Friday, May 14, 2021

ஆயிரம்
கிளை பரப்பி
கோடி இலை
விரித்து
கணமும்
அசைவின்மையறுத்த
பெருவிருட்சம்
ஒன்றின் கீழ்
அசைவின்றிக்
கிடக்கிறது
காற்று உண்ணும்
பாறை
நதியின் கைகள்
கச்சிதமாய்
கற்களை
செதுக்குவதில்லை

சந்தோஷமான ஒரு
சிறுவனைப்போல
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி
மிகச்சரி சமமான
எடையுள்ள
கூழாங்கற்களை
எங்குக்‌கண்டடைவாய்?
நம் துலாபாரமுள்
நடுவில்
ஓயப்போவதேயில்லை
அன்பைக்‌ குறிக்க
ஆயிரம் சொற்களிருந்தும்
இனி அவை வேண்டாம்

எண்கள்
எண்கள்
சந்தேகமற்றவை
பசப்பிலாதவை
பொருளின் எடையை
நீரின் அளவை
தூரத்தை
காலத்தை
விசையை
வேகத்தை
மின்சாரத்தை
பொருளின் மதிப்பை
நிலத்தை
மழையை
அண்டங்களுக்கிடையான
தூரத்தை
அளந்துவிடும் எண்
அன்பினை அளந்துவிடாதா

இத்தனை மில்லி‌
அன்புக்கு
அதே அளவு
அளந்து கொடு போதும்
எண்கள்
எப்படியாவது
சிக்கல்‌களை எல்லாம்
தீர்த்துவிடும்

நம் சிக்கல்கள எல்லாம்
அன்புச்சிக்கல்கள்தானே
 நாம் ஏன்
வெவ்வேறாக
உணர்கிறோம்
எப்போது தனிப்பட்டுப்போனோம்
எப்படி தனியர்களானோம்
நம் உணர்வுகள்
மற்றவர்களால்
உணரப்பாடாமல் போவது
எங்ஙனம்
எப்படி எதிரெதிர் உணர்வுகளை
சூடி களம்‌நிற்கிறோம்
நாம் காணத்தவறுவது
நாம் அறியாமல்‌ இருப்பது
நாம் உணராமல் இருப்பது
எதை

என் கண்ணீர்
அர்த்தமற்றது என்றுவிடாதே
ஒரு துளிக் கண்ணீரை
ஆயிரம் பொருக்குகளாக்கி
ஒரு பொருக்கில்‌ உறையும்
பசப்பினை மட்டுமாவது
உணர்

நம் உணர்வுகள்
ஒன்றாகட்டும்
அதிகாலை
ஒரு மென்மொட்டுப்
புன்னகயுடன்
கண்மலரும்
குழந்தை

அதிதூரத்து
கதிரொளியில்
பூக்கும் சிறு மென்மலர்
மலரலுங்காமால் ஆடும்
பட்டுபுச்சியின் வண்ணங்கள்
வண்ணங்களைக் கண்டு
துள்ளி ஆடும்
சிறு நாய்க்குட்டி
கொக்குக்கு முது காட்டி
சேற்றில் புரளும் எறுமை
பேசிவிட்டு ஓடித்துரத்தும்
அணில்
இன்னும் மறுபக்கம்
சென்றிராத நிலவு
அதிதூரத்தில் ஒரு நட்சத்திரம்
மழைத்தேக்கத்தில் கண்ணறியா
கோடி உயிர்கள்

கணம்‌ கணமும்
ஓம் ஓம்
என எழுகிறது யாவும்

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...