Saturday, April 25, 2020

SHOSHA - ISSAC B SINGER


வாழ்க்கை துயரமானது அர்த்தமற்றது எனப் புலம்ப யாருக்கேனும் நியாயம் இருக்கிறதென்றால் அது ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ஷோஷா நாவலின் கதாபாத்திரங்களுக்கே. இரண்டு உலகப் போருக்கு இடையே நிகழும் கதை. போலந்தில் வாழும் யூதர்களே பெரும்பான்மை கதாபாத்திரங்கள். ஹிட்லரின் நாஜிப் படை வரப்போகிறது கொன்று குவிக்க. இதற்கிடையே கட்டற்ற உறவுகள், தற்கொலை பற்றிய சிந்தனைகள், தற்கொலை அனைத்தும் வந்து போகிறது. இவர்களுக்கு இருத்தலியல் சிக்கல் வருவதில் ஆச்சர்யமில்லைதான். இப்போது காப்காவின் 'அந்நியன்' நாவலின் பாத்திரம் பால்கனியில் அமர்ந்துகொண்டு வாழ்க்கையை வெறுப்பதும்,  என்னைக் காதலிப்பாயா என உருகும் காதலியிடம் 'அதெல்லாம் கேட்காதே உன்னோடு இருப்பேன் அவ்வளவுதான்' என்பதும் ஏன் எனும் கேள்வியை எழுப்புகிறது.

நாவல் ஒரு காலகட்டத்தை அதன் பல சிக்கல்களைச் சொல்லிச் செல்கிறது. யூதர்களின் பழமைவாதிகளும் நவீன சிந்தனையுடன் எழும் ஒரு புது கூட்டாமுமாய் வாழும் காலம். ஹிட்லர் மெல்ல வளர்ந்து வரும் காலம், சோவியத் ரஷ்யாவில் அகோவென்றெழுந்த யுகப் புரட்சி, தன் காம்ரேடுக்களையே கொன்று குவிக்கத்துவங்கிவிட்ட காலம். இப்படியான ஒரு காலகட்டமே நாவலுக்கு இருண்மையைத் தந்துவிடுகிறது. மேலும் இருண்மையோடு கதாபாத்திரங்கள்.

"அரேல்"தான் Protagonist. அவன்தான் கதைசொல்லியும். அரேல் ஒரு மரபான  போலந்தில் வாழும் யூத குடும்பத்தைச் சார்ந்த சிறுவன். அவன் அப்பா ஒரு Rabbi (மதகுரு). இவர்கள் பக்கத்துவீட்டுப்பெண் ஷோஷா. அரேல் தன் வயது சிறூவர்களுடன் ஒட்டாமல் போகிறான், அவர்களும் இவனை சேர்த்துக்கொள்வதில்லை. அரேல் ஷோஷாவிடம் வருகிறான். அவன் கதைசொல்ல சொல்ல ஷோஷா தன் விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருவரும் நண்பர்கள். அரேலுக்கு ஷோஷாவை விட்டால் கதை சொல்லவோ, ஷோஷாவிற்கு அரேலை விட்டால் கதை கேட்கவோ ஆளில்லை. ஆனால் குடும்பங்கள் வேறு வேறு இடங்களுக்கு நகர தொடர்பற்று போகிறார்கள் அரேலும் ஷோஷாவும்.

அரேல் வார்ஷாவிலேயே வசித்திருந்தாலும் ஷோஷாவை அடுத்து ஒரு பதினைந்து வருடங்களுக்கு சந்திகவேயில்லை. இதற்கிடையில் அரேல் மரபு சார்கல்வியுடையவனாக இருப்பினும் நவீன சிந்தனைகளுடன் உருவாகிறான். எழுத்தாளனகும் முயற்சியுடன் ட்ராமாக்கள் எழுதுகிறான். அரேலின் காதல் மேலும் சில உறவுகள் என கதை நீள்கிறது. வாசிப்பின் போது சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இடமொன்று. அரேல் ஒரு நாடகம் எழுதி இயக்க பெரும்பணம் பெருகிறான். நல்ல வசிப்பிடமும் உணவுமாய் வாழ்கையில் அரேல் வாழ்க்கை பற்றிய பெருந்துயரோ, தற்கொலை உணர்வோ இல்லதவனாய் இருக்கிறான். ஆனால் நாவலின் பின்பகுதியில் கையில் காசு இல்லாமல் போகும் நேரத்தில் அரேல் தற்கொலைச் சிந்தனைகளைச் சென்றடைகிறான். ஏன் ஒருவன் வாழ்க்கையை வெறுக்கிறான் எனும் கேள்வி எழுகிறது நம்மில்.

