Sunday, December 5, 2021

க்ருஹபங்கா

 நாவல் எனும் வடிவம் பல சாத்தியங்ககளை உடையது. ஒரு குடும்பத்தை அதன் நிகழ்வுகளை ஒரு வீட்டிற்குள் சொல்லிவிடும் நாவல்களுண்டு. ஒரு ஊரின் கதையாக ஒரு நிலத்தின் தேசத்தின் கதையாக விரியும் நாவல்களுண்டு. ஒரு சிறு காலத்தை பக்கங்களுக்கு விரித்துச் செல்லும் நாவல்களுண்டு. வரலாற்றின் குறுஞ்ச்சித்திரமாக தன்னை புனைந்துகொள்ளும் நாவல்களுண்டு. கவிதை நாடகம் சிறுகதை கட்டுரை என பல உள்ளடக்கங்களை தன்னுள் சுமக்கும் விரிவு நாவல் எனும் இலக்கிய வடிவுக்கு உண்டு.


நிகழ்வுகளின் அடுக்கில் வாசகனின் எதிர்பார்ப்பை பொய்ப்பித்து எதிர்பாராத ஒன்றை நிகழ்வளவில் மட்டும் நிகழ்த்திக் காட்டுவதும் நாவலே. வெறும் கேளிக்கை என்ற அளவில் நின்றுவிடுபவை அவை. வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரத்தை புனைய முயன்று முழுமை கூடாமல் செயற்கையாக சோகம் மரணம் என நின்றுவிடும் படைப்புகளுண்டு. ஒரு இலக்கியத் தரமான ஆக்கம் ஒரு தரிசனத்தை முன்வைப்பது. உயிர்வாழ்தல் எனும் செயலும் அதனில் நாம் அறிபவையும் அறியும் மனமும் அளப்பரிய நுண்மையுடையது, அளப்பரியது. ஆக முழுவாழ்க்கையையும் ஒற்றை தரிசனமாக முன்வைப்பது சாத்தியமல்ல. வாழ்க்கையின் ஒரு கூறு அல்லது ஒரு பரிமாணம் பற்றிய தரிசனமே சாத்தியம் என்பது என் பார்வை. இப்படி ஒரு தரிசனத்தை சுமந்து வரவே மேற்சொன்ன வடிவங்கள் எல்லாம். 

எஸ்.எல். பைரப்பாவால் 1972ல் எழுதப்பட்ட கன்னட நாவலான "கிருஹபங்கா"- தமிழில் "ஒரு குடும்பம் சிதைகிறது" - ஒரு அடிப்படையான எளிமையான வடிவத்தை உடையது. நேர்கோட்டுக் கதை. உணர்வுப் பெருக்கெழும் வரிகளொ கவித்துவமோ அற்ற நடை. நான் பார்த்த வாழ்வை சொல்லப்போகிறேன் அவ்வளவே எனும் தொனி எழுத்தாளரிடம். எங்கும் குவியாமல் மேலதிக அழுத்தத்தை எப்பாத்திரத்துக்கும் எந்நிகழ்வுக்கும் கொடுக்காமல் ஒரு மின்விசிறியின் சீரான வேகத்தோடு வாழ்வை கடக்கிறது நாவல். வாழ்வை காட்டுவதன் வழி தரிசனத்தை வாசகனை கண்டடையச் செய்வது இலக்கியப் படைப்பு. அதையே செய்கிறது கிருஹபங்கா.

கதையின் நிகழ்களம் கன்னடநிலம். பெங்களூர் மங்களூர் நெடுஞ்சாலையில் இன்றளவும் அதே பெயருடன் அக்கிராமங்க்கள் உள்ளன. ராமசந்ரா, நாகலபுரா, சன்னராயபட்னா, ஷ்ரவன பெலகோலா, டிப்தூர் டாலுக், தும்கூர் டிஸ்டிரிக்ட், ஹொலெநரசிபுரா -  கதை பெரும்பாலும் நிகழ்வது ராமசந்ரா மற்றும் நாகலபுராவில்.இரண்டும் பாசனம் செய்யப்படாத கிராமங்கள். விசும்பின் சித்தம் விளைச்சல்.

