிப்பாக தாலிபான் ஆட்சியின் கீழ்) பெண்களுக்கு இழைக்கும் அநீதியை, அடிப்படை உரிமைகளைக் கூட பரிக்கும் விதத்தை நாவல் வெற்றிகரமாக பதிவு செய்கிறது. (டாலிபான் ஆட்சியின் கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி மருத்துவமனை. ஒட்டு மொத்த காபூலுக்கும் ஒரே பெண்கள் மருத்துவமனைதான். சந்தக்கடையாக கிடக்கும் அங்க்கு அனஸ்தட்டிக் இல்லாமல் லாய்லாவுக்கு ஸிஸேரியன் நடக்கும் இடம் பெரும் அதிர்வை அளிக்கிறது). 

ஆக போர்ச்சூழல் ஓரளவிற்கும், பாழ்பட்ட சமூக விதிகள் முழுமைக்கும் இரு பெண்களின் வாழ்வினை பாதித்து அதன் வழி பிறக்கும் துன்பியல் நாடகமே இந்நாவல் எனத் தொகுக்கலாம்.

வடிவ அளவில் வழக்காமான நேர்க்கோட்டு உத்தியைக் கையாண்டுள்ளது. எளிமையான சிக்கலற்ற நடை பெரும் பலம். அங்கங்கு வரும், 'ஆணின் குற்றம்சாட்டும் விரல்கள் , வடக்கையே காட்டும் திசைமானியைப் போல பெண்ணையே சுட்டுகிறது'  போன்ற வரிகள், உணர்ச்சிகரமான இடங்களில் கதாபாத்திரங்களின் நுண்சித்தரிப்பு, "மரியம் தன் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் முதல் முடிவினை எடுத்தாள்" போன்ற நாவல் வெளிப்படுத்த விரும்புவதை மேலும் கூராக்கும் வரிகள் ஆகியவை வாசிப்பை சுவாரஸ்யமாக்குக்கிறது. நாஸ்டால்ஜிக் கனங்களை வெற்றிகரமாக உருவாக்குகிறார் ஹுசெய்னி.  உணர்ச்சி நாடகத்தை மீறி கவித்துவக் கணங்களுக்கு நாவலில் அவ்வளவு சாத்தியமிருந்தும், ஓரிரு இடங்களைத் தவிர் வெளிப்படவில்லை.

"எண்ண இயலாது
அவள் கூரைகளின் ஆயிரம் மெல்லொளி கூடிய நிலவுகளை
மேலும் அவள் சுவர்களில் ஒளிந்திருக்கும்
சூரியன்களை
ஆயிரம் அற்புதச் சூரியன்களை"
இவ்வரிகள் காபுல் நகரத்தைப் பற்றியதாக இடம் பெறுகிறது. ஒரு நகரத்தின் கதை என்பது அவ்வளவு எளிமையானதா? அதன் கதை அதன் எண்ணற்ற மனிதர்களின், உணர்வுகளின், மரணங்களின், மரங்களின், மிருகங்களின், காற்றின் , மண்ணின் இன்னும் எண்ணற்றவற்றின் கதையல்லவா? அதை எண்ணிவிட முடியுமா என்ன? இதுவும் பின் ஆயிரம் சூரியன்கள் மரியத்திற்குள் ஒளிர்வதாக சொல்லும் இடமும் நான் ரசித்த கவித்துவ இடங்கள். பெண்ணுக்குள் இருக்கும் ஆயிரம் சூரியன் எனும்போது கண்ணகியையும் திரௌபதியையும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

என் அப்பா ஒரு சீனப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண் அழும் காட்சி. "சச... எந்நாட்டுக்காரனா இருந்தா என்னடா தம்பி அழுகையும் சோகமும் ஒன்னுதான?" என்றார். வெறு நாடு வேறு மனிதர்கள் எனும் ஆர்வத்தில் நாவலை எடுத்தேன். ஆனால் அங்கு கண்டது என் வாழ்வில் நானறிந்த சில பெண்களை. அங்கிருக்கும் அளவு மோசமல்ல ஆனால் சமூகத்தின் அழுத்தம் என்றளவில் அங்கும் இங்கும் இருப்பது உரிமை மீரல்தான். என் சமூகத்தின்   பாழடைந்த போக்குகள் அங்கு மேலும் பூதாகராமாய் நிற்கிறது. ஆனால் இவ்வளவு நெருக்கடிகள், கணவன் மட்டுமல்ல அரசும் ஒட்டுமொத்த சமூகமும் நசுக்கும் போது மரியம் ஜோவும், லாய்லா ஜோவும் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.  என் விமர்சனங்களைக் கடந்து ஒரு லகுவான வாசிப்புக்கு உரிய துன்பியல் நாடகம் "A THOUSAND SPLENDID SUNS".


Saturday, August 12, 2017

எளிமைப்படுத்துதலின் சாபம் (பேகம் ஜான்)

வரலாறும் கலையும் சந்திக்கும் கணம் தனித்துவமானது. உண்மையும் , கற்பனை தரும் தரிசனமும் அதில் வெளிப்படுகையில் அழியாததாக அக்கணம் நீடித்துவிடுகிறது. நம் சினிமா நம் வரலாற்றை லேசாக ஒரு பார்வை பார்த்துள்ளது என்பது மீறி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹே ராம் தவிர நானறிந்தவரையில் வேறெந்த படமும் குறிப்பிட்டு சொல்லும் தகுதியற்றவை.



"பேகம் ஜான்" இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் அமைக்கப்படவும் வெகு ஆர்வமாக பார்க்கத் துவங்கினேன். வெறும் பின்னணி மட்டும்தான். பிரிவினையின் கோர முகமேதும் தலைகாட்டவில்லை. புகைப்படத்தில் சம்மந்தமில்லாத ஒருவர் பதிவாகியிருப்பது போல் வரலாறு பாட்டுக்கு ஓரமாய் நிற்கிறது பேகம் ஜான் படத்தில்.

ஆம் நிறையும் குறையும் உள்ளன. சொல்லிவிடுகிறேன். ஸர் ஸிரில் ராட்க்லிப் இந்தியா பாகிஸ்தானை பிரிக்கிறார். இந்தக் கூத்து பற்றி "இந்தியா ஆப்டர் காந்தியில்" விரிவாக பதிவாகியுள்ளது. இந்திய பாக்கிஸ்தான் எல்லை ஒரு வீட்டை ரெண்டு பாகமாக பிரிப்பது பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுபோல் படத்தில் எல்லைக்கோடு ஒரு வேசை விடுதியை இரண்டாகப் பிரித்துப் போகிறது. அரசு அதிகாரிகள் வேசை விடுதியை நடத்தும் பேகம் ஜானிடம் தெரிவிக்கிறார்கள். பேகம் ஜான் மறுக்கிறாள். ஒரு லோக்கல் ரௌடியை அணுகுகிறார்கள் அதிகாரிகள். பேகம் ஜானும், மற்ற பெண்களும் சண்டையிடுகிறார்கள். பின், முடிவு.

