வெள்ளி, 31 டிசம்பர், 2021

நடனம்

புற்களைப் போல்
இலைகளைப்போல்
இலை சூடிய விருட்சம் போல்
பட்டாம்பூச்சி போல்
மண்புழு போல்
பறவைகள் போல்
பெருங்கடல்‌வாழ்
மீன்களைப்போல்
வால் குழைக்கும்
நாய்களைப்போல்
பெருங்காது உலற்றும்
யானைகளைப்போல்
தினம் தினம்‌
கணம்‌கணம்
மலரும் மலர்களைப்போல்
இச்சிறுடலுக்கு
எது சாத்தியமோ
எந்த அசைவுகள்
நடனமாகிறதோ
அவற்றைக் கொண்டு
நடனமிடுவதன்றி
செய்வதற்கு
ஏதொன்றுமில்லை

அணிதலும்‌ கலைதலும்

 உன் கொலொசொலிதான்
பூமியை ஆக்கியது
ஜீவராசிகளின் மூச்சாகியது
மானுடரின் கண்ணீரும்
நகையும்
முரண்களும்
பாவங்களும்
சலனங்களும்
எல்லாம்
எல்லாம்
உன் கொலுசொலியாய் கேட்கிறது
இப்பூமியின்
கடைசி மூச்சு
உன் கொலுசைக்கலைந்து
உன் மேஜையில்
சரித்து வைப்பதான
கடைசி ஒலி

கைவிடுதல்

இந்தக் காலையில்
இதன் ஒளிக்காக
இதன் மௌனத்துக்காக
இதன் பறவைகளுக்காக
இந்த உலகம் சற்றெ சூடியிருக்கும்
பொருமைக்காக
வாசல் தெளித்தலின்
நீர்‌ஒலிக்காக
வளைத்து நெளித்து
பார்க்கும் ஒவ்வொரு தரமும்
வியப்பில் ஆழ்த்தும்
கோலமிடும் பல்லாயிரம்
கரங்களுக்காக
தூக்கம் களையாத
சிசுக்களின் கனவுச் சிறுநகைக்காக
பனியில் உடல் உதறும்
நாய் க் குட்டி க்காக
ஆயிரம் ஆயிரமாயிரமாண்டுகளாக
இப்பூமியை அறியும்
ஜீவராசிகளுக்காக

கைவிடுகிறேன்
இன்பம் என்றாகாத
ஒவ்வொன்றையும்

செவ்வாய், 23 நவம்பர், 2021

வானத்திற்கு
ஒழுங்கேது
வரையரையற்ற விரிவு
நிறம் இன்னதென
சொல்லமுடியாத
தன்மை
பெரும்கூரைமட்டுமா
அடிநிலமுமா
ஒரு பெரும்
சதுரமா
முக்கோனமா
என்ன வடிவுக்குள்
இத்தனை
கிரகங்கள்
அண்டங்கள்
இந்த வரம்பற்ற வானத்தில்தான்
அவ்வளவு ஒழுங்காய்
ஒரு குருக்குவெட்டுக்கோடாக
அமைத்துக்கொண்டு
சிறகடிக்கிறது
ஒரு புற்கூட்டம்

திங்கள், 22 நவம்பர், 2021

இவ்வந்திக்குள்
கடல் நோக்கிச் செல்லும்
பறவை
கடல் மூழ்கும்
சூரியனின்
செம்மை சூடிற்று
அலைசரிகை
எங்கும்
செம்மையொளி
அலைத்துமிகள்
தீத்துளியென ஒளிர்ந்து
பின் நீரானது
கரை நிற்கும்
அவள் தீச்சுடரென
அம்மாலை
பற்றி எரிந்தது
ரம்மியமான செஞ்சுடரென

ஞாயிறு, 21 நவம்பர், 2021

விருட்சங்கள்
மண் துளைத்து
வேர் வளர்கிறது
இலைகள் வெளி துளைத்து
காலூன்றி நிற்கிறது

கடல் பெரும் கூரையென
அந்தரத்தில்
தளும்பி‌ நிற்கிறது

மீன்கள்
ஏரியின் ஆழத்திலா?
வானின் விரிவிலா?
வலசைப் பறவைகள்
வானின் மேலா
கடலின் கீழா

பூமியை விரித்து
கூரை ஓவியமென
பதித்துவிட்டிருக்கிறார்கள்
வானம் கால் எட்டா
தூரத்தில்
பெருநிலமென
விரிந்துள்ளது

