செவ்வாய், 5 மே, 2026

அக்கரம்

கடலில் கோடி
உயிர்கள் உள்ளது
வானத்தில் இக்கணம்
கோடி‌ பறவைகள்
பறக்கின்றன
நிலமெங்கும் உயிர்களால்
நிறைந்துள்ளது
அனைத்தையும்‌ தொடுத்துக்
கோர்த்த கரமே
எவ்வுயிர்மலரை
எந்நாரில் கோர்த்துது
சரமாக்கிக்கொண்டுள்ளாய்
எனது என
சொல்லிக்கொண்டிருந்தேன்

தனது என‌
ஏதுமில்லை
என்றலர்ந்துள்ளது
மலர்

ஒலியுரை இறை

பருவம்
காலம்
மலர்கள்
நதி
கடல்
மலை
குளிர்
மழை
வெயில்
புள்
யானை
மேகம்
அருவி
குழவி
புல்
இலைகள்
வேர்
அன்பு
காதல்
கருணை

சொல்‌‌ சொல்
சொல் சொல்

சொற்களால்
நிறைந்துள்ளது
உலகம்

அர்த்தமேதுமற்ற
அனைத்துமுரையும்
ஒரு ஒலியில்
ஏன் நீ
குடிகொண்டுள்ளாய்

திங்கள், 4 மே, 2026

இலையோ மலரோ
உதிர்ந்துதானே போகிறது
உதிர்வதற்குள் பறக்க வேண்டும்
எரியும் நட்சத்திரங்களும்
பெரும்புயல் வீசும் கிரகங்களும்
உலவும்
அம்மோனப்பெருவெளிக்குள்
பறக்க வேண்டும்
சிறகென்பது
இச்சிறுகூட்டை வானங்களுக்குள்
திறந்துவிட
ஒரு காலத்தில்
கடலுள் திளைத்த மீன்கள்
வலை சிக்கி
துடித்திறந்து
நிலைத்தபெரும்கண்ணுடன்
திறந்தசிறு வாயுடன்
கிடக்கின்றன
அன்பே
நீ அழைத்தால் போதும்
இவ்வுடலை
உனக்கு
காணிக்கையாய் இடுவேன்
உடலை
ஆடையாய் அணிந்துள்ளேன்
புறத்தை புறம் தீண்டுவதாய்
வெயிலை மழையை
குளிரை நீரை நெருப்பை
அறிகிறேன்
அகத்துளிர்த்த அம்மலரொன்றை
எவ்வகத்தின் வளிக்கரம்
தீண்டுமோ?

ஞாயிறு, 3 மே, 2026

வெகு நாள்‌கழித்து
மழைநாளின்
குளிராக வருகிறாள்
என் கடலாழம்
பூத்திருக்கும்
மலரை அவளுக்காக
கொய்து வருகிறேன்
இத்தனை குளிராக
என் மேல் கவிபவளே
என் மலர்களை
வாங்கிக்கொள்ளடி
வைரக்கற்களாய்
விழுகிறது
ஆலங்கட்டி
கையில் எடுத்து
குளிரை உணர்
கைகளில் வானம்
வழிந்தோடும்
அதிசயத்தை
நிகழ்த்திக்கொள்
கண்மூடி கண்டுகொள்
பூமியை 
மாற்றி மாற்றிப் பார்க்கும்
அம்மாபெரும் கண்களை

அக்கரம்

கடலில் கோடி உயிர்கள் உள்ளது வானத்தில் இக்கணம் கோடி‌ பறவைகள் பறக்கின்றன நிலமெங்கும் உயிர்களால் நிறைந்துள்ளது அனைத்தையும்‌ தொடுத்துக் ...