அற்புதமான சில கணங்களை கடந்து செல்கிறது படம். ஆனால் இந்திய சினிமாவின் அடிப்படைத் தேவையாக நிலைப்பெற்றுவிட்ட எளிமைப்படுத்துதல் மற்றும் மிகைப் படுத்துதல் அக்கணங்களை கெடுக்கின்றன. உதாரணமாக பிரசித்தி பெற்ற  நேருவின் "long before we made a tryst with destiny..." எனத் தொடங்கும் சுதந்திர உரை ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. சுற்றி அமர்ந்து பேகம் ஜான் விடுதியின் பெண்கள் அதை ஒன்றும் புரியாமல் கேட்கிறார்கள். சாதாரண மக்கள் வரலாற்றின் ஒழுக்கில், அவ்வொழுக்கினைப் பற்றிய எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அமர்ந்துள்ளார்கள். அழகாகத் தெரிகிறது அக்காட்சியில். இதுவே போதுமானது.  ஆனால், தொடர்ந்து பேகம் ஜான் பெண்ணுக்கும் சுதந்திரம் கிட்டாதது பற்றி பேசுகிறாள். என் வரையில் அனாவசியம். கலை ஓவராக பேசக்கூடாது. அதிலும் பிரசங்கம் கூடவே கூடாது. இரண்டும் நிகழ்கிறது படத்தில்.

மற்றொரு இடம். பேகம் ஜானும் மற்ற பெண்களும் துப்பாக்கி பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ரௌடிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். விடுதியிலேயே பிறந்து வளரும் ஒரு சிறுமியையும் , அவள் தாயையும் தப்பிக்கச் செய்கிறார்கள். அச்சிறுமியும் தாயையும் போலீஸ் வலைத்துக் கொள்கிறது. அதிகாரமும் காமமும் இன்ஸ்பெக்ட்டரை தன் பேண்ட்டை கழட்டச்ச் செய்கிறது. மனதின் இருள் வியாபிக்கும் கணத்தில் அச்சிறுமி தன் ஆடையைக் கலைகிறாள்‌. இன்ஸ்பெக்ட்டர் அலறிக் கெஞ்சுகிறான் அணிந்து கொள்ளும்படி. 18 வது அட்சக்கோடு நாவலின் முடிவும்  (புறவடிவில் மட்டும்) இது போன்றதோர் காட்சியே.  ஆனால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்! வெகு ஜனம் எனும் இலக்கில் சிக்கி நிற்கும் சினிமாவுக்கும், சமரசமற்ற கண்டடைதலை இலக்காக்கும் இலக்கியத்திற்குமான வித்தியாசம்தான்...வேறென்ன!

படத்தின் கடைசி காட்சி நெகிழ்ச்சியானது. கவித்துவமானதும் கூட.  காட்சியை இங்கு சித்தரிப்பதாயில்லை. என் கவித்துவத்தை கட்டுக்குள் வைக்கிறேன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

நடிப்பு, ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. நம்பகத்தன்மையையும், இயல்பையும் சேர்க்கிறது படத்திற்கு. ஆனால் முரணாக , தேவையில்லாத மிகைப்படுத்துதல் கதையில் உள்ளது. சண்டைக்கு துப்பாக்கிப் பயிற்சி எடுப்பது, துப்பாக்கிச் சண்டை, வழக்கமான வில்லனாக ஒரு டீச்சர் கதாபாத்திரம்‌, பெண்ணின் நிலை பற்றிய இயல்பற்ற வசனங்கள் என சறுக்கல்கள் பல. ஆனாலும், பிரிவினையைப் பின்புலமாகக் கொண்டது, அவ்வேசை இல்லத்தைச் சுற்றி இந்துக்களும் முஸ்லீம்களும் இடம் மாறும் காட்சி, ஒளிப்பதிவு என  கவனிக்கப்பட வேண்டிய படமாக மட்டும் நிற்கிறது பேகம் ஜான். அழகிய மலராகும் சாத்தியமிருந்தும் செடி நீங்கி மண்ணில் கிடக்கும் மொட்டாக பேகம் ஜான்.

Monday, July 24, 2017

உயிர்ப்பிலிருந்து உயிர்ப்பின்மைக்கு (சூல் வாசிப்பனுபவம்)


வழக்கத்திலிருந்து மாறுபடுபவை தனியாகத் தெரிகின்றன. என் வாசிப்பில் நான் முதலில் கண்ட புதுமை ஜே ஜே சில குறிப்புகள். பின் ஸீரோ டிகிரி. இவையிரண்டும் முக்கியமாக வடிவ அளவில் ஒரு சிதறலான கதை கூறல் முறையால் மாறுபட்டவை. அடுத்து  கொற்றவை, விஷ்ணுபுரம், ஆழி சூல் உலகு, கொற்கை - இவற்றில் உள்ள மாறுபட்ட அம்சம் அதன் உள்ளடக்கம். ஒரு பெறும் கால, இடப் பரப்பை நம்முள் விரித்துச் செல்கிறது இப்படைப்புகள். ஒரு மையக் கதாப்பாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள், அதன் உளவியல் என நின்றுவிடாமல், ஒரு சமூகம் சார்ந்த ஒட்டு மொத்த வரைபடத்தை அளிப்பவை. சொல்லி வைத்தாற்போல் எல்லாம் 700 பக்கங்கள் தாண்டுபவை. எப்படியும் ஒரு வாரகாலமாகும் வாசிக்க. இந்த ஒரு வார காலத்திற்குள் கனவுலகை உருவாக்கி அதனுள் நம்மை சஞ்சரிக்கச் செய்துவிடும். இந்த வரிசையில் சோ.தர்மனின் சூல் நாவலைச் சேர்க்கலாம்.

நாவலை வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆழி சூல் உலகின் ஆமந்துறை நினைவுக்கு வந்தது. அதன் மக்களின் வழி ஆமந்துறை மெல்ல ஒரு தனி மாபெரும் கதாப்பாத்திரமாவதை உணரலாம். அப்படியே உருளைக்குடியும். மெல்ல மெல்ல நம்முள் சூல் கொண்டு உயிர்த்தெழுகிறது உருளைக்குடி.