மேகம் கிழித்து
கீழ்நோக்கி விழுகிறது
ஒரு தலைகீழ் உதயம்

சனி, 13 நவம்பர், 2021

 ஒரு கணத்தை
என்ன செய்வது
இக்கணத்தை என்ன
செய்வது
ஒரு மலையின் விரிவுடன்
ஒரு மழைத்துளியின்
எளிய கணத்துடன்
ஒரு துளி ஒளியெனத்
தலும்பும்
ஒரு பெரும் எழும்பி
நிற்கும்‌அலையென
ஒரு மழைமேகக் கூட்டமென
மேல் கவிழும்
இக்கணத்தை
என்ன செய்ய?
ஒரு மலரை சூடிக்
காட்டுகிறாய்
அப்படியே இக்கணத்தையும்
எக்கணத்தையும்
ஒரு மலராக்கி சூட்டுவதன்
சூட்டிக்கொள்வதன்
எளிய சூட்சுமத்தையும்
 வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணமானது
பூக்களின் வண்ணம்
பருகி என்றாள்

பின்
கூந்தல் காற்றாடத் திரும்பி
வண்ணப்பூக்கள்
வண்ணமானது
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம்
உண்டு
என்று சிரித்தாள்

ஆம்
வண்ணங்கள் பறப்பவை
வண்ணங்கள் மலர்பவை
வண்ணங்கள் சிரிப்பவை
வண்ணங்கள் வண்ணமயமானதன்
கதையை மட்டும்
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்

 நீ அலுங்காத போது
காற்று அசைக்கிறது
கொலுசின் சிறுமணிகளை

காற்று அசையாத போது
மெலும் மென்மையாய்
அசைக்கிறது
உன் நடை

அச்சிற்றொலியின்
தூண்டில் வீச்சுக்கு
மனம்
எழுகிறது
ஆழ் கடலில்
நீண்டு தொடும்
கதிர்க்கரங்கள்
நோக்கி எழும்
கனவுக் குமிழிகளாய்

தத்வமஸி

 பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்

கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்

காட்டில்‌ஒரு மலர்
காடே ஒரு மலர்

மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை

வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்

இச்சொல் அடுக்கில்

நான் எது
எது நான்
 சிறுமியாய்
கன்னியாய்
பெண்ணாய்
பின் முதியவளாய்
நாள் தவறாது
பூப் பரித்து
சாமிக்கு இட்டவள்
விண்ணுலக வாயில் நின்று
பூமி நோக்கினாள்
உலகை சூழ்ந்த நீர்
இதழாகவும்
நடுவில் அமைந்த
நிலம் மகரந்தச்செரிவெனவும்
ஒரு மலரைக் கண்டாள்
பின் குதிங்கால் பட்டு
கொலுசொலிக்க
உள் சென்றாள்
விண்ணுலகின்
தன் முதல்நாள்
அன்றாடங்களுக்குள்
 எட்டிப் பூப்பரிக்கும்
சிங்காரப் பெண்ணே
நுணிக்கால் பாதம்
நிலம்விட்டெழவில்லை
இறக்கைகளும்
முளைக்கவில்லை
நீண்ட உன் கைகளில்
சரிந்து மேல்விழுந்து ஒலிக்கும்
வளையலன்றி வேறு
இசையெழவுமில்லை
ஆனாலும்
விண் நுன் கைகள்
சமைத்த பூக்கள்
உன் இத்தனை அருகாமைக்கும்
கிளை நீங்காத குருவி
இலை தன் உள்ளங்கை ஏந்தி
நடன பாவனையில் உன் மேல்
உதிர்க்கும் நீர்த்துளிகள்
மேலும்‌ மேலும்
நீ
மாலைச் சிறு நடையில்
சற்று நின்றவள்
ஸ்தம்பித்துப்போய்ச்
சொன்னால்
"வானம் என
ஒன்று இல்லையல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது நிறம்
மட்டுமல்லவா"
"ஆம்"
"நிறம் என்பது
கண்கள் காண்பது அல்லவா"
"ஆம்"
"கண்கள் இல்லாவிடில்
இவையனைத்தும்
எவ்விதமோ
இருக்கும் அல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது
நம் உலகமல்லவா
நாம்‌‌ காண்பது
ஒரு உலகம் மட்டுமல்லவா"
"ஆம் கண்ணே
இல்லாத வானின்
கீழ் நாம் நம்
கால்வேண்டும்
சிறு நிலத்தில்
இச்சிறுடலோடு
இக்கண்கள் எட்டித்
தொடும் காட்சிகளோடு
பல்லாயிரம் கனவுகளோடு
காதல்கொண்டுள்ளோம்"

