திங்கள், 8 ஜூன், 2026

பெரும் சதுப்பு
அசைவறுத்த முதலை
அசைவில்லாத பறவை
அசைவற்ற
நீரில் மிதக்கும்
அசைவேதுமற்ற
சிறு பூச்சி

சதுப்பின் ரீங்காரம்
ஊன்றிய கால் வழி
கொடிபோல்
மேலெல்லாம் படர்கையில்
கண்டேன்
அது
பெரும்
அசைவின்மையில்
அசைவு கொள்வதை

வெள்ளி, 5 ஜூன், 2026

குறை

அழிவற்றதும்
எதிலும் உறையும் நுட்பமும்
காலாதீதமானதுமான
ஒன்றுதான்
நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள்

ஆனாலும்
எனக்கு மரணத்தை
பிடிக்கவில்லை

வியாழன், 4 ஜூன், 2026

வசந்தத்தின்
கடைசிப் புள் குரலில்
த்வனிப்பது
சோகமல்ல

களியாடலில்
திளைத்த சிற்றுடல்
கொண்ட
களைப்பு

புதன், 3 ஜூன், 2026

பிரியம்

துன்பமது
அடுக்கிவரினும்

இன்பமது
சற்றே
தாமதித்து
வரினும்

இந்த
இருப்பின் மீதுதான்
எத்தனை பிரியம்

செவ்வாய், 2 ஜூன், 2026

பிறப்பறு - 2

மலரினும் மெல்லிய
காமமுள்ளது

உவப்பக் கூடி
உள்ளப்பிரியும்
நட்புள்ளது

குழலினும்
யாழினும்
இனிய குரலொன்றுள்ளது

எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எனும் அரற்றலுள்ளது

சாம்பல் பூசி
மயானம் வாழ் இறைவா?
இப்படியான‌ பிறப்பைத்தான்
அறுக்கிறீரா?

திங்கள், 1 ஜூன், 2026

பிறப்பறு - 1

இன்று
வெறுப்பேன்
நாளை காதலால்
திளைப்பேன்
பாவம்‌
இப்படியானது
இம்மனதின் ஆடல்

அதற்காக
அணைந்து போகச் சொல்வதா?

ஆகட்டும்
உயிர்ப்பின் சுடர்
மேலும்‌ செழுமைகொள்ளுமெனில்
வாழ்வின் சோதி
கொளுந்துவிட்டெழுமெனில்
கொள்கிறேன்
அம்மரணத்தை

சனி, 30 மே, 2026

நுன் கடல்

அலை பின்வாங்கியபின்
நீர்மை பின் வாங்குவதைக் கண்டென்
வழிந்து செல்லும் நீர்
மணலில் சிறுகோடுகளால்
கோலமொன்று இட்டிருக்கக்
கண்டேன்
அலைசென்றபின்னான
நீர்மையில்
சிவந்த வான் தீற்றலாய்
விழக் கண்டேன்
நண்டுகளிட்ட துளையை
அலைமூடி சிறுதுளையாக்கக் கண்டேன்
நிலவின் நிறத்தில்‌
மகவின் உள்ளங்கையளவு நண்டொன்று
எட்டுக்‌ காலகள்
இரண்டு கைகள்
இரண்டு கொம்புகள்
கைகளால் மணற்துகளை அள்ளி
உண்ணக் கண்டேன்
இப்படித்தான் கண்டேன்
பெரிதினும் பெரிதானவை
சிறிதினும் சிறிதாய்
ஆடல் கொள்வதை

வெள்ளி, 29 மே, 2026

எழில்தரு மாயம்

சொல்லப்பட்டுள்ளது
இது மாயப்பிறப்பென்றும்
அதை அறுப்பவன் அடி
போற்றென்றும்

எனக்கோ
பிறக்க வேண்டும்
மீண்டும்
மீண்டும்
ஓயாமல்

பின் பெருக வேண்டும்
அள்ளி அள்ளி
எடுக்க எடுக்க
குன்றா குறையா
பெருஞ்செல்வமனெ
இம்மாயம்

வியாழன், 28 மே, 2026

சிறை

நாயிற் கடையேன்
எத்தனை சரியான
பதம்

அதை சொல்லிநடித்து
இன்னும் கடையேன்
ஆவதில்தான்
எத்தனை வீழ்ச்சி

நான் யார் - 27

இசையென்பது
இன்னொலியல்ல
உணர்வுகளின்
நடனமுமல்ல

இசையென்பது
ஆழ்தியானமொன்றின்
மூச்சொலி

நான்
இசை

புதன், 27 மே, 2026

நான் யார் - 26

வானென்பது
நிறமல்ல
சென்று சேரும்
இடமுமல்ல
புடவி சூழ விரிவுமல்ல

வானம் என்பது
இன்மை

நான்
வானம்

செவ்வாய், 26 மே, 2026

நான் யார் - 25

கடல் என்பது
அலையன்று
காற்றுமன்று
பெரும் உயிர்த் திரளன்று

கடல் என்பது
வானை பிரதிபலிக்கும்
ஆடி

நான்
கடல்

திங்கள், 25 மே, 2026

நான் யார் - 24

மழை மேகத்திலில்லை
நீரில் எழும் ஆவியுமில்லை
பருவக் காற்றில் இல்லை
மழை என்பது
ஒரு ஆழ்கனவு

நான்
மழை

ஞாயிறு, 24 மே, 2026

வெள்ளி, 22 மே, 2026

நான் யார் - 21

நான்
இறந்தபின்
நீ எங்கு செல்வாய்?
எதுவாக  இருப்பாய்?
அது
நான்

புதன், 20 மே, 2026

நான் யார் - 19

புலரியும்
பறவைக்குரலும்
ஒளி உச்சாடனமும்

நன்பகலும்
நீலவானும்
அதில் மிதக்கும்
புள்ளும்

நடுநிசியும்
பெருங்கடலும்
அதில் ஒளிரும்
நிலவொளியும்

செவ்வாய், 19 மே, 2026

நான் யார் - 18

எங்குமிருப்பதாய்
சொல்லப்படினும்
இக்கணம்
சுவசமாகவும்
உணரப்படுவது

வெள்ளி, 15 மே, 2026

நான் யார் - 14

பெருகிப் பிரவாகிக்கும்
பேரரவத்தை
ஊடருத்து
அலுங்கா ஓயா
ஒரு நாதச்சொல்

வியாழன், 14 மே, 2026

நான் யார் - 12

இந்த மலைக்குடிலில்
யாருமில்லை
உடன் இருப்பது
உடலும் மனமும்தான்

புதன், 13 மே, 2026

இனிமைப் பட்டாவளி

இந்த பொன்னொளிர்
காலை இனிமையானது
உணவு இனிமை
உடலில் இனிமை
மனிதர்களில் இனிமை
காமம்‌ இனிமையுடைத்து
உழைப்பு இனிமை
சிறு ஆசைகள் இனிமை
ஆசைகள் பிறப்பிக்கும்
பேரங்கள் இனிமை
விலகுதலில் இனிமை
சேர்தலில் இனிமை
உன் குதிங்கால் வெண்மை
அரற்றும் கொலுசுக்கு
திரும்புதல் இனிமை
வான்சுடர் அணையும் பொழுது
இனிமை
இல்லத்தை மென்போர்வையாய்
அணைக்கும்‌ அகல்சுடரொளி
இனிமை
மாலையை நீண்ட ஒரு கோடாக்கிக்
கடக்கும்‌‌கிளிச்சத்தம் இனிமை
இருத்தல் இ னி மை
இச்சொல்லின் ஒவ்வொரு
பதத்தையும் அறிந்துதான்
சொல்கிறோம் யாம்
பேரினிமையின் பெருங்கடலாய்
ததும்பும் பெருங்காலமருளிய
இச்சிறுவாழ்வு இனிமையுடைத்து