ஒரு கண்மாயை உள்ளடக்கிய கிராமம் உருளைக்குடி. கண்மாய் பறவைகளையும் மனிதர்களையும் உருப்புக்களாய்க் கொண்ட  ஒரு மாபெரும் உயிராக நம்முள் விரிகிறது. கோடையில் வரண்ட கண்மாயும், மழையில் நிரம்பி வழியும் கண்மாயும்,  மடைக் குடும்பனும், நீர்ப்பாய்ச்சியும்,  கண்மாய் சூல் கொண்டு பிரசவிக்கும் நெல்லுமென ஒரு பேரியக்கம் சித்தரிக்கப்படுகிறது.... இயற்கையின் இயங்கு முறை பற்றிய ஆச்சர்யத்தை விதைக்கிறது நம்முள். நாவலில் இடைவிடாது மனிதருக்கும் இயற்கைக்குமான இயைபு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்மாயைப் பற்றிப் பேசும் தோறும் இயல்பான நடை மாறி கவித்துவம் நுழைகிறது. வார்த்தைக்குள் அடங்காத ஒன்றை, பிரம்மாண்டத்தை வேறு எப்படி சொல்வது!

இந்த பிரம்மாண்டத்திற்கு நேரெதிராக மிக எளிமையானவர்கள் உருளைக்குடியின் மக்கள். பிச்சையாசாரி,எலியன்,கோனக்கண்ணன்,சப்பான்,மூக்கன்,மொன்னையன்,கொப்புளாயி, மடைக்குடும்பன், நீர்ப்பாய்ச்சி, குப்பாண்டி... இப்படி வெகுளியும், எளிமையும், அலட்டலுமில்லாத கதாப்பாத்திரங்களால் ஆனது உருளைக்குடி.  விண்ணையும் மண்ணையும் விதையையும் ஒன்றாக்கி உயிர் விளைவிக்கும் மக்கள் செய்யும் தொழிலே விளையாட்டாக உள்ளது. வெறுப்பு சலிப்பில்லாத இன்பம் காண்கிறார்கள் தொழிலில். லாடம் கட்டும் ஆசாரி, சக்கிலியர்கள், இரும்பு  கொல்லன், விவசாயம் செய்யும் சம்சாரிகள் என ஒரு கிராமத்தின் இயங்கு முறையை லகுவாக, ஆவணப்படுத்துவதற்கான எந்தவித தடையமும் இன்றி நமக்கு காட்டிச் செல்கிறது நாவல்

வெகு சில கதாபாத்திரங்களே பெரும்பான்மை நாவலுக்கு நீள்கின்றன. ஒரு அத்யாயத்திற்குள் முடிந்துவிடும் பாத்திரங்கள் பல. இந்த எளிமையான மக்களின் வழி மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவது  அடிப்படையான அறம். சிறு வயதில் இயற்கையிடம் அமைப்பெற்ற பாவங்களை தண்டிப்பதற்கான சக்தியின் மீது அசையாத நம்பிக்கைக் கொண்டிருந்தேன். பின்நாட்களில் அனுபவம் நம்பிக்கையை சிதைத்தது. நாவல் இந்த இயற்கையின் அறம் சார் இயங்குமுறை மீது மீண்டும் நம்பிக்கையை கொணர்கிறது. படப்பு அடுக்குவதில் வந்த பங்காளிப் பகையால் சித்தாண்டி இரவோடு இரவாக, வன்மம் கண்மறைக்க கண்மாயை உடைத்து ஒட்டு மொத்த கிராமத்தின் வயலையும் நாசம் செய்கிறான். இது அறிந்து நிறைமாத மனைவி பிரிகிறாள். கண்மாயின் வாயை திறந்த பாவத்தினால், பிறக்கும் குழந்தை ஊமையாகப் பிறக்கிறது. பின்நாளில் கணவனும் மனைவியும் ஊர்முழுதும் மரம் நட்டு பரிகாரம் தேடுகிறார்கள். பன்னிமாடன், ஏற்பட்ட அவமானத்தால் புலமாடனின் மகனை கட்டுவரியன் தீண்டும்படி சதி செய்கிறான். அவனுக்குப் பிறக்கும் பிள்ளை கட்டுவிரியன் தோலோடு பிறக்கிறது. கீழூரைச் சேர்ந்த பயனா ரெட்டியார் போரில் குண்டடி பட்டு செத்ததுக்கும், அவர் வெள்ளாமையை மேய்ந்த ஆட்டுக் குட்டியை சுட்டதும் இணைக்கப்படுகிறது. இந்த அறத்தின் இயங்கு முறை எவ்வளவு அழகானது. எவ்வளவு வசதியானது!

ஒரு பக்கம் பாவம் செய்து பரிகாரம் தேடுவோர். மறுபக்கம் சிலர் வாழ்க்கை அறத்தால் அர்த்தப்படுகிறது. கொப்புளாயி மலடி. எறுமைகளை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறாள். அவள் வீட்டில் எப்போது சென்றாலும் பாலும், தயிரும் கிடைக்கும். அம்மன் கோயிலுக்கு உருளைக்குடி வழி செல்லும் மக்கள் இளைப்பாற ஒரு நந்தவனத்தையே உருவாக்குகிறாள் கொப்புளாயி.  பட்னம் சென்று வந்த காட்டுப்பூச்சி கொப்புளாயியிடம் அவளை பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கிய விஷயத்தை சொல்கிறான். பட்னத்தில் காசுக்கு சோறு போடுகிறார்கள் என்பதே அது. (கதை 18ஆம் நூற்றாண்டு வாக்கில் நடக்கிறது. உருளைக்குடியில் வெறும் பண்டமாற்றுதான்).மீண்டும் மீண்டும் உண்மையா எனக் கேட்கிறாள். வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி மாஞ்சு போகிறாள். பூமிலேந்து கெடைக்கிற சோத்த காசுக்கு கொடுக்குறது எம்புட்டு
பாவம் என்பது அவள் வாதம். அடுத்து, 'மடைக்குடும்பன் கருப்பன்' ஊர் கண்மாய் அடைத்துக் கொள்ள, ஊர் இவனை தூற்ற, மூச்சடக்கி அடைப்பெடுத்து உயிரைவிடுகிறான். பின் அய்யானார் அருகிலேயே கருப்பன் சிலையாகிறான். இப்படி தன்  அறத்தின் வழி வாழ்வை அர்த்தமாக்கிக்கொள்ளுதல்  ஒரு பக்கம் காட்சியாகிறது.