வெள்ளி, 14 மே, 2021

ஆயிரம்
கிளை பரப்பி
கோடி இலை
விரித்து
கணமும்
அசைவின்மையறுத்த
பெருவிருட்சம்
ஒன்றின் கீழ்
அசைவின்றிக்
கிடக்கிறது
காற்று உண்ணும்
பாறை
நதியின் கைகள்
கச்சிதமாய்
கற்களை
செதுக்குவதில்லை

சந்தோஷமான ஒரு
சிறுவனைப்போல
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி
மிகச்சரி சமமான
எடையுள்ள
கூழாங்கற்களை
எங்குக்‌கண்டடைவாய்?
நம் துலாபாரமுள்
நடுவில்
ஓயப்போவதேயில்லை
அன்பைக்‌ குறிக்க
ஆயிரம் சொற்களிருந்தும்
இனி அவை வேண்டாம்

எண்கள்
எண்கள்
சந்தேகமற்றவை
பசப்பிலாதவை
பொருளின் எடையை
நீரின் அளவை
தூரத்தை
காலத்தை
விசையை
வேகத்தை
மின்சாரத்தை
பொருளின் மதிப்பை
நிலத்தை
மழையை
அண்டங்களுக்கிடையான
தூரத்தை
அளந்துவிடும் எண்
அன்பினை அளந்துவிடாதா

இத்தனை மில்லி‌
அன்புக்கு
அதே அளவு
அளந்து கொடு போதும்
எண்கள்
எப்படியாவது
சிக்கல்‌களை எல்லாம்
தீர்த்துவிடும்

நம் சிக்கல்கள எல்லாம்
அன்புச்சிக்கல்கள்தானே
 நாம் ஏன்
வெவ்வேறாக
உணர்கிறோம்
எப்போது தனிப்பட்டுப்போனோம்
எப்படி தனியர்களானோம்
நம் உணர்வுகள்
மற்றவர்களால்
உணரப்பாடாமல் போவது
எங்ஙனம்
எப்படி எதிரெதிர் உணர்வுகளை
சூடி களம்‌நிற்கிறோம்
நாம் காணத்தவறுவது
நாம் அறியாமல்‌ இருப்பது
நாம் உணராமல் இருப்பது
எதை

என் கண்ணீர்
அர்த்தமற்றது என்றுவிடாதே
ஒரு துளிக் கண்ணீரை
ஆயிரம் பொருக்குகளாக்கி
ஒரு பொருக்கில்‌ உறையும்
பசப்பினை மட்டுமாவது
உணர்

நம் உணர்வுகள்
ஒன்றாகட்டும்
அதிகாலை
ஒரு மென்மொட்டுப்
புன்னகயுடன்
கண்மலரும்
குழந்தை

அதிதூரத்து
கதிரொளியில்
பூக்கும் சிறு மென்மலர்
மலரலுங்காமால் ஆடும்
பட்டுபுச்சியின் வண்ணங்கள்
வண்ணங்களைக் கண்டு
துள்ளி ஆடும்
சிறு நாய்க்குட்டி
கொக்குக்கு முது காட்டி
சேற்றில் புரளும் எறுமை
பேசிவிட்டு ஓடித்துரத்தும்
அணில்
இன்னும் மறுபக்கம்
சென்றிராத நிலவு
அதிதூரத்தில் ஒரு நட்சத்திரம்
மழைத்தேக்கத்தில் கண்ணறியா
கோடி உயிர்கள்

கணம்‌ கணமும்
ஓம் ஓம்
என எழுகிறது யாவும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நாம் முத்தமிட்ட தருணங்கள்
களித்திருந்த காலங்கள்
ஊடி‌வெறுத்து சலித்து அலைந்து
பின்
முதற்துளி மழையென
நம்மில் நாம் பொழிந்த
பிரதேசங்கள்
கண்ணின் நீர்த்திரை
வழி மட்டும் காணக்
கிட்டும் ஓர் உலகம்
யாரும் காணா
தூரத்தில்
எத்தடமும் இன்றி
நம்மால் சிருஷ்டிக்கப்பட்டு
நம்மை சிருஷ்டித்து
நாம்
நாம்
நாம்
நாம்
எனும் ஓர் வெளி
அங்குதான் நிகழ்கிறது
மானுடம்‌ கனவெனக்
கண்ட அனைத்தும்
காற்று அலைக்கிறது
படகினை
பிணைத்திருக்கும்
முடிச்சுகள்
நெகிழ்வாலானவை
நெகிழ்வுகள்
கைவிடுகின்றன
பற்றிய அனைத்தையும்
நீர்த் தலும்பல்
மட்டும் ஒலிக்கிறது
எல்லா திசைகளிலும் 
இந்த சிறு காலம்தான்
இந்த சிறு காலம்தான்
மலர்கள்
நம்மிடம்
விடைபெற்றுச் சென்ற
இப்பருவம்
வரண்ட நிலத்தின்
வெப்ப மூச்சு
அனலாக அலையாடும்
இந்த சிறு காலம் மட்டும்தான்

ஒரு புலரியில்
விண்ணுளவும் புள்
காணும்
அங்கிங்கு நீர் பூப்பதை
மலர்கள் அலையாடுவதை
முத்தங்கள்
பதிந்த
ஆயிரம்‌வடுக்களை
வருடுகையில்
மெல்ல உதிக்கும்
மலரெனெ
மேலெழுகிறது
துளியாய் எஞ்சிவிட்ட
அன்பின் கனமொன்று

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

வியாழன், 29 ஏப்ரல், 2021

அறியமுடியாமையும் அழகும்

 


இதுவரை திரைப்படமெனெ எடுக்கப்பட்ட அனைத்தும் "மானுட நாடகம்" எனும் வகைமைக்குள் அடங்கிவிடும் அல்லவா? காதல் துயரம், உறவுகளின் அழகு, முறிவு, அழகு, ஆணவம், அடைதல், வெற்றி, சரிவு, கருணை, அறம், வீரம், வீழ்ச்சி  மீண்டும் மீண்டும் மானுடமும் அதன் உணர்வுகளும். வெறும் மானுடம் எனும் ஒரு வார்த்தைக்குள் அனைத்தையும் அடக்குவதில் சிறு அநீதி இருப்பதாய் தோன்றினாலும்..... மானுடத்தின் அடிப்படைக் கேள்விகள் மானுடம் மீறிய ஒன்ற்னை நோக்கியதுதான் அல்லவா? காலம், ஒட்டுமொத்தமாய் மானுடம் எனும் உயிர்த்திரளின் நோக்கம், எல்லையற்ற  வானம் நம்முள் எழுப்புவது ஒரு கேள்வியையும் தான்.

Terrence Malickக்கின் படங்கள் மானுட நாடகத்திலிருந்து பிரபஞ்ச நாடகம் நோக்கி ஊசலாடுபவை. Tree of Life அப்படியான ஒரு படம். ஒரு மரணத்திலிருந்து எழும் "God Where are you?" எனும் கேள்வியிலிருந்து திரை ஒரு பெரும் மாயவெளியாய் பிரபஞ்ச்சத்தின் தோற்றம் நோக்கிச் செல்லும். பின் மெல்ல ஒரு பறவை தரையிரங்குவது போல மீண்டும் மானுட  நாடகத்திற்குள் வரும். ஆனால் இப்போது நாம் காண்பது வெறும் மானுட நாடகமாய் இருக்காது. பிரபஞ்சத்தின் பெருந்திரை பின்புலமென  அதற்கு அமைந்து விட்டிருக்கும். இந்த ஊசலாட்டம் எந்த ஒரு கலையின் உச்சபட்ச சாத்தியம் என்றே கருதுகிறேன்.

"Voyage of Time" - பெயரே கவித்துவமானது , காலம் பயணிக்கிறது. காலத்தின் பயணத்தினூடே சிறு குமிழிகள்தான் அல்லவா கலாச்சாரங்களும் ஒட்டு மொத்த மானுட நாடகமுமே. காலம் நிகழ்த்தும் அதிபிரம்மாண்டமான ஒரு நாடகத்திற்கும், பின் நாம் மானுடர்கள் மானுட மைய நோக்கினால் காண விரும்பும் கால நாடகத்தின் சிறு தெரிப்பான மானுட நாடகத்திற்கும் ஊசலாடுகிறது Voyage of time".