நான் யார் - 11

இதோ
காலிப்பாத்திரம்.
எதனால்
நிறைந்துள்ளதோ
அது

செவ்வாய், 12 மே, 2026

நான் யார் - 10

அணுவிலும்
அண்டத்திலும்
துளியிலும்
கடலிலும்
துகளிலும்
மலையிலும்
நிறைந்து கிடக்கும்
பேரின்பம்

நான் யார் - 9

சூல்கொண்டு
கருவான முன்னும்
நீரினில் மூழ்கி
நினைப்பொழிந்த பின்னும்
எஞ்சி 
நிறைந்த 
ஒன்று

நான் யார் - 8

பிறந்தகணம்
வந்ததல்ல
மரணம்‌
கொள்வதுமல்ல

நான் யார் - 7

எதிலும்
நித்யமாய்
துலங்கும்
நுட்பம்

திங்கள், 11 மே, 2026

நான் யார் - 6

இன்று உடல்
நாளை
சிதைச்சாம்பலில்
பூக்கும்
சிறு மலர்

நான் யார் - 5

சொல்‌
பேதமுடையது
நான்
பேதமற்றது

நான் யார் - 4

இருக்கும் வரை
நான்
இறந்தபின்னும்

அதே 
நான்

நான் யார் - 3

இன்று உடல்
நாளை
எள்ளாலான சிறு பிண்டம்

ஞாயிறு, 10 மே, 2026

நான் யார் - 2

நான் என்பது
உள்ளங்கை அளவு நீர்தான்
துளி ஆக்கினால் சில ஆயிரம்
துமி ஆக்கினால் சில கோடி
மற்றபடி
நான்‌ என்பது
உள்ளங்கை அளவு நீர்தான்

பெரிய அன்றாடங்கள்

ஆம்‌‌
பலகோடி ஆண்டுகளாய்
நிகழ்வதுதான்
ஆனால் நாளை
இவை நிகழெந்தே ஆகவேடுமென்று
எந்த நிபந்தனையுமில்லை
மேலும் நடந்தே ஆகவேண்டுமென்பதுமில்லை

மலர்தல்

ஒரு கவிதையை
நாளைக்கு வைத்தேன்
இன்னுமொரு கவிதையை
நாளை மறுநாளுக்கு
எழுதியவற்றையெல்லாம் காலத்திடம்
சமர்ப்பித்திபின் எஞ்சியது
கவிதை பிறந்ததன் குளிர்
கடல் மேல் நிலவொளிரக் காண்கையில்
அகம் தளும்பும் அதே குளிர்

பேரம்

நீரின் மேலெழுந்து
பெருமீனாய் குதிப்பதற்குள்
உன் கிரணத்தின் சுடர்நீராடல்
கண்ட கணம்
நீரின் கடும் ஆழம்‌ நோக்கி
இழுத்துச்செல்லப்படுகிறேன்

ஒரு மலர் கண் விழித்து
கனிந்து நோக்கும்‌போது
மும்முரமமாய் அதன் மூடிய கண்களை
வரைந்துகொண்டிருக்கிறேன்

சொல்லை அருந்தியானபின்
மௌனம்‌ திரண்டு நிற்கும்
கோப்பையை
கைவிடுகிறேன்

சுட்டும்‌ திசையைவிட்டு
சுட்டும் விரலை எட்டிப்பிடிக்கிறேன்

வனத்தின் ஆழம் தவிர்த்து
ஆழம்‌ சுட்டும் அத்தனை சாதனங்களையும்
திரட்டி வருகிறேன்

சேர்த்த காசுகளை எண்ணிக்கொண்டு
பெருலாபத்தின் கனவுகளுடன்
வணிகனாய்
என் பேரங்களை துவங்கிவிட்டிருக்கிறேன்