ராமசந்த்ரா கிராமத்தின் ஷனுபோகர் (கணக்குப்பிள்ளை) இறந்தபின் - எனும் சாதாரணமான வரிகளுடன் துவங்குகிறது நாவல். அவர் மனைவி கௌரம்மா- குணம்கெட்ட பெண்மணி - உருப்படாத பிள்ளைகள் சன்னிகராயா அப்பனையாவுடன் தனித்து வாழ்ந்து வாழ்வை நாசம் செய்து கொள்கிறாள். இக்குடும்பத்தின் சிதைவுதான் கதை.சன்னிகராயருக்கு நாகலபுராவைச் சேர்ந்த கண்டிஜோயின் மகள் நஞ்சம்மா மணம்முடிக்கப்படுகிறாள். பெண்களை தகாத வார்த்தைகளில் மட்டும் பேசுவதையும் வரம்பில்லாத குரூரங்கக்ளை கட்டவிழ்க்கவும் பழகிய குடும்பத்திற்குள் வருகிறாள் நஞ்சம்மா. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பொறுமையுடன், சாமர்த்தியத்துடன் வாழ்வை எதிர்கொள்கிறாள் நஞ்சம்மா. குழந்தைகள் ராமப்பா (தாத்தாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது), இரண்டாவது பெண் பார்வதி, கடைக்குட்டி விஷ்வா.இதுவிட்டு கிராமவாசிகளாக வரும் பல பாத்திரங்களுண்டு -  ஷிவலிங்க்கே கௌடா, ஷிவன்னா, அப்பன்னஜோய்ஸ்,அய்யன்சாஸ்த்ரி, மாதேவன்னவரு.

நிகழ்வடுக்களாக வேகமாக செல்லும் நாவலை வாசிக்கையில் நாவல் லௌகீகமான பிரச்சனைகளையே சொல்லிச் செல்வதாக தோன்றுவிடுகிறது.அதுவே உண்மையும் கூட. சுயநலம் காழ்ப்பு பொறாமையென மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள்,சாபமிடுகிறார்கள். ஆனவரை கசப்புடன் சுயநலத்தை விடாமல் இருக்கிறார்கள். அதிலும் கௌரம்மா தீமையின் தேஜஸ்ஸுடன் நின்று எரிகிறாள். ஒரு தராசு நிறுத்தப்படுவது போல ஒரு பக்கம் இத்தகையவரகள் எனில் மறுபக்கம் நஞ்சம்மா அவள் பிள்ளைகள், குண்டேகௌடர், மகாதெவன்னவரு போன்றவர்கள் தன்னியல்பால் ஒளிமிக்கவர்களாகத் திகழ்கிறார்கள் (இயற்கையிலேயே இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக நம்பிக்கையுண்டு எனக்கு). வாசிக்கையில் - குறிப்பாக கௌரம்மா - ஏனிப்படி மனிதர்கள் தன் தலையில் தானே மண்வாரிக்கொள்வது போல் நடந்துகொள்கிறார்கள் எனும் கேள்வி எழாமல் இல்லை. நாவலில் பதிலிருப்பதாகவே தோன்றுகிறது. அவரவர் இயல்பு அது. ஒவ்வொரு உயிரும் அதனதன் இயல்புடன் உள்ளது என்பதே பதில். ஆனால் இவ்விருபாற்பட்ட பாத்திரங்களையும் சிறு தொனி மாற்றமுமின்றி ஒரே சீராக கடந்து செல்கிறது ஆசிரியரின் குரல். லௌகீக வாழ்வே - மனித மனித உறவுகளால் கட்டமைக்கப்படும் இந்த கமூக வாழ்வே -  நம் கட்டுக்குள்ளின்றி பெருகும் தன்மையுடையதெனும் எண்ணம் எழுந்துவிடுகிறது.

ஆரம்பத்தில் நடந்தேறுவது லௌகீக நாடகம் மட்டும்தான் - மக்கள் தீமையினால் பாழ்செய்கிறார்கள் வாழ்வை சிலர் தன் நன்மையால சாமர்த்தியத்தால் கருணையுடன் வாழ்வை தூக்கி நிறுத்திகிறார்கள்.  ஆனால் மானுட எல்லைக்குள் வராத மானுடத்தை மீறிய நிகழ்வுகள் நாவலில் மெல்ல நுழைகிறது. ஊருக்குள் வயலில் எலிகள் செத்து விழும் செய்திவருகிறது, ஊருக்குள் மாரம்மா (நோயின் மரணத்தின் தெய்வம்) நுழைந்துவிட்டதாக தண்டோரா போடப்படுகிறது. மூன்று ப்ளேக் அலைகள் நாவலில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு அலைக்கும் ஊரை காலி செய்து ஊருக்கு புறத்தே வயலில் கொட்டகையிட்டு தங்குகிறார்கள். பின் ப்ளேக் ஓய்ந்தபின் - ஊருக்கு ஆறேழு பேர் ப்ளேகுக்கு பலியானபின்- மீண்டும் ஊருக்குள் வந்து மீண்டும் வாழ்க்கை தொடர்கிறது. ஒரு பஞ்சமும் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. வித்தியாசமற்ற தொனியில் சித்தரிக்கப்பட்டாலும் உலுக்கவதாக் இருக்கிறது பஞ்சத்தின் ப்ளேக்கின் பகுதிகள்.