நாவலிம் பெரும்பான்மை ஒரு இகாலிட்டேரியன் சமூகமாக உருளைக்குடி நம்முன் நிற்கிறது. பணப்புழக்கம் இல்லை. பண்டமாற்றுதான். அனைவரும் உழைக்கிறார்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். தன்னிறைவான கிராமம். தனக்கு தேவையான அவ்வளவும் கை எட்டும் தூரத்தில். தனக்கன முடிவுகள் அறிவியலாலும் அதிகாரிகளாலும் எடுக்கபடவில்லை. மாறாக காலம் காலமாக ஊரிவிட்ட
சம்பிரதாயங்களால் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முடிவிலும் காலமும் அதனூடே வாழ்ந்த முன்னோரின் அறிவும் கணிந்துள்ளது. மன்னரின் அதிகாரம் காலகாலமா உருளைக்குடி தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட சமநிலையை குலைப்பதாக இல்லை.  இந்த சமநிலையிலிருந்து சுதந்திரம் வந்த பின்பான சமநிலைக் குலைவே நாவல் நமக்கு காட்டுவிப்பது. சுந்தந்திரத்துக்குப் பின் வரும் ஆட்சிமுறையும் அதிகாரமும் சமநிலையைக் குலைக்கிறது. கண்ணுக்கு தெரியாத அதிகார மையம், எந்தவித அறமும் இல்லாத அம்மையத்தின் கரங்களாக அதிகாரிகள். தொழிலோடு வாழ்வோடு பிணைந்து உள்ள நம்பிக்கைகளிலிருந்து  இவர்கள் தப்பிக்க  பகுத்தறிவு உதவுகிறது. பரம்பரை நீர்ப்பாய்ச்சியிடமிருந்து கண்மாயை காக்கும் உரிமை பரிக்கப்படுகிறது. கோழிப்பண்ணை அமைக்க மரங்கள் வெட்டப்படுகிறது. தாத்தா வைத்த மரத்தை பேரன் வெட்டிச் சாய்க்கிறான். நாவல் முழுவதும் செழுமையின் வளமையின் உயிர்ப்பின் குறியீடாக வரும் கண்மாய் வற்றிப் போகிறது. வெள்ளாமைக் குறைகிறது. வண்டி வண்டியாக இளைஞர்கள் நகர் நோக்கி செல்கிறார்கள்.மக்கள் முதன்முறையாக கூலிக்கு கருவேலம் வெட்டுகிறார்கள். உயிர்ப்பில்லாமலாகிறது உருளைக்குடி. உயிர்ப்பிலிருந்து உயிர்ப்பின்மைக்கு காலத்தினூடே ஒரு பயணத்தை நிகழ்த்துகிறது சூல்.

நாவலின் மற்றொரு முக்கிய அம்சமாக நான் எண்ணுவது அதன் எளிமை. எளிமைதான் நாவலுக்கு பேரழைச் சேர்க்கிறது. எளிமையான அறம், எளிமையான உணர்வுகள், எளிமையான மக்கள், எளிமையான ஊரின் இயக்கம், எளிமையான கூறல் முறை. நாவல் முன்வைக்கும் எளிமையான நம்பிக்கைகள் யாவும் அந்த எளிமையான மக்களுடையவை. மூட நம்பிக்கை என நவீன மனம் ஒதுக்கிவிடும் விஷயங்கள் வழி அடிப்படை அறம் முன் வைக்கப்படுகிறது. அந்த எளிமையான நம்பிக்கைகளின் ஊற்றுக்கண் அந்த எளிமையான மக்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பிச்சையாசாரி, எலியன், கோணக்கண்ணன் நடத்தும் புதையல் கூத்து வெகுளியின் அழகு.

உருகைக்குடி நம்முள் நெய்யப்படுவது இயல்பான நடையால். வட்டாற வழக்கில் அமையும் உரையாடலும் கேளிக்கிண்டலும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. அவ்வப்போது, (குறிப்பாக கண்மாய் பற்றி பேச எழும் இடங்களில்) கவித்துவம் தலைக்காட்டுகிறது. வாசகனாக ஒரு போதாமையை உணர்கிறேன் இக்கவித்துவ இடங்களில். கண்மாயின் இயக்கத்தை அறியும் தோறும் இயற்கையும் மனிதனும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியாக, ஒரு அழகான படிமமாக உருவாகிறது. ஆனால் கண்பாய் பற்றி பேசும் கவித்துவமான இடங்கள் ஒரு வாசகனாக என்னை நிறைவடையச் செய்யவில்லை.

நாவல் சருக்கும் முக்கியமான மற்றொரு இடம் இது-  ஒரு பெறும் கால மாற்றம் கடைசி நூறு பக்கங்களுக்குள் ஒருவித அவசரத்தோடு சொல்லப்படுகிறது. குப்பாண்டிச்சாமி வருங்காலம் பற்றி கூறுகையில் மக்கள் இலவசம் தேடி அலைவார்கள் எனும் இடம் ஒரு துருத்தலாக செயற்கைத்தன்மையுடன் நிற்கிறது. கடைசி பக்கத்தில் ஒலிக்கும் ஆசிரியரின் நேரடிக்குரல் கண்டிப்பாக நாவலின் அழகிய போக்கிலிருந்து ஒரு பிசகு. சுருக்கமாக, கடைசி அத்யாயம் கால மாற்றத்தை காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாகப் பேசுவது நிறைவின்மையை அளிக்கிறது. நாவலின் இயல்பான அழகு மாறி செயற்கைத்தன்மை உள்நுழைகிறது.

'சூல்' நம்மை 18ஆம் நூற்றாண்டில் துவங்கி சுதந்திர காலகட்டம் வரை கொண்டு செல்கிறது. இதற்குள் இயற்கையும் அதுனுடன் இயைந்து போன உருளைக்குடி மக்களின் வாழ்வும் காட்சியாகிறது. உருளைக்குடி மக்களின் எளிய நம்பிக்கைகள், அடிப்படையான அறம் ஆகியவை இயற்கையையும் மனிதனையும் ஒரு சமநிலையில் வைக்கிறது. அதிகாரத்தின் கைகள் இந்த எளிய அமைப்பை சிதைப்பதே நாவலின் முடிவு. குறைகளைத் தாண்டி தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்றாக சூல் நீடிக்கும். வாசித்த ஒவ்வொருவருள்ளும் உருளைகுடி மெல்ல சூல் கொள்ளும். அதன் அழகான எளிமையும்தான்.