சனி, 9 மே, 2026

ஒரு மௌனமோ
கனிதலோ
நிகழாத நாள்
கண்ணீரோ
ஒரு தொடுகையோ
நிகழாத நாள்
மலரைக் காணுதலோ
மழையில் பூரித்தலோ
நிகழாத நாள்
இந்நாளை
ஒரு‌‌ நிகழாத நாளாக
ஆக்கமுடியாது
அதன் நிகழ்வுகளை
மாற்றவும் முடியாது
காலத்தை அவ்விதமாக
இந்நாளில் நம் ஒரு நாள்
சந்திக்கையில்
ஒரு பாறையைப்போல்
கிடக்கும் நாளில்
வெறுமனே வருகைக் கையெழுத்திட்டு
இல்லம் திரும்புங்கள்
பேரேடு
நிகழும் நாளுக்கான கையெழுத்தையும்
நிகழா நாளுக்கான‌ கையெழுத்தையும்
ஒன்றே போல் ஏந்தியுள்ளதை
நம் மனம்‌ ஒரு போதும்
ஏற்கப்போவதில்லை

அறியா அருள்

இன்று நீ
அருளாத நாள்

இந்நாளில்
நான் அதிகம் நடந்தேன்
பெரும் மரங்களை
அதன் கிளை அமைப்பை
பட்டைகளின் வெடிப்புமுறையை
பார்த்தேன்
யானைக்கூட்டமொன்றுடன்
சற்று தூரம்‌ உடன் சென்றேன்
வானத்தின் நிறமாற்றங்களை
துள்ளியமாய் அவதானித்தேன்
ஒரு மலரை அதன் ரேகையோட்டத்தை
அதன் நிற ஒழுக்கை
வடிவ வழிவுகளை
முழுமையாய் உள்வாங்கினேன்
பதினாறு பட்டாம்பூச்சிகளை நாளின்
வெவ்வேறு பொழுதுகளில்
பின்தொடர்ந்து வழி தொலைந்தேன்
ஓடையின் ஒலியை
உடலெல்லாம் நிறையவிட்டேன்
இருபத்தியிரண்டு
சிலந்தி வலைகளை நகலெடுத்துக்கொண்டேன்
அந்தி வானின்
மிக மெல்லிய தழலாட்டத்தை
கண்டு கண்டு அறிந்தேன்
மீளக்குடிலடைந்து சிற்றகல் ஏற்றி
சுடரால் அகம் நிறைத்தமர்ந்தேன்

இருள்சூழ்பெருங்கானகத்தில்
சுடராடும் இவ்வகம்
காத்திருக்கும்
உன் சித்தம் என்னவானாலும்
இன்று
லேசாக மழை பெய்தது
சொல் எதுவும் உதிக்கவில்லை
கூடடையும்‌ பறவையொலியால்
நிறைத்துக்கொண்டேன்
மழை நாளில்
பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை
கிளை அலுங்கவில்லை
நீங்கும் சிறு குருவியின்
இறகு பட்டு
இலையொன்று நலுங்கியது விட்டு
வேறெந்த அசைவுமில்லை
அத்தனை மென்மையில்தான்
துளி மகரந்தம்
சிறகு கொண்டெழுந்தது
மெல்லிய பறவையொலிக்கிடையில்
வானத்தில்
விருட்சங்கள் பறக்கின்றன