எண்ணற்ற இதுவரை நாம் கண்டிராத உயிர்கள், பல கலாச்சரங்களினூடாக எடுத்துக் கோர்க்கப்பட்ட துணுக்குகள், திகைக்கச் செய்யும் அழகுடன் இயற்கை, ஆதி மானுடர் கொண்டு சிறு மானுட நாடகம், இசை என ஒரு மாயமான நிகழ்வை விட்டுச் செல்கிறது Voyage of Time.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமானது, குறிப்பாக நிலம் சார்ந்த இயற்கைக் காட்சிகளும், விண்வெளிக் காட்சிகளும். பின்னணியில் வரும் பெண் குரல் சொல்கிறது ஒரு இடத்தில் "We know nothing". ஆம் ஏதுமறியவில்லை நாம் ஏதும் அறியப்போவதுமில்லை. ஆனால் இயற்கை நம்முடன் தொடர்புருத்தும் ஒரு மொழி உள்ளது - அழகு. இந்த பிரம்மாண்ட காட்சிகள் அறியமுடியாமையின் திகைப்பை விட்டுச்செல்லும் அதே கணம் அழகென நம்முன் எழுகிறது. தோன்றுகிறது, அர்த்தத்தை அறியமுடியாது, அழகை உணர்ந்துகொள்ளலாம். 

Voyage of Time அடிப்படையான கேள்வியை மையமிட்டுக்கொண்டு நம்முன் இயற்கையென விண் என விரிந்திருக்கும் பிரம்மாணடத்தின் முன் நாம் உணரும் அறியமுடியாமையை, அது கணமும் காட்டிச்செல்லும் அழகை பேசும் ஒரு Classic படைப்பு.

வெள்ளி, 5 மார்ச், 2021

தூரத்து நீரில்
ஓங்கில்கள்
ஏக்கமுற ஒலிக்கிறது
கடலின் பல்லாயிரமாண்டுத்
தலும்பலை

பெருமீனொன்று
கடலுக்குள்
குமிழியடிக்கிறது

ஒரு கடலிலிருந்து
மற்றொரு கடலுக்குச் செல்லும்
படகொன்றின்
நுனியில்
சிறு கையளவுப் பறவையொன்று
விண்ணோக்கிச் சிறகெழுகிறது

கடலோரம்
கால் நனைய
நீ நடந்து
செல்கிறாய்
ஆகப்பெரும் சூரியன்
ஆகச்சிறிய உன் காதணியமைந்த
சிறு கல்லில்
ஒளிர்ந்தமைகிறது

திங்கள், 1 மார்ச், 2021

இருளாய்
ஒளியாய்
அருவியென
விழுந்து வழிகிறது
வானம்

பூமி 
அருவியில்
வீழும்
சிறு கல்லாய்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

மலர்மொழி

மலர்கள் சூரியனோடு
பேசிக்கொண்டிருக்கின்றன

உதயத்தின் மலர்கள்
ஒளியை சுவாசமெனக் கொண்டு
உச்சாடனத்தை
துவங்கிற்று

அந்தியின் மலர்கள்
அலையோய்ந்து
கிளையமைந்து
மோனத்தில்
தன்னைத்தான்
மீட்டின

அடிமுடியற்ற
வான்
கண்டது
இரு மலர்களின்
உரையாடலை

இருளும் ஒளியுமாய்
நீளும்
சிறு இல்லின்
மலராடலை

விண்ணோக்கி
எழும்
பூமியின்
சொல்பெருவெளியை

செவ்வாய், 19 ஜனவரி, 2021

காவியம்

மழுங்கிய வாட்களால்
நாம் ஆடும்
இந்நீள் யுத்தத்தில்
கழுத்துகள் அறுந்தோடவில்லை
குருதி பெறுக்கெடுக்கவில்லை

கொல்லும்‌துணிவின்றி
வாளுதறி இருகப்புல்லும்
அன்பின் முழுமையின்றி
நீள்கிறது
நீள்கிறது
போர்

எல்லாம் கூர்கொண்டு
முழுதமைந்து
முழுக்குருதியும்
அன்பின் முழுக்கண்ணீரும் சிந்தப்பட்டதெல்லாம்
யாரோ ஒருவன்
தீட்டிய
அம்மாபெரும் ஓவியத்தில்
மட்டும்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

 நீரின்றி
வற்றிய நிலத்தின்
வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்

ஆயிரம் காற்றுகளில்

பல்லாயிரம் பெருங்காலங்ளில்

மணலுரசும் நெருடலென
நொடிகளில்

இயற்றி நிற்கின்றது

தவத்தை

இருத்தலை

இருப்பெனும் தவத்தை

திங்கள், 11 ஜனவரி, 2021

யுகத்திற்குப் பின் ஒரு விடியல்

 இருளாழம் நோக்கி
இருளைத் திறந்து
இருளுக்குள்
செல்லும் உன்னை
ஆராதிக்கிறது
இருள்
ஒரு சுடரென

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?