Tuesday, July 4, 2017

நள்ளிரவில் சுதந்திரம் (வாசிப்பனுபவம்)


ஒரு படி கூடுதலாக உண்மையை நோக்கி நம்மை உந்தும் எந்த ஒரு படைப்பும் சிறந்ததே. இப்புத்தகத்தை மெச்சுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்று. வரலாற்றை ஒரு நாவலுக்கு நிகாராண சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்த முடியும். உதாரணம் இப்புத்தகமே. பல உணர்வுநிலைகளின் ஊடே நம்மை இழுத்துச் செல்கிறது இந்த வரலாறு. உலகின் மாபெரும் பிரிவினையை கண்முன் நிறுத்துகிறது.

பல சரடுகளின் வழி வரலாற்றை கூறுகிறது நூல். மவுன்ட்பேட்டன் கடைசி வைசிராயாக நிர்ணயிக்க ப் படு வது ம் அதற்கான காரணிகளும். பின் மவுன்ட்பேட்டன் எதிர்கொண்ட இந்தியாவும் அதன் தலைவர்களும். ஒரு நீண்ட அத்யாயத்தில் மவுன்ட்பேட்டன் நேரு, காந்தி, பட்டேல்,ஜின்னா ஆகியோரை சந்திக்கிறார். இந்நான்கு தலைவர்கள் பற்றியும் ஒரு சிறு வரைபடம். அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் அரசியல் விசைகள். கடைசியில் வேறு வழியின்றி பிரிவினை.

ஒரு அத்யாயம் முழுக்க நம் சமஸ்தான மன்னர்களின் அபத்தங்கள். வர்ஜின் வேட்டை, இன்னதென்றில்லாத செக்‌ஷுவல் பான்டஸீஸ், வடிகட்டிய சு த் தீ கரி க் கப் பட்ட  முட்டாள்தனம், அதிகமான வெட்லான்ட் பறவைகளை சுட்டு ஒரு ராஜா உலக சாதனை படைக்கிறார், ஒருவர் அதிகமான புலிகளை கொன்று குவிக்கிறார்...இப்படியான வெற்று அபத்தங்கள்  பல. இவர்களின் கையில் இந்தியா சிக்காமல் போனது ஆண்டவன் கிருபை.

இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது உலக அரசியலில் ஒரு திருப்புமுனை. டீகாலனியலைஸேஷனின் துவக்கப்புள்ளி. இந்தியாவை இழப்பதற்கு முழுக்க எதிரான சர்ச்சிலின் வழி தெரிகிறது, இந்தியா எவ்வளவு முக்கியமான சொத்து பிரிட்டனுக்கு என. ஆனால் அவர்களின் அட்டூழியங்களை புத்தகம் நியாயப் படுத்தவில்லை. வெகு அரிதாக பிரிட்டிஷ் ஆட்சியின் கருமை பக்ககங்கள் சுட்ட ப் படுகின்றன. ஏனெனில் புத்தகம் பேசுவது சுதந்திரம் தருவது உறுதியான பின்னான காலகட்டத்தை. இருந்த நிலமையை ஆன வரையில் சிறப்பாக மவுன்ட்பேட்டன் சமாளிதுள்ளார் என்கிறது நூல். பிரிட்டனின் நிர்வாகத்திறமை பாராட்டப்படுகிறது. ஆம், சரியென்றே படுகிறது.

இதன் முக்கியமான அம்சங்களாக நான் கருதுவது இரண்டு. ஒன்று, பிரிவினையின் போதான வெறியாட்டம். இதற்கு ஒரு முழு அத்யாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றத்துடன் இதனை வாசித்தேன். இப்படியொரு வெறியாட்டமா? இத்தனை நாட்கள் ஒன்றாக வாழ முடிந்தவர்களை ஒரு சிலரின் சுயநலம் சார்ந்த அரசியல் பிரித்துவிட முடியுமா? கொலை, பிறப்புறுப்பை சிதைத்தல், பலாத்காராம், பிணங்களை தாங்கி வரும் ரயில்கள்....

"ஆனை வெம்போரில் குருந்தூரென" என்கிறார் மாணிக்கவாசகர். அரசியல் யானைகள் நடத்தும் போருக்கு சிறு புல் என்ன செய்யும். இயக்கப்படுகிறார்கள் மக்கள். விளைவு, எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளில் எந்தப் பங்கும்‌ இல்லாத மக்கள் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். மானுடம் தோற்கும் இக்கனங்கள் முழு வீரியத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக காந்தியைப்‌ பற்றிய ஒரு பரவலான சித்திரத்தை அளிக்கிறது நூல். நூலின் முக்கிய அம்சம் இது என்வரையில். "என் இறந்த உடலை கிழித்து இந்தியாவைப் பிரியுங்கள்" என்கிறார் காந்தி. யாரும் கேட்க முன் வரவில்லை. குறிப்பாக ஜின்னா. "டரக்ட் ஆக்‌ஷன் டே" என்று ஏற்கனவே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டயிற்று. ஆயினும் சொல்கிறார் காந்தி "இந்தியாவைப் பிரித்தால் இதைவிட பல உயிர்களை நாம் இழக்க வேண்டி வரும்" என்று. ஆனாலும் நடந்தது பிரிவினை.

தன் ஆன்மாவின் ஆணைப்படி நடக்க தன் உடலையும் மனதையும் முழுவதுமாக தயார் நிலையில் வைத்திருந்த செயல்வீரர் காந்தி. மஹாத்மாவை முடிந்த வரை எதிர்த்து, ஒன்றும் பலிக்காமல் போக கொண்றே போட்டது இந்தியா... சிலுவையில் அறைந்தது என்பதே சரி. நவ்காளியில் மதக் கலவரம் நடப்பது அறிந்து, தடுப்பதற்காக அதனை சுற்றி அமைந்திருக்கும் கிராமம் கிராமமாகப் போகிறார் காந்தி. போகிற வழியில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. க்ளாஸ் சில்லுகள் பரப்பப்படுகின்றன. அனைத்துயும் சுத்தம் செய்துவிட்டு முன் நகர்கிறார். கலகம் ஓய்கிறது. சுத்ந்திர கொண்ட்டாட்டத்திற்குப் பிறகு, பிரிவினை அறிவிக்கப்படுகிறது. கலகம் வெடிக்கும் என்று அறிந்து, மவுன்ட்பேட்டன் பஞ்சாபிற்கு 50000 சோல்ஜர்களை அனுப்புகிறார். கல்கட்டாவிற்கு காந்தி செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அன்பையும், அஹிம்சையையும் போதித்த ஒரு தனி மனிதனால் எவ்வளவு சாத்தியமாகிறது! ஆயுதமில்லாத ஒருவருக்குப் பணிந்து கல்கத்தா அமைதியாக உள்ளது.