வெள்ளி, 8 மே, 2026

நீலம் போதுமானது
வானத்தை உருவாக்க
வெண்மை போதுமானது
மேகம் செய்ய
கருமை போதுமானது
இரவை கவியச் செய்ய
பச்சை நிறம் போதுமானது
வனத்திற்கு
எப்படியோ அருவியையும்
விழும்‌ நீரின் புகைப்பெருக்கையும்
பிறக்கச்செய்தேன்
கித்தானில்
நீ படைத்ததை
பார்த்துப் பார்த்துச் செய்கிறேன்
தூரத்து அந்தி வானில்
சிறு புள்ளை
ஒற்றைக் கரும் புள்ளியில்
சிறகடிக்கச் செய்தேன்
உன் அதிகாலைக் குருவிகளிடம்
என் அந்தியின் பறவை
ஒரு சொல்
பேசிவிடுமல்லவா
நிலவொளி
இலைகளின் வழி
உடைந்து சிதறிக் கிடக்கிறது
இலையசைந்தால்
நிலவு அசையும் மாயம்
நிகழ்கிறது
இந்த இரவின் ஆன்மம்
பறவைக்குரலில் ஏறி வந்தது
எங்ஙனம்?
எதன் தனிமை இங்கு
கிடப்பது
எதன் முழுமை இங்கு
பெருகிக்கொண்டிருக்கிறது
கடல் மேலும்
மலை மேலும்
இச்சிறு இலைமேலும்
கிடக்கும் நிலவே
யாரும் தொடாத
பள்ளத்தாக்கின் ஆழத்தை
நீ மட்டும் தீண்டுகிறாய்
எதன் தனிமையின் மீது
விழுகிறது முழுமை
எதன் ஆழத்தில்
மிதக்கிறது வான்
நிலவு ஒளியை வீசி
கட்டியிழுத்துச் செல்கிறது
பூமியை
கலங்கரை விளக்கின் ஒளி
எக்கடலின் மீது விழுகிறது?
உன் பதில்களில்
ஏதோ ஒன்று
கடைத்தேற்றுமென
காத்துள்ளேன்
நீயோ சுவாசிக்கிறாய்
காலத்தின் பெருவீதிகளை
நிரைத்து நிரைத்து
இன்று மாலை
வானம் மஞ்சளாய் இருந்ததும்
மேற்கில்‌ நெருப்பின்
பிழம்பாய் கொதித்ததையும்
வரிசைக்கட்டி வானில் நடந்த
பறவைகளையும்
யாரும் பார்க்கவில்லை
சொல்லாமல் கொல்லாமல்
கண்வழி உள் நுழைந்த
இம்மாலையை
வாவென்று சொல்ல நாவெழாமல்
நின்றிருந்தேன்
விடைபெற்றபோது
மேற்கும் அறியாமல்
புள்ளும் அறியாமல்
ஏன் மஞ்சளும் கூட அறியாமல்
துளி எடுத்து
சிற்றகலில்
என் சிற்றில்லில்
சுடராய் வரைந்துகொண்டேன்

வியாழன், 7 மே, 2026

மலர்ந்தபின்
சொல்
விதைக்குள்
அது மௌனம்
இன்னும்‌
ஒரு நாளுள்ளது
இன்னும்
ஒரு மணி நேரமுள்ளது
இன்னும்
ஒரு நிமிடமுள்ளது
இன்னும்
ஒரு நொடியுள்ளது
கடந்தபின்னும்
காலம்‌ அப்படியே உள்ளது

தாகூர் ஜெயந்தி

 இன்று 07.05.2026 தாகூரின் பிறந்தநாள். கீதாஞ்சலி என் மனதுக்கு ப்ரியமான நூல். இமயத்தைக் கண்டு உளம் நெகிழ  நமக்கு மொழி தேவையில்லை. கவிதையின் ஆன்மத்துக்கும் அது பொருந்தும்.














'அமர் ஷோனார் பாங்ளா' எனக்குப் பிடித்த பாடல். வங்கப்பிரிவினைக்கு எதிராக சுவதேசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டபோது 1905ல் தாகூரால் எழுதப்பட்ட பாடலிது. பின்னர் 66 வருடங்கள் கழித்து 1971ல் வங்கப்போரின் போது 'ஸ்வாதின் பங்ளா பேடர் கேன்ந்ரா' எனும் வானொலி நிலையத்தால் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. ஆக இது ஒரு போரின் கவிதையும் கூட.1972ல் பங்களாதேஷின் தேசிய கீதமாக்கப்பட்டது.


