இன்று 07.05.2026 தாகூரின் பிறந்தநாள். கீதாஞ்சலி என் மனதுக்கு ப்ரியமான நூல். இமயத்தைக் கண்டு உளம் நெகிழ நமக்கு மொழி தேவையில்லை. கவிதையின் ஆன்மத்துக்கும் அது பொருந்தும்.
'அமர் ஷோனார் பாங்ளா' எனக்குப் பிடித்த பாடல். வங்கப்பிரிவினைக்கு எதிராக சுவதேசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டபோது 1905ல் தாகூரால் எழுதப்பட்ட பாடலிது. பின்னர் 66 வருடங்கள் கழித்து 1971ல் வங்கப்போரின் போது 'ஸ்வாதின் பங்ளா பேடர் கேன்ந்ரா' எனும் வானொலி நிலையத்தால் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. ஆக இது ஒரு போரின் கவிதையும் கூட.1972ல் பங்களாதேஷின் தேசிய கீதமாக்கப்பட்டது.
அப்பாடலின் மொழிபெயர்ப்பு கீழ்வருவது,
பொன்னொளிர் வங்கம்
வங்கமெனும் பொன்னே
உன்னைக் காதலிக்கிறேன்
என்றும் உன் வானம்,
உன் தென்றல் என்னை லயத்தில் நிறுத்தி
ஆன்மத்தை குழலென்றாக்கியது
வசந்தத்தில், என் அன்னையே
அலையாத்திக் காடுகளின் மணம்
வெறியெழும் இன்பத்தில் நிரைக்கிறதென்னை
இலையுதிர்க் காலத்தில், எம் அன்னையே
நெற்கொழிக்கும் வயல்களில்
கதிரெங்கும் இனிய சிரிப்பொன்று
படரக்காண்கிறேன்
ஆ, எத்தனை அழகு
எத்தனை வண்ணம்
என்னவொரு பிரியம்
என்னவொரு கனிவு
நதிக்கரையிலும்
ஆலமரத்தினடியிலும்
எத்தனை அழகாய் இட்டுள்ளாய்
மணற்விரிப்பை
என் அன்னையே
உம் உதட்டின் சொல்
என் காதுக்குத் தேன்
துன்பத்தின் சாயல்
உன் முகம் படிகையில்
ஓ என் அன்னையே
இதயம் கண்ணீரால் நிறைகிறது
பொன்னொளிர் வங்கமே
உன்னைக் காதலிக்கிறேன்