நஞ்சம்மா ஆன திறமையுடன் வெறும் தீமையும் சுயநலமுமாய் அலையும் மனிதர்களை சுற்றி வைத்துக்கொண்டு வாழ்வை நேயத்துடன் முன்னெடுகிறாள். ஆனால் ப்ளேக்கின் முன் விக்கித்துப் போகிறாள். அவள் பிள்ளைகள் பார்வதி மற்றும் ராமப்பா ஒருவர் பின் ஒருவராக ப்ளெக்கில் இறந்து போகிறார்கள். நாவலின் மரண சித்தரிப்பு மறக்கமுடியாததாக மனதில் பதிந்துவிடுபவை.  மரணத்தின் வருகையை உணர்ந்துவிடும் ஒருவர் கடைசிவரை உணராமல் நிகழ்ந்துவிட்டதெனும் நிதர்சனம் முன் சிலைத்து நிற்கும் ஒருவர், மரணம் தரும் வெறுமையை சொல்லின்றி கடக்க்கும் இடங்கள், என துக்கத்திற்குள் வெகு வேகமாக இட்டுச் சென்றுவிடுகிறது நாவல். அதையும் மெல்லக் கடக்கிறாள் நஞ்சம்மா தன் கடைக்குட்டி விஷ்வாவிற்காக தன்னை திரட்டிக்கொள்கிறாள். தனக்கென ஒரு இல்லத்தை கட்டி முடிக்கிறாள். ஆனால் மீண்டும் ஒரு ப்ளேக் அலை. நஞ்சம்மா இறக்கிறாள். பெரும் வெறுமைக்குள் தள்ளிவிடுகிறது நாவல். மரணப்படுக்கையில் இருந்தபடி "எனக்கு ஏன் இப்படி ஆக வேண்டும்? ஆனவரை நன்மையை மட்டுமே ஒட்டி வாழ்வ்தவள்தானே நான்?" எனக் கேட்கிறாள். இகேள்வி எழுமிடம் நாவலின் உச்சம். மானுட நன்மை தீமை வரைஅயறைகளுக்குள் நின்றபடி மானுடம் மீறிய ஒன்றினைக் கண்டதால் எழும் கேள்வி. லௌகீக துக்கத்திலிருந்துதான் ஞானம் நோக்கிய முதல் கேள்வி பிறக்கிறது. 

நாவல் ஒட்டுமொத்தமாக ஒரு நம்பிக்கையின்மையை தொலைந்து நிற்கும் உணர்வை தருகிறது. அசராமல் நன்மையுடன் நின்றாடும் சுடரென நஞ்சம்மா இருக்கிறாள். ஆனால் எப்பயனும் இல்லையென இருள் ஒளி பாகுபாடற்ற அரூபமான காற்று கடந்து செல்கிறது. நாவலில் இறுதியில் நஞ்சம்மாவின் குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் துறவி மகாதெவனரு வாழ்வே துக்கவெளியாக விரிந்திருந்தாலும் நம்பிக்கையுடன் ஒளியுடன் அதனை கடப்பவராக இருக்கிறார். எத்தனை அரூபக் காற்று அடித்தாலும் எத்தனை சுடர்கள் அணைந்தாலும் மீண்டும் மீண்டும் ஏற்றப்படும் ஒரு மானுட சுடரை சுமந்து செல்பவராக இருக்கிறார். இப்படியான ஒருவரை சொல்லும் நாவலின் கடைசி பக்கம் மனைவி இறந்தபின் அவள் சம்பாதித்த பணத்தை விரையமாக செலவு செய்துகொண்டு, வயதைக் குறைத்துக் கூறி ஒரு பெண்ணை மணக்க முயன்று தோற்று, தன் தாயுடன் ஊராராக பிச்சை எடுத்து வாழும் சன்னிகராயர் மாதேவனவரு கையைப் பற்றிக்கொண்டு தன்னை கடப்பது தன் பிள்ளை என்பது கூட அறியாமல் தாம்பூலப் புகையிலையில் சொக்கியிருப்பதையும் சொல்கிறது.

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...