 நாஜிப் படை வந்துகொண்டிருக்கிறது. உறவுகள் தன் வழக்கமான பாதையிலிருந்து சிதறுகின்றன. கணவனுக்குத் தெரிந்து தெரியாமலும் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் உடலுறவுகள். நிறைய கதாபாத்திரங்கள் தற்கொலைப் பற்றிப் பேசுகிறார்கள். மனிதவரலாற்றின் இருண்ட நிகழ்வான யூதப் படுகொலை ராட்சத மிருகமாய் மெல்ல ஊர்ந்து வருகையில் இப்பாத்திரங்கள் கொள்ளும் பிறழ்வு எல்லாமே நியாயமாகப் படுகிறது. இப்படியான ஒரு நேரத்தில் அரேல் மீண்டும் ஷோஷாவைச் சந்திக்கிறான். அதே தெருவில் வேறொரு வீட்டில் தன் அம்மவுடன் வசித்து வருகிறாள் ஷோஷா. ஷோஷா உடல் வளர்த்தி குன்றியவளாய் இன்னும் ஒரு பத்து வயதுச் சிறுமியின் தோற்றத்துடன் இருக்கிறாள். அரேல் ஷோஷாவைப் பார்த்ததுமே தன்னுள் என்றுமிருந்துவந்த அவள்மீதான காதலை உணர்ந்துகொள்கிறான். 

தினமும் ஷோஷாவைச் சந்திக்கிறான் அரேல். இதற்கிடையில் அரேலை தன்னுடன் அமெரிக்கா வந்துவிடும்படியும் தன்னை மணந்துகொள்ளும் படியும் அழைக்கிறாள் BETTY. அரேள் மறுத்துவிடுகிறான். ஷோஷாவை மணந்துகொள்கிறான். இவளை மணந்த்துகொண்டாள் உன் எழுத்துக்கனவு பாழாகும், நாடகங்கள் இயக்க முடியாது உன்னைப் பிடித்த பீடையாக இருப்பாள் இவள், மேலும் ஜெர்ன்மன் படை வருகிறது, இவளுக்காக இங்கிருந்து சாகப்போகிறாயா? இப்படியான பல கேள்விகள் அரேலுக்கு முன் வைக்கப்படுகின்றன.  ஆனால் அரேலுக்கு தான் ஷோஷாவைக் காதலிப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது,

ஷோஷா  நோய்மையால் சோர்ந்து கண் இடுங்கி நம் உள்ளங்கைகளில் ஒண்டிக்கொள்ளும் ஒரு பறவைக் குஞ்சு. ஷோஷா உடலளவில் பத்து வயது சிறுமி என்றாலும் , மனதளவில் மேலும் குழந்தை. அரேலும் ஷோஷாவும் செல்லும் ஒரு மாலை நடையில், ஷோஷா கேட்கிறாள்

"அரேல் நீ என்னை காதலிக்கிறாயா?"

"ஆம் ஷோஷா.. ரொம்பவும்"

"நீ இத்தனை நாள் இல்லாத போது இல்லாமலிருந்தாய். இப்போது நீ வந்துவிட்டாய், இனி என்னை நீங்கினால் நான் ஆயிரம் முறைச் சாவேன்"

"உன்னை நீங்கவே மாட்டேன் ஷோஷா"

"பார் அரேல், வானம் சிவப்பாக இருக்கிறது, நெருப்பைப் போல. இந்த கட்டிடங்களில் யார் வாழ்கிறார்கள் அரேல்?"

"பணக்காரர்கள்"

"யூதர்களா?"

"இல்லை"

"அரேல் எனக்கு பயமாக இருக்கிறது, என்னை வீட்டு அழைத்துச் செல்"

"பயப்படாதே. இறந்து போவதென்றானால் நாம் ஒன்றாக இறந்து போவோம்"

"ஒரு பையனையும் பெண்ணையும் ஒன்றாக புதைக்க அனுமதிப்பார்களா"

நான் பதில் சொல்லவில்லை. ஷோஷா என்  தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு நடந்தாள்.