அப்பாடலின் மொழிபெயர்ப்பு கீழ்வருவது,

பொன்னொளிர் வங்கம்

வங்கமெனும்‌ பொன்னே
உன்னைக்‌ காதலிக்கிறேன்

என்றும் உன் வானம்,
உன் தென்றல் 
என்னை லயத்தில் நிறுத்தி
ஆன்மத்தை குழலென்றாக்கியது

வசந்தத்தில், என் அன்னையே
அலையாத்திக் காடுகளின் மணம்
வெறியெழும் இன்பத்தில் நிரைக்கிறதென்னை
இலையுதிர்க் காலத்தில், எம்‌ அன்னையே
நெற்கொழிக்கும் வயல்களில்
கதிரெங்கும் இனிய சிரிப்பொன்று
படரக்காண்கிறேன்

ஆ, எத்தனை அழகு 
எத்தனை வண்ணம்
என்னவொரு பிரியம்
என்னவொரு கனிவு
நதிக்கரையிலும்
ஆலமரத்தினடியிலும்
எத்தனை அழகாய் இட்டுள்ளாய்
மணற்விரிப்பை

என் அன்னையே
உம் உதட்டின் சொல்
என் காதுக்குத் தேன்

துன்பத்தின் சாயல்
உன்‌ முகம் படிகையில்
ஓ என் அன்னையே
இதயம்‌ கண்ணீரால் நிறைகிறது

பொன்னொளிர் வங்கமே
உன்னைக் காதலிக்கிறேன்

நீ ஏற்றிய அகலில்
அதன் செதில் ஒளிர்கிறது
ஒரு நாள்
நீ இட்ட கோலத்தில்
கோடுகளோடு வளைந்து
கிடந்தது
இமையாக் கண்களும்
ஓயா துடிநாவும்
என்‌ கனவுள்
வந்துவிட்டது
எத்தனை நஞ்சென்றறியேன்
அன்பே
நீ ஆசையாய் வளர்க்கும்
சிறு மலரின் தேன் துளி
விஷமுறிக்கும்தானே?

வனமெங்கும்  நிறைந்த
வசந்ததின் மலர்களாய் நின்றது
மென்மையாய் மிதந்து வந்து
நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது
அசையா வேர்களில்
தியானித்திருந்தது
வான்தொட எழுந்த
பெருவிருட்சத்தில்
நடனமாய் இருந்தது
பொழுதணையும் வேளையில்
நாளெல்லாம்‌வெட்டிய
விறகுகளை சேர்த்துக்கட்டி
பரிசலில் நதி கடக்க
இருளில் இருளாய்
காட்சியானது வேழம்
வனமென ஆகிவந்த
துளியாய்

புதன், 6 மே, 2026

முட்கள் இதென்றும்
மலர்கள்‌ இதென்றும்
விதையில் எங்ஙனம்
வகுத்துள்ளாய்?
நகரம் உயிர் நீங்கும்
விலங்கைபோல் உச்ச விசையில்
துடித்துக்கொண்டே இருந்தது

பெருஞ்சாலையெங்கும்
கிளையும்‌இலையும் சேறுமாய்
அடித்துச்செல்லும் வெல்லம்போல்
இறுகப்பற்றிய
மக்கள் ஊர்ந்துகொண்டிருந்தார்கள்

ஒளி மங்கிய இடங்களில்
பேரங்களும்
இருள் அடர்ந்த மூலைகளில்
இச்சைகளுமாய்
பொருள்படுவது பொருளென்று
மட்டும் ஆகிவிட்ட
இப்பெருநகரின் மேல்
அத்தனைக் கருணையுடன்
ஒரு வலசைப்புற்கூட்டம்
கடந்து செல்கிறது

நான் யார்?

சொல்‌ பிறந்தது
உன்னில்
சொல் சென்றோய்வது
உன்னில்
இடைப்பட்ட அச்சிறுகாலம்
அகலென ஏந்திய
சொற்சுடரொளியில்
ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால்
கணம் வாழும்
பித்தன்

செவ்வாய், 5 மே, 2026

மலர்கள்
மலர்வதின்
மாயத்தை
தியானிப்பதில்
கழியட்டும்
இச்சிறுவாழ்வு

அக்கரம்

கடலில் கோடி
உயிர்கள் உள்ளது
வானத்தில் இக்கணம்
கோடி‌ பறவைகள்
பறக்கின்றன
நிலமெங்கும் உயிர்களால்
நிறைந்துள்ளது
அனைத்தையும்‌ தொடுத்துக்
கோர்த்த கரமே
எவ்வுயிர்மலரை
எந்நாரில் கோர்த்துது
சரமாக்கிக்கொண்டுள்ளாய்
எனது என
சொல்லிக்கொண்டிருந்தேன்

