சனி, 25 ஜனவரி, 2025

என்னுள்

என் காலம்
வேறோரு கடிகாரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறது
நகரம் பெருகிக்கொண்டிருக்கும்
காலையில் நான்
பால்கனியில் வசிக்கும்
புறாக்களை நலம் உசாவிக்கொண்டிருக்கிறேன்
வெயில் கலைந்த எறும்களைப்போல்
திரியும் திரள் மீது
முழு எடையுடன் விழும் பொழுதில்
நான் தெரு நாய்க்குட்டிகளை
கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்
எது நிறைந்தால் ஆசுவாசமடையுமோ
யாரால் ஆற்றுப்படுத்தமுடியுமோ
அவருக்கு ஒரு நீண்ட 
கடிதம் வனைகிறேன்
ஒன்றுப் பலவாகி
பலது இக்கதியாகிப்
பெருகும் சூட்சுமத்தை எழுதும்போது
அறிகிறேன்
அகமெல்லாம் ஒலிக்கும்
அத்தனை மெல்லிய அழைப்பினை
அதனை செவி மடுக்காமல்
ஓடச்செய்யும் புறத்தின் பெருங்குரலை
நூறு மலைகளுக்கு அப்பால் 
பதைக்க பதைக்க திசை தவறிய
மந்தையை
அழைக்கிறேன்
சங்கேத மொழி ஒன்றால்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?