Tuesday, April 30, 2019

அதனதன் இயல்பு

நான் காதல் திரைப்படங்களை
மட்டும்
பார்க்கத் துவங்கினேன்

ஆடைகளிடையே மணிக்கணக்காக்
களித்திருக்க பழகிக்கொண்டேன்

எண்ணற்ற
செல்லக் கோணல்களுடன்
செல்பிக்கள் எடுத்துக் கொண்டே ன்

நாய்க்குட்டிகளை
கொஞ்சத் துவங்கினேன்

ஆண்கள் மோசமானவர்கள்
என அவ்வப்போது
பெண்ணியம் பேசினேன்

சோகங்களுடன்
கண்ணீரால் மட்டும்
உரையாடுனேன்

கண்ணீரைக் கோரும் வரை
சோகத்தின் இருப்பை
பொருட்படுத்தாமலிருக்கப்பழகினேன்

ஒரு அதிகாலையில்
சோகமெல்லாம் ஒரே அடியாக
ஒழிந்துவிட்டதாக
இயல்பானேன்

பரிசுகளை
ஒளித்துவைக்கத்
துவங்கினேன்

என் டைரியை
யாராலும் வாசிக்க முடியாத
மொழியில் எழுதினேன்

எனக்கே எனக்கான
ரகசியங்களை
காக்கத்துவங்கினேன்

ரகசியங்களை
மானசீகமாக
மட்டும்
பகிர்ந்து கொண்டே ன்

இவ்வளவும்
நீ என்னிடம்
ஒருமுறையாவது
மலர்வாய் என்பதற்காக

ஆனாலும்
ஒரு காலையில்
இன்ப அதிர்ச்சி கொடுத்து
உன் தோழி நம்
இல்லம் வந்த போது
ஒரு முழுமையான
மலர்தல் எப்படி இருக்கும்
என
காட்டினாய்

ஓர் இரவில்
உன் தோழியுடன்
கைக்கோத்து
பேசிச்சிரித்து
மகிழ்ந்து
ஒரு இரவு நடை சென்றுகொண்டிருந்தாய்

அன்று
குளிர்ந்திருந்தது
நிலவு முழுமையாய் இருந்தது
கடல் அளவாய் அலைவீசிற்று
ஷெல்லி கூட
இன்பமாய் கொஞ்சம் வாலட்டிவிட்டு
நேரத்திற்கு
உறங்கச் சென்றது
நீங்களிருவரும்
வெகு நேரம்
பேசி ச் சி ரி த் தீ ர் கள்
இரு இயல்பு
உரசி அலைவது போல

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...