நாஜிப்படை உள்நுழைய இன்னும் ஓரிரவே இருக்கிறது. அரேல் வார்ஷாவின் கடைத்தெரு ஒன்று உயிர்ப்போடு இயங்குவதை மலைத்துப் போய் பார்க்கிறான். அவ்விடம் ஒரு பிணக்காடாக மாறயிருக்கும் இடம். நாஜிப் படை உள்நுழைந்த மறுநாள், அரேல் ஷோஷா நடந்தே ரஷ்யா நோக்கிப் புறப்படுகிறார்கள். இரண்டாவது நாளில் ஷோஷா அரேலிடம் "அரேல் என்னால் முடியவில்லை" என்றபடி தரையில் அமர்கிறாள். பின் இறந்து போகிறாள். வார் அன்ட் பீஸ் நாவலில் லிட்டில் ப்ரின்ஸஸ் எனும் பாத்திரம் குழந்தையை பிரசவித்த பின் இறந்து போகும். "நான் என்ன செய்தேன்.. ஏனிப்படி" எனும் கேள்வியாக அவள் முகம் உரைந்திருப்பதாக தல்ஸ்தோய் எழுதியிருப்பார். ஷோஷா அதே போலொரு கேள்வியை எழுப்புகிறாள்.

அரேல் ஏன் ஷோஷாவிற்காக போலாந்திலேயே இருந்தான். BETTYஐ மணந்துகொண்டு அமெரிக்கா போயிருக்கலாமே? ஏன்? வாழ்வின் இருட்பெருக்கினிடையே சிறு ஒளிக்கிற்றாக இருப்பது உறவுகள்தானா?

இத்தனை நிகழ்ந்த பின்னும் வாழ்க்கை நகர்கிறது. அரேல் ரஷ்யா சென்று பின் சீனா சென்று, அமெரிக்க ஜெனரல் ஒருவரை மணந்து கொண்டுவிட்ட bettyயின் உதவியுடன் அமெரிக்கா செல்கிறான். BETTY ஏதோ ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளில் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள். நாவலில் இன்னும் சில பாத்திரங்கள் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறார்கள். தற்கொலைக்கு முன் அனைவரும் தன் அன்பானவர்களிடம் உதவிக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுகிறார்கள். அன்றாடத்தின் சராசரிப் பெருக்கில் அக்கரங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

அரேல் ஷோஷாவால் மீண்டுவிடுகிறான். 


திசையின்மையின் நகைப்பு


வுடி ஆலன் என்றால் நினைவில் வருவது மோனோலாக், இருத்தலியல் கேள்வி, உறவுகளின் சிக்கல், அது பற்றிய நகைப்பு, ஜாஸ் இசை, பதற்றமாக அலையும் ஹைப்போகான்ட்ரியாக், முகமூடிகளை  - உறவின் முகமூடிகள், அறிவுஜீவிகளின் முகமூடிகள் - கலைத்தபின் எழும் சிரிப்பு, மரணம். வுடி ஆலனின் படங்கள்  ஒன்றே போல் இருப்பதான தோற்றத்தை அளிப்பவை. ஏன்னெனில் அவை இருப்பு பற்றிய கேள்வி மனித உறவுகள் பற்றிய கேள்வி ஆகிய இரண்டே கேள்விகளை மையமிடுபவை. 1977ல் வெளியான ANNIE HALL இதே இரண்டு கேள்விகளையே மையமிடுகிறது.

 படம் ALVY SINGER கதாபாத்திரத்தின் மோனோலாகுடன் துவங்குகிறது 

"There is an old joke. Two elderly woman are at a catskill mountain restaurant. One of them says "the food at this place is terrible". And the other says "and such small portions." 

That's essentially how i feel about life: Full of loneliness, Misery, suffering and unhappiness.. and its all over much too quickly" 

இதே alvy singer கதாபாத்திரம் சிறுவனாக இருக்கும் போது:

ALVY : THE universe is expanding. If Universe is everything and it is expanding , someday it will break apart and that will be the end of everything. there's is no point in what we do.

Alvy's Mother :  Why is that your business ? What universe has got to do with your homework?

