அன்பே
வானம் அழைக்கிறது
அதன் ஸ்படிக உண்மைகள் ஒளிர்கிறது
நாம் எழுதிய பொய்களின் புத்தகத்தை பூமியிலேயே
விட்டுவிடச் சொல்கிறது
மேலும் நான் எனும் சொல்லுக்கு அங்கு அனுமதி இல்லையாம்
தர்மம் அறம் ஆகியவற்றிற்கு பொருளில்லை
பொய் கீழமை கயமை ஆகியவற்றிற்கும் அதே கதிதானாம்
முக்கியமாக கண்ணீரில்லை
சொல்லில்லா வெளியை ஓங்காரம் நிறைத்துள்ளது
ஆனால் நான் இப்போது உன்னைப் பிரிந்தாக வேண்டும்
இப்பிரிவுக்கு நீயோ நானோ காரணமாக வேண்டும்
நாம் என்ற பொதுமை பேப்பரில் எழுத்தாவதற்கு மட்டும்
இப்பிரிவு பூமியில் அல்லவா நிகழ்கிறது
வானத்திலிருந்து வெகு தூரமல்லவா பூமி
கண்ணீர் பெருக்கு
நாம் அழுவோம்
எஞ்சும் வஞ்சங்களை நம் கைக்குட்டைகளில்
சிறு மலராய் பின்னி வைப்போம்
என்றோ ஒரு நாள் அதைக் கண்டு ரசிக்கலாம்
நம் 'நான்'களுக்கு மத்தியில்
தர்மம் அறம் பாவம் புண்ணியம் என
எல்லாவற்றையும் இழுத்து வருவோம்
நம் சிக்கலான கணக்குகளின் மேல்
கடவுள் நர்த்தனம் புரியட்டும்
எந்த இரு எண்களை கூட்டினாலும் இன்ஃபினிட்டிதான் விடை வானத்தில்
நம் எண்களுக்கு உலகெலாம் ஒப்புக்கொண்ட வரையறைகள் உண்டு
ஆனால் எந்த இரண்டு எண்களைக் கூட்டுவதென்பதில்
நாம் பெரும் பெரும் போர்களை நிகழ்த்திவிட்டிருக்கிறோம்
இப்பூமியின் மாபெரும் போர் கூட
சிறு பிசிரலையும் உண்டு பண்ணவில்லை
வானத்தின் ஓங்காரத்தில்
ஆனால் சொன்னதுபோல்
நாம் இப்போது பூமியில் இருக்கிறோம்
வானத்திலிருந்து வெகு தூரத்தில்
மேலும் சிலர் மரணத்தை விடவும் கொடிதாய்
ஒன்றைச் சொல்கிறார்கள்
வானம் என ஒன்றில்லை என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக