மாபெரும் வண்ணத்துப்பூச்சி
ஒன்றுவனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது
எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது
வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்
வானத்திலோ
இருமையில்லை
நாம் இதற்கு மேல் பேசிக்கொள்ளவேண்டாம்
மௌனங்கள் தேரும் இசைக்கு நம்மை விட்டுவிடுவோம்
எதைக் காரணமாக்கியும் பறவைகளை
அதன் பறத்தலான இயல்பை முறிக்கவேண்டாம்
தன் தன் போக்கில்தான் உலகின்
நதியெல்லாம் கடல் சேர்கிறது
இத்தனை செய்த கரங்களக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
அணுவுக்கு ஒரு கரு உண்டு தெரியும்தானே?
கிரங்ககளின் மையமான சூரியனுக்கு ஒரு கருமையம் உண்டு தெரியும்தானே?
பால்வெளிக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
அண்டங்களுக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
இம்மையங்களுக்கெல்லாம் ஒரு மையமுண்டு தெரியும்தானே?
இத்தனை செய்த கரங்களுக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
சுடர் ஒளிரும்
நாம் மேலும் மேலும் மௌனம் சூடுவோம்
ஒரு கோடி வருடமாய்
வானத்தை அளக்கிறது புள்
அதுதான் சொன்னது
'வானம் அளப்பதற்கானதல்ல
பார்ப்பதற்கானது
ஒவ்வொரு மூச்சும்
வானத்தின் அழைப்பு
சுவர் உடைந்தால்
அகம் வானாகும்' என்று
பின்
'அதுவரை வானத்தைப் பார்த்திரு
தன் நிறத்தின் ஜாலங்களைக்
தான் காணத்தான்
கோடான கோடி கண்களைப் பெருக்கியுள்ளது
இந்நிலமெல்லாம்'
அன்பே
வானம் அழைக்கிறது
அதன் ஸ்படிக உண்மைகள் ஒளிர்கிறது
நாம் எழுதிய பொய்களின் புத்தகத்தை பூமியிலேயே
விட்டுவிடச் சொல்கிறது
மேலும் நான் எனும் சொல்லுக்கு அங்கு அனுமதி இல்லையாம்
தர்மம் அறம் ஆகியவற்றிற்கு பொருளில்லை
பொய் கீழமை கயமை ஆகியவற்றிற்கும் அதே கதிதானாம்
முக்கியமாக கண்ணீரில்லை
சொல்லில்லா வெளியை ஓங்காரம் நிறைத்துள்ளது
ஆனால் நான் இப்போது உன்னைப் பிரிந்தாக வேண்டும்
இப்பிரிவுக்கு நீயோ நானோ காரணமாக வேண்டும்
நாம் என்ற பொதுமை பேப்பரில் எழுத்தாவதற்கு மட்டும்
இப்பிரிவு பூமியில் அல்லவா நிகழ்கிறது
வானத்திலிருந்து வெகு தூரமல்லவா பூமி
கண்ணீர் பெருக்கு
நாம் அழுவோம்
எஞ்சும் வஞ்சங்களை நம் கைக்குட்டைகளில்
சிறு மலராய் பின்னி வைப்போம்
என்றோ ஒரு நாள் அதைக் கண்டு ரசிக்கலாம்
நம் 'நான்'களுக்கு மத்தியில்
தர்மம் அறம் பாவம் புண்ணியம் என
எல்லாவற்றையும் இழுத்து வருவோம்
நம் சிக்கலான கணக்குகளின் மேல்
கடவுள் நர்த்தனம் புரியட்டும்
எந்த இரு எண்களை கூட்டினாலும் இன்ஃபினிட்டிதான் விடை வானத்தில்
நம் எண்களுக்கு உலகெலாம் ஒப்புக்கொண்ட வரையறைகள் உண்டு
ஆனால் எந்த இரண்டு எண்களைக் கூட்டுவதென்பதில்
நாம் பெரும் பெரும் போர்களை நிகழ்த்திவிட்டிருக்கிறோம்
இப்பூமியின் மாபெரும் போர் கூட
சிறு பிசிரலையும் உண்டு பண்ணவில்லை
வானத்தின் ஓங்காரத்தில்
ஆனால் சொன்னதுபோல்
நாம் இப்போது பூமியில் இருக்கிறோம்
வானத்திலிருந்து வெகு தூரத்தில்
மேலும் சிலர் மரணத்தை விடவும் கொடிதாய்
ஒன்றைச் சொல்கிறார்கள்
வானம் என ஒன்றில்லை என்று
13
இன்று
ஏன் என்னை கைவிட்டாய்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில்
ஒரு மலர்கூடவா
இல்லை எனக்குத்தர
மலரின் சுகந்தத்தை
வீசக்கூடவா
உனக்கு மனமில்லை
நீ அளித்த
வெறுமையை அல்ல
என் அறைமுழுதும்
இருக்கும் மலர்களுக்கு
மத்தியில்
ஒரு மலரின்மையை
வைக்கிறேன்
ஜன்னல் வழி விழும்
உதயத்தின் கிரணங்கள்
மலர்கிறது மலரின்மையில்
..............................................
காலத்திற்கு
உயிரில்லை
மூச்சுண்டு
அகாலத்திற்கு
மூச்சில்லை
உயிருண்டு
.........................................
16
இதோ
உள்ளது
உள்ளபடி
வெளிப்பட்டு
கணம் கூட ஆகவில்லை
கிளையறியாமல்
இலைகூட அறியாமல்
பறத்தல் முடித்து
அமரும் சின்னப்பறவையைப்போல்
வந்துவிடுகிறது
பாவனை
இதோ
உள்ளதை
உள்ளபடி
கண்டு
ஒரு ஷணம் கூட ஆகவில்லை
நட்சத்திரம் விழுந்ததோடு
நகர்ந்துவிட்டேன்
பிரம்மாண்டங்களுக்கு
முன்னிருந்த
என் எளிய வானங்களுக்கு
.......................................
23
வானத்திற்கு
ஒழுங்கேது
வரையரையற்ற விரிவு
நிறம் இன்னதென
சொல்லமுடியாத
தன்மை
பெரும்கூரைமட்டுமா
அடிநிலமுமா
ஒரு பெரும்
சதுரமா
முக்கோனமா
என்ன வடிவுக்குள்
இத்தனை
கிரகங்கள்
அண்டங்கள்
இந்த வரம்பற்ற வானத்தில்தான்
அவ்வளவு ஒழுங்காய்
ஒரு குருக்குவெட்டுக்கோடாக
அமைத்துக்கொண்டு
சிறகடிக்கிறது
ஒரு புற்கூட்டம்
..................................................................
41
விருட்சங்கள்
மண் துளைத்து
வேர் வளர்கிறது
இலைகள் வெளி துளைத்து
காலூன்றி நிற்கிறது
கடல் பெரும் கூரையென
அந்தரத்தில்
தளும்பி நிற்கிறது
மீன்கள்
ஏரியின் ஆழத்திலா?
வானின் விரிவிலா?
வலசைப் பறவைகள்
வானின் மேலா
கடலின் கீழா
பூமியை விரித்து
கூரை ஓவியமென
பதித்துவிட்டிருக்கிறார்கள்
வானம் கால் எட்டா
தூரத்தில்
பெருநிலமென
விரிந்துள்ளது
மேகம் கிழித்து
கீழ்நோக்கி விழுகிறது
ஒரு தலைகீழ் உதயம்
.....................................................................
42
காலம்
தள்ளியிருக்கலாம்
சிலரது
சூழ்ச்சியாக்கூட இருக்கலாம்
தனித்துவமான
தனிமனிதனாகக்கூட
நான் வந்தடைந்திருக்கலாம்
தேனெடுத்து வருவதற்குள்
காடு பற்றியெறிந்ததால்
வழிதறிய
பட்டாம்பூச்சியபைப்போலும்
இருக்கலாம்
இங்கு முட்டி
அங்கு முட்டி
நீர்வழிப்படூவும் புனைபோலிருக்கலாம்
எல்லாம் வல்லது அலைக்க
அலையும் நீர் போல்
இருக்கலாம்
ஆனால்
எப்படியோ
போதும் என்று
அமர்ந்திருக்கிறேன்
இக்கணமெனும்
மாபெரும் நிகழ்வில்
....................................................