காந்தியின் கடைசி உண்ணாவிரதம் பற்றிய நீள் பதிவு உள்ளது. காந்தியின் ஆன்மபலம் கண்டு வியப்பு உருவாகிறது. "காந்தி சாகட்டும்" என்ற மக்கள், மெல்ல முழுமையாக ஒரு மனதாக திறள்கிறது. ஒரு மனிதனின் சாவை நோக்கிய பயணம் எவ்வளவு உயிர்களைக் காத்துள்ளது.

மாஹாத்மா கடைசி நாட்கள், தோல்வியுற்ற முதல் கொலை முயற்சி, பின் வெற்றிகரமான இரண்டாவது முயற்சி ஆகியவை நுணுக்கமான விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் உணர்ச்சி நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதாக "the second crucifixion" அத்யாயம் அமைந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்புக்கு நிகரான உணர்வு நிலை.

போதும் நீண்டு கொண்டே போகிறது.... முடித்து விடுகிறேன். பல நூல்களும் அனுபவங்களும் வாசித்து முடித்து நாள் சென்றபின் ஒற்றைப் படிமமாக நம்முள் எஞ்சும். இப்புத்தகம் காட்டும் இத்தனை கோரங்களைத்தாண்டி நான் மீண்டும் மீண்டும் உருபோடும் ஒரு படிமம் ஒன்று. இந்நூல்  காந்தி வட்ட மேஜை மாநாட்டிற்காக மேற்கொண்ட யுரோப் பயணத்தை கூறுகையில்...."Gandhi wept at the site of the statue of christ on the cross in sistine chapel" ... இன்னும் பத்து வருடம் கழித்து, இப்புத்தகத்தை பற்றி யோசித்தால் என்முன் வந்து விழப்போகும் படிமம் இதுதான். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்த்துவின் முன் நின்று அழும் மஹாத்மா.

(பின் குறிப்பு: அமேஸான்.இன் னில் ஆங்கிலத்திலும் , தமிழ் மொழிபெயர்ப்பு உடுமலை போன்ற தளங்களிலும் கிடைக்கிறது)

Tuesday, April 4, 2017

மானுடத்தின் தோல்வி - 18வது அட்சக்கோடு


சுதந்திர காலகட்டத்தை ஒட்டி முன்னும் பின்னுமாக , இந்திய யூனியனுடன் இன்னும் இணைந்திராத ஹைதரமாத் சமஸ்தானத்தில் செக்கந்திரபாத்தில் வசிக்கும் ஒரு தமிழ் இளைஞனின் அனுபவத்தின் வழி மானுடம் தோல்வியுறும் கணத்தை முழு வீர்யத்துடன் கூறுகிறது  18வது அட்சக்கோடு. இப்படி சம்பிரதாயமான வரிகளுடன் இக்கட்டுரையை தொடங்குவது நாவலுக்கு நியாயம் செய்யவில்லை. சம்பிரதாயமான நாவலல்ல இது. நான் வாசித்த படைப்புகளில் ஆகச் சிறந்த ஒன்று. 

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நாவலை படிக்கமுடியாமல் ஒதுக்கிவைத்தேன். இந்நாவலே தோழி ஒருத்தியால் 'போர்' என்று என்னிடம் இலவசமாக வந்தது. என்னால் 'போர்' என்று ஸ்திரமாக முடிவு கட்ட இயலவில்லை. புலிக் கலைஞனையும், தண்ணீர்  போன்ற படைப்புகள் வேண்டுமென்றளவு பாதிப்பை விட்டுச் சென்றதே காரணம். படைப்பை நான் அடைய இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என முடிவு கட்டினேன். இன்று அடைந்துவிட்டேன்.

அசோகமித்ரனைப்போல் கதை கூறல்முறையைக் கையாளும் எழுத்தாளர்களை நானறியவில்லை. எதையும் அசைக்காமல், சிகையைக் கூட கலைக்காமல் வீசும் தென்றல். ஆனால் நம்மை கடந்த பின் பார்த்தால் மரங்களை வீசி எரிந்திருக்கும். பெருங்கணங்களை எப்படிச் சொல்வது? வெண்முரசில் ஒரு மென்கணத்தை தொட்டு தொட்டு விரிக்கிறார். நீலம் நாவலின் முதல் சில அத்யாயங்கள் அப்படியானவை. எழுதுபவனில் கூடும் தவிப்பை செறிவான ஒரு பெறும் சொற்வெள்ளமாக அவிழ்ப்பது. இதற்கு நேரெதிரான ஒரு கூறல் முறை அசோகமித்திரனுடையது. எளிமை. மிகையின்மை. ஆனால் இவ்வெளிமை வழி அ.மி தொடுவதும் ஒரு பெருங்கணத்தையே!

அசோகமித்ரனால் பகீர்க் கணங்கள் யாவும் மிகச் சாதரணமாகச் சொல்லப்படுகிறது. எந்த அலட்டலுமில்லாமல் கூறும் போது அக்கணம் தரவேண்டிய சலிப்பு வாசகனில் பல்மடங்காகிவிடுகிறது. சாருவின் ராஸ லீலா, திவ்யா எனும் பாத்திரத்தை "அவள் நான்காவது தற்கொலை முயற்சி தோல்வியடைவில்லை" என போகிற போக்கில் சொல்லிச் செல்லும். இச்சொல்முறை அ.மியிடமிருந்து பெற்றதாக இருக்கலாம். அ.மியுடன் ஒப்பிடுகையில் சாருவின் எழுத்து மிகையான எள்ளலும், வாசகனை ஈர்ப்பதற்கான அழகான நடையும் கொண்டது. அ.மியின் படைப்புகள் அடக்கமான குசும்பும், தட்டையான கூறலாலும் ஆனது. இந்த தட்டையான கூறலுக்குத்தான் எவ்வளவு ஈர்ப்பு.

