புதன், 22 ஜனவரி, 2025

வான் மட்டும் அறியும்

இந்த சாலை
இத்தனை நீண்டு
நீண்டு நீண்டு
செல்லத் தேவையில்லை

ஒரு இசைத்துணுக்கைப்போல்
வெடித்து கரைந்திருக்கலாம்

மலரில்லை
மௌனமில்லை
மழையில்லை
எனும் புகார்கள் என்னிடம் இல்லை
நொடிகள் இத்தனை
கனமாய் இருந்திருக்கவேண்டாம்
உபயோகத்திலில்லா தண்டவாளங்களில்
நிற்கும் செடி மண்டிய
ரயில் பெட்டிகளை
பெரியவர்களுக்குப் பயந்து 
குழந்தைகளும் தவிர்த்து விடுகின்றன
பெருகும் கனவுகளை
ஓவியமாக்கிக் கொண்டிருக்கிறேன்
ச்சோவெனப் பொழிகிறது மழை
ஒரு அறிவிப்புமில்லை
ஒரு சில்காற்றுமில்லை
இந்தத் தீடீர் மழையில்
என் ஓவியங்கள் கரைவதைப் 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உருவங்கள் கரைந்து
உரு சிதைந்து
வெறும் நிறத்தின் வழிவாகும்போது
உண்மைக்கு அருகில் வருகிறது
உண்மையை வானம் மட்டுமே அறியும்
உண்மையை வான் மட்டுமே வரையும்
மற்றபடிக்கு
மிகச்சிறிய உடலிது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...