தனது என‌
ஏதுமில்லை
என்றலர்ந்துள்ளது
மலர்

ஒலியுரை இறை

பருவம்
காலம்
மலர்கள்
நதி
கடல்
மலை
குளிர்
மழை
வெயில்
புள்
யானை
மேகம்
அருவி
குழவி
புல்
இலைகள்
வேர்
அன்பு
காதல்
கருணை

சொல்‌‌ சொல்
சொல் சொல்

சொற்களால்
நிறைந்துள்ளது
உலகம்

அர்த்தமேதுமற்ற
அனைத்துமுரையும்
ஒரு ஒலியில்
ஏன் நீ
குடிகொண்டுள்ளாய்

திங்கள், 4 மே, 2026

இலையோ மலரோ
உதிர்ந்துதானே போகிறது
உதிர்வதற்குள் பறக்க வேண்டும்
எரியும் நட்சத்திரங்களும்
பெரும்புயல் வீசும் கிரகங்களும்
உலவும்
அம்மோனப்பெருவெளிக்குள்
பறக்க வேண்டும்
சிறகென்பது
இச்சிறுகூட்டை வானங்களுக்குள்
திறந்துவிட
ஒரு காலத்தில்
கடலுள் திளைத்த மீன்கள்
வலை சிக்கி
துடித்திறந்து
நிலைத்தபெரும்கண்ணுடன்
திறந்தசிறு வாயுடன்
கிடக்கின்றன
அன்பே
நீ அழைத்தால் போதும்
இவ்வுடலை
உனக்கு
காணிக்கையாய் இடுவேன்
உடலை
ஆடையாய் அணிந்துள்ளேன்
புறத்தை புறம் தீண்டுவதாய்
வெயிலை மழையை
குளிரை நீரை நெருப்பை
அறிகிறேன்
அகத்துளிர்த்த அம்மலரொன்றை
எவ்வகத்தின் வளிக்கரம்
தீண்டுமோ?

ஞாயிறு, 3 மே, 2026

வெகு நாள்‌கழித்து
மழைநாளின்
குளிராக வருகிறாள்
என் கடலாழம்
பூத்திருக்கும்
மலரை அவளுக்காக
கொய்து வருகிறேன்
இத்தனை குளிராக
என் மேல் கவிபவளே
என் மலர்களை
வாங்கிக்கொள்ளடி
வைரக்கற்களாய்
விழுகிறது
ஆலங்கட்டி
கையில் எடுத்து
குளிரை உணர்
கைகளில் வானம்
வழிந்தோடும்
அதிசயத்தை
நிகழ்த்திக்கொள்
கண்மூடி கண்டுகொள்
பூமியை 
மாற்றி மாற்றிப் பார்க்கும்
அம்மாபெரும் கண்களை

திங்கள், 20 ஏப்ரல், 2026

நுன் கடல்

அலை பின்வாங்கியபின்
நீர்மை பின் வாங்குவதைக் கண்டென்
வழிந்து செல்லும் நீர்
மணலில் சிறுகோடுகளால்
கோலமொன்று இட்டிருக்கக்
கண்டேன்
அலைசென்றபின்னான
நீர்மையில்
சிவந்த வான் தீற்றலாய்
விழக் கண்டேன்
நண்டுகளிட்ட துளையை
அலைமூடி சிறுதுளையாக்கக் கண்டேன்
நிலவின் நிறத்தில்‌
மகவின் உள்ளங்கையளவு நண்டொன்று
எட்டுக்‌ காலகள்
இரண்டு கைகள்
இரண்டு கொம்புகள்
கைகளால் மணற்துகளை அள்ளி
உண்ணக் கண்டேன்
இப்படித்தான் கண்டேன்
பெரிதினும் பெரிதானவை
சிறிதினும் சிறிதாய்
ஆடல் கொள்வதை

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...