அதே தட்டையான கூறல்தான் 18வது அட்சக்கோட்டில் செக்கந்திராபாத்தை மெல்ல நம்முன் உருவாக்குகிறது. சந்திரசேகர் சிறுவனாக, இளைஞனாக வாழ்வது ஒரு முக்கியான வரலாற்றுத் தருணத்தில். இந்தியா சுதந்திரம் அடைந்துவிடுகிறது. கூடவே பிரிவிணை. மதம். வெறி. இரத்தம். இடையே ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் (ப்ரின்ஸ்லி ஸ்டேட்ஸ்- பெயரளவில் மன்னராட்சி. ஆனால் ப்ரிடீஷ் கட்டுப்பாடு), இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைந்துகொள்ளலாம். பெரும்பாண்மை சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்துவிட்டது. ஜூனாகத், காஷ்மீர், ஹைதரபாத் ஆகிய அமஸ்தானங்கள் இழுவையில். ஜூனாகத் போலீஸ் உதவியால் இந்திய யூனியனோடு இணைகிறது. ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ராணுவத்தால்... ஆனால் வேண்டுமென்ற அளவு வெறிஆட்டங்களோடு. இந்த வரலாறு நடந்தேறும் காலகட்டத்தில், சாமானியனாக வருகிறான் சந்திரசேகர். க்ரிக்கெட் ஆடுகிறான். சிறுவர்களுக்கிடையே கூட பிரிவு. அவனின் காமம் விழித்தெழுவதும் இக்காலத்தில். இவ்வளவு கமுக்கமாக அவன் தவிப்பை சொல்லமுடிந்துள்ளது அ.மியால். ஒரு சரடு இவன் வாழ்க்கை.மற்றொன்று வரலாறு. இரண்டும் ஒன்றை ஒன்று அரிதாக சந்தித்துக் கொள்கிறது. இவன் தமிழ் நண்பர்கள் கலவரத்திற்கு பயந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அரசியலின் கைகள் மெதுவாக இவர்கள் வீட்டுக்குள்ளும் வருகிறது. சந்திரசேகர் 'ரஜாக்கர்களால்' (ஹைதராபாத் நிஜாமால் உருவாக்கப்பட்ட படை) தாக்கப்படுகிறான். அவன் பக்கத்துவீட்டு காஸீம் ஒரு புள்ளியில் குரலுயர்த்துபவனாக உள்ளான். காங்கிரஸில் இணைந்து கல்லூரியை புரக்கணிப்பதென்று, இரத்தத்தால் கையெழுத்து இடுகிறான் சந்திரசேகரன். கையெழுத்து வாங்கியவன் வீட்டுக்குள் இருந்துகொண்டே இல்லையென்று சொல்லி அனுப்புகிறான். நிகழும் அரசியல் அரிசி தட்டுப்பட்டை கொணர்கிறது. சோள ரொட்டிதான் சாப்பிடுகிறார்கள். சர்க்கரை கிடைக்கவில்லை. பிரிவிணையின் போதான ரெப்யூஜீஸ் வந்த வண்ணமுள்ளார்கள். நாவல் மெல்ல ஒரு பெறும் சித்திரத்தை நம்முள் வரைந்து விடுகிறது. பின் ஒரு மாலையில் காந்தி சுடப்பட்ட செய்தி வருகிறது. சந்திரசேகர் 'காந்தீ காந்தீ' என கத்தி ஓடுகிறான். காந்தி ஒருமுறைக் கூட நேரில் காணாத ஒருவனை காந்தி முழுவது ஆக்ரமித்துள்ளார். காந்தியின் மரணத்திலும் கடைசி அத்யாயத்திலும் அ.மியின் வழக்கமான சாந்தக் கூரல் சற்றே உணர்ச்சியுடன் ஒலிக்கிறது.

கடைசி அத்யாயமும் கடைசி காட்சியும் பேரிலக்கியம் தரும் உணர்வினை அளிக்கிறது. அதனை கட்டுரையில் விவரிப்பது சரியல்ல.  இந்நாவல் இந்தியனால் அதிலும் ஒரு நகரத்தில் தன் காலத்தை கழித்த ஒருவனுக்கு மேலும் நெருக்கமாக வாய்ப்புள்ளது. ஆனால், கடைசி அத்யாயம் யாவருக்குமானது.   இதைத்தான் கட்டுரையின் தொடக்கத்தில் மானுடம் தோல்வியுறும் கணம் என்றேன். எந்த ஒரு தேசத்தவனாலும் உள்வாங்க முடியும்.  அரசியல், தத்துவம், கடவுள், இலக்கியம், கலை, அறம் இன்னும் பலவும் எதற்காகவோ அது தோலிவியுறுவது சந்திரசேகரனையும் வாசகனையும் நிலைகுலையவைக்கிறது.  மானுடத்தின் தோல்வியை ஒரு இளைஞனின் கண்களின் வழி மிகச் சாதாரணமாக சொல்லிவிடுகிறது 18வது அட்சக்கோடு.

Friday, January 27, 2017

இருளாழத்தின் ஒளி


படைப்பாக மலர்பவை யாவும் உணர்வுகளே. ஏதோ ஒரு உணர்வே ஒரு படைப்பின் மையம்.  அதீத உணர்வு என்றால் மேலும் பொருந்தும். தட்டையான இயல்பு மீறாத ஒரு உணர்வை கலை கண்டுகொள்வதில்லை. அதீதங்களில் பரவசிக்கிறது கலை. உன்னதத்தின் உச்சம் வேண்டும் கம்பனில் போல. அல்லது கீழ்மையின் உச்சம். இருளின் உச்சம். மனதின் இருள், இவ்வார்த்தை உடனடியாக ஆண்ட்டிக்ரைஸ்ட் எனும் படத்தை என் நினைவின் முன் கொணர்கிறது. காம சேர்க்கையில் ஈடுபடும் பெண், தன் குழந்தை திறந்த ஜன்னல் வழி ஏறி முதல் தளத்திலிருந்து கீழே விழுவதை பார்த்தபடி இருக்கிறாள். எதுவும் அவள் செய்யவில்லை. காமம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்ட ஒரு கணம் அவள் தாயால்ல, பெண் அல்ல, நம் நாகரீகம் வரையறுத்த வைத்த எதுவுமல்ல. குழந்தை இறந்துவிடுகிறது. காமம் ஓயவும் அவள் பேதலிக்கிறாள். குழந்தை தன் கண்முன்னே விழுந்ததைக் கண்டும், காப்பாற்ற வாய்ப்பிருந்தும் காமச் சிடுக்குக்குள் சிக்கியிருந்ததை அவளால் ஏற்க முடியவில்லை. மனதின் இருள் ஆழம் நோக்கி திகைக்கிறாள்.  தன் கணவனை கொடூரமான முறையில் வதைக்கிறாள். லார்ஸ் வான் டையரின் படமிது. வெகு சில சினிமாக்கள் நாம் பயணிக்க ஒட்டாத ஆள் அரவமற்ற மனதின்தெருக்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. என்ன முரண் எனில் அந்த இருளும் நம் மனமே. இப்படியான மனதின் இருளுக்குள்ளான ஒரு பயணமே "ஆடிஷன்". 1999ல் வெளியான "டக்காஷி மீக்கி" எனும் ஜப்பானிய இயக்குநரின் படமிது.