43
இம்மாபெரும்
கூண்டுக்குள்
சுற்றிச்
சுற்றி
பட்டுப்பூச்சியே
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்தமர்ந்தாய்
தூரிகை நுனியில்
இறகு வழி
ஒழுகி
இக்கணங்களுள்
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்துபரவியது
உன் வண்ணம்
நெஞ்சமெலாம்
....................................................
44
கிணற்றுத்துலா
துடிக்க துடிக்க
எத்தனை அடிக் கயிறு
இரக்கினேன் தெரியவில்லை
இழுக்கத் தெம்பில்லாமல்
கயிறுவிடவும் சக்தியின்றி
விட்டேன் கயிற்றினை
துலா கதறி சிலிர்த்தது
கயறு தீர்ந்து நுனி
சாட்டைச்சொடுக்குடன்
கிணறுள் குதித்தது
காதுகளை கூராகினேன்
மிக மெல்லிதாய் கேட்டது
வாலி சென்று தொட்ட
பாதரசம் தட்டிப்போன
ஆழ் உரையும்
இன்மையின் பிலம்
........................................
45
இம்மாஞாலத்தில்
காலமென்பது
எல்லாம் உள்ளடக்கி
பெருகிக்கொண்டே இருக்கும்
மகாநதி
இம்மாஞாலத்தில்
இக்கணமென்பது
சில காரணங்களாலும்
சில காரியங்களாலும் ஆன
மெல்லிய நீரொழுக்கு
...................................................
46
புன்சிரிப்பு
ஒரு அந்தியில்
அந்திக்கு
விடைகொடுப்பதைத்தவிர
செய்வதற்கொன்றுமில்லை
ஒரு இரவில்
இத்தனை இருளும்
வானத்தினதா நிலத்தினதா என
சிலாகிப்பதைக்காட்டிலும்
செய்வதற்கொன்றுமில்லை
இப்படியே
புலரி
பகல்
பொழுதுகள்
பொழுதுகள்.
தொடுவான் நோக்கி
சிறகடிக்கும் புள்
பொழுதினை காலத்தினுள்
காலத்தை அகாலங்களுக்குள்
இழுத்துச்செல்கிறது
..................................................
47
என்னை நான்
சொல்லில்
தஞ்சம்கொண்டுள்ளேன்
அதுதான்
என்னை உடைத்து
நெறுக்கி
செறிவாக்கி
தளர்த்தி
மேலும் கீழும் இழுத்து
இடம் வலம் அலைத்து
உலைத்துலைத்து
அடுக்கிக்கொள்கிறது
மெழுகால் ஆன
வீட்டைக் கட்டி
கையில் ஒரு கொல்லியைக்
கொடுக்கிறது
என்னை நான் எரித்துக்கொள்ள
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆணை
சொல்
தீர்ந்துவிட்டது
சற்றுமுன் வரை
தாண்டமாடிற்று
உருகிற்று
உறுதிபூண்டது
நீர்மைசூடி ஓடி
காற்றென அலையெரிந்து
இசையை முயங்கி
வீர்யம் கொண்டு
எல்லாம் இழந்து
வெறுமையைப் பாடிக்கொண்டு
துன்பங்களை வருடிக்கொண்டு
இன்பத்தின் நாளங்ளில்
பெருக்கெடுத்து
சற்றுமுன் வரை இருந்து
ஓய்ந்து எஞ்சியது
சொல்லற்று
சொல் செழித்த தடம்
பின் மெல்லிதாய்
மிக மெல்லியதாய்
எழுகிறது
நித்யத்தின் ஆணைப்படி
கருவினுள் முதல் அசைவாய்
..........................................................
மாபெரும் வண்ணத்துப்பூச்சி ஒன்று வனமலரின் நீர்மையெல்லாம் கொள்கிறது எறும்புகளின் ஊழ்கத்தில் மீளத் துளிர்க்கிறது வனமலர் இப்படியாக ஆடுகிற...