கூகுளில் "extremely disturbing sick movies" என்று தேடியபோது நான் கண்டுகொண்ட படமிது. மனைவியை இழந்த ஒருவன் பல வருடம் சென்று  மற்றொரு பெண்ணை மணக்க முடிவெடுக்கிறான். அவனுடைய இளம் மகனும் அதற்கு சம்மதிக்கிறான். அழகிய பெண்ணை மணக்க வேண்டும். ஆக தன் நண்பன் தந்த யோசனையின் படி, ஒரு புதுப்படத்திற்கு நாயகி தேவையெனக் கூறி ஆடிஷன் ஒன்றை நடத்துவது. தனக்கு விருப்பமான பெண்ணை கண்டுகொள்வது அதன் வழி. ஆடிஷன் நடக்கிறது. ஒரு பெண் இவனை ஈர்க்கிறாள். அவளை சந்தித்துப் பேசுகிறான். காதல் மலர்கிறது. ஆனால் அவளைப் பற்றி எதுவும் இவனுக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்துவிடுகிறது. அவ்வப்போது ஒரு ப்ரேம் வந்து செல்கிறது.. இவள் மடங்கி தலைவிறி கோலமாய் அமர்ந்திருக்க, அவளருகில் ஒரு மூட்டை. முட்டைக்குள் ஒரு மனித உடல் முண்டுகிறது. இந்த ப்ரேம் அடிக்கடி வருகிறது. அந்த பெண்ணின் அழகுக்கும் இந்த ப்ரேமின் குரூரத்திற்கும் சம்மந்தமே இல்லாததால்தான் திகிலுணர்வைத் தருகிறதா இந்த ப்ரேம்? அல்லது ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாலா?

இது எதையும் அவன் அறியவில்லை. அவளுடன் உடலுறவு கொள்கிறான். அவள் 'நீ என்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்கிறாள். என்னை மட்டும்தான்' என் மீண்டும் மீண்டும் சொல்கிறாள். பின் பெரிய குழப்பாமான ஒரு திரைக்கதை. முத்தாய்ப்பாக அப்பெண் மனத்திரிபுடையவள் என்பதை நாம் அறிகிறோம். சிறு வயதில் உடல் ரீதியான வதைக்கு உள்ளானவள். ஆனால் அவன் உண்மையாகக் காதலிக்கிறான். அவளை மணக்கவும் முடிவெடுக்கிறான்.இந்நேரம் அப்பெண் அறிந்து கொள்கிறாள், படத்திற்கான ஆடிஷன் என்பது வெறும் கண்துடைப்பென்று. தன்னை உடல் ரீதியாக சுகிக்கவே இந்த நாடகம் என்று நினைத்துவிடுகிறாள்‌.


அவனறியாமல் அவன் வீட்டுக்குள் காத்திருக்கிறாள். அவன் மகன் எங்கோ வெளி சென்றுவிட, இவன் மட்டும் வீட்டுக்குள் நுழைகிறான். ஒரு ஊசியை சொறுகி அவனது உடலை செயலிழக்கவைக்கிறாள். பின் ஒரு கம்பியை எடுத்துக் கொள்கிறாள்... "இந்த கம்பி சதை எலும்பு என யாவற்றையும் ஊடறுக்கும்" என்கிறாள்‌. பின் அவனது கனுக்காலுக்கு மேல் அந்த கம்பியை சுறுக்கு போட்டு, கம்பியின் முனைகளை  பக்கவாட்டில் இழுத்திழுத்து அவனது பாதத்தை துண்டித்தெறிகிறாள். பின் அவனது கண்கள் முழுவதும் குண்டூசிகளை செருகுகிறாள். "எல்லா ஆண்களும் இப்படித்தான்" என்கிறாள். இந்நேரம் அவனுடைய மகன் வந்து விடுகிறான். அவன் மீது பாயும் இவளை படியிலிருந்து உதைத்துத் தள்ளவும் மண்டையில் அடிபட்டு செயலற்று விழுகிறாள். இவ்விடம் வரை படம் சாதாரணப் படமாகவே இருந்தது. ஆனால் அவள் கீழே விழுந்த பின் கண்ணெல்லாம் குண்டூசி சொறுகப்பட்டுக் கிடக்கும் அவனைப் பார்க்கிறாள். அவன் சிரமப்பட்டு  கண்ணை  திறந்து இவளைப் பார்க்கிறான். அவர்களிடையே  ஒலியல்லாத காதலின் உரையாடல் நிகழ்கிறது. நம் மனம் நெகிழ்வதை உணர முடியும் இவ்விடத்தில். அப்பெண்ணை பார்க்கும்போது "Humans are fucking helpless" எனும் வரிகளைச் சென்றடைந்தேன். கண்ணுக்குப் புலப்படாத நம்மை மீறிய ஏதோ ஒன்றால இயக்கப்படும் நாம். ஒரு பாவப்பட்ட கைவிடப்பட்ட பெண்ணாகத் தெரிகிறாள். அவளை நொக்கும் அவனது கண்களில் பயமோ வெறுப்போ இல்லை, மாறாக கருணைதான் உள்ளது. பேரும் சண்டையாகிவிட்ட ஊடலுக்குப் பின் காதலியை நோக்கும் காதலனின் பார்வை.

இப்படத்தை ரொம்பவும் தற்செயலாகச் சென்றடைந்தேன். படம் உணடாக்கிய பாதிப்பு ஒரு மாதம் நீண்டுவிட்டது. என் நுண்ணுணர்வு காண்பித்ததுக் கொடுக்கிறது இது அரிதான படைப்பென்று. படைப்பு பயணிப்பது மனதின் இருள் ஆழங்களுக்குள் தான். ஆனால் இருள் ஆழத்தின் ஒளியை அப்பெண்ணின் கண்களில் காண்பித்துவிட்டு படம் நிறைவுறுகிறது. சுபம்.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...