இப்படியாக இருப்பு பற்றிய கேள்விகளுடன், வாழ்கை துக்கமயமானது எனும் பார்வையுடன் வுடி ஆலனின் பாத்திரங்கள் உறவுகளை நோக்கிச் செல்கின்றன. ALVY singer தான் டென்னீஸ் விளையாடும் இடத்தில் Annie Hallஐ சந்திக்கிறார். இரண்டு முறை மணமுறிவு செய்துகொண்ட Alvy singerக்கும் Annie hallக்கும் இடையே காதல் மலர்கிறது. இப்போது யோசிக்கையில் புலனாகிறது, வுடி ஆலன் உருவாக்கும் பாத்திரங்கள் எல்லாம் தனியர்கள், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் தீவாகத் திரிகிறார்கள். மற்றோருவருக்காக எந்த சமரசத்தையும் செய்ய முடியாதவர்கள். Annie hall பாடகியாகும் வாய்ப்புக்காக லாஸ் ஏஞ்சலஸ் செல்கிறாள், Alvy Singer New York பைத்தியம். Alvy singerக்கு லாஸ் ஏஞ்ச்சலஸ் செல்லவோ Annieக்கு நியூ ஆர்க் திரும்பவோ விருப்பமில்லை.   யாரும் எதையும் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை. பிரிந்துவிடுகிறார்கள். 

பின் பல வருடம் கழித்து Annie நியூ ஆர்க் திரும்புகிறாள். Alvyயும் Annieயும் சந்தித்துக்கொள்கிறார்கள். உறவின் கடக்க முடியாத தூரத்தின் முன் நின்றுகொண்டு ஒரு மோனோலாக் வருகிறது..

"I thought of that Old joke. This guy goes to psychiatrist and says "Doc My brother's crazy. He thinks he is chicken." The Doctor says "Why dont you turn him in?". He replies "I would but i need the eggs" Well thats pretty much how i feel about relationships. They are totally irrational crazy and absurd. But we keep going through it coz most of us needs the eggs."

மொத்தத்தில் இப்படத்தில் தொனிப்பது ஒரு திசையின்மை. வாழ்வின் அர்த்தமின்மை குறித்த அதன் துக்கம் குறித்த தவிப்புக்கிடையே உறவுகளின் அர்த்தமற்ற ஆடல்களுக்கிடையே திசையற்றுப்போன உணர்வு. உறவுகளின் வாழ்வின் இந்த திசையின்மையை மெல்ல ஜாஸ் இசையுடன், தெரிக்கும் நகைச்சுவையுடன் சிரிக்கச் செய்து சொல்லிச்செல்வதே வுடி ஆலனின் கலை.

Sunday, April 5, 2020

திசையறிதல்


ஒரு கலை வடிவம் ஆன்மீகமான அல்லது அடிப்படை தத்துவக் கேள்விகளை கையாள்கையில் அதன் உச்சமான சாத்தியத்தை எட்டுகிறது. ஏனெனில் இக்கேள்விகளை ஒட்டியே வாழ்வின் ஒரு உச்சமான சாத்தியம் நிகழ்கிறது. ஒரு நிறைவான வாழ்விற்கு இக்கேள்விகளைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. 

டெரென்ஸ் மாலிக் இசையையும், வழிந்தோடும் காட்சிகளையும், தியான நிலையில் ஒலிக்கும் மோனக்குரல் நரேஷனையும் கொண்டு "நீ எங்கிருக்கிறாய்?" "இதெல்லாம் என்ன?" எனும் கேள்விக்குள் நுழைந்து விடுகிறார். 

கதை ஒரு மரணத்தில் துவங்குகிறது. தத்துவார்தமான வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளும் மரணத்தில்தான் துவங்குகிறது. கணவன் மனைவி மூன்று பிள்ளைகள். மிஸ்டர் ஓ ப்ரயன் மிஸஸ் ஓ ப்ரயன் குடும்பம். மிஸஸ் ஓ ப்ரயனின் குரல் சொல்கிறது, இரண்டு பாதைகள் உள்ளன வாழ்வில். இயற்கையின் வழி, அருளின் வழி. இயற்கையின் வழியில் போட்டிகள் உண்டு, காயங்கள் உண்டு, வெற்றிகளும் மகிழ்வும் தோல்வியும் உளைச்சலும் உண்டு. அருளின் பாதையில் அன்பு பிரதானமாகிறது மன்னிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நம்மைச் சூழ்ந்துள்ள பெரெழிலுக்காக மனம் நன்றியால் நிறைந்துள்ளது.  மனதில் காட்சிப்படுதிக்கொள்ளுங்கள் ஏறுமுகமான பிசிரில்லாத இசையுடன், தியானிக்கும் குரலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. அக்குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை தன் பத்தொன்பதாவது வயதில் இறந்து விடுகிறான். இசையும் நடிப்பும் பிரிவின் வலி நோக்கிச் செல்கிறது. மிஸஸ் ஓ ப்ரயனின் குரலில் "இறைவா நீ எங்கிருக்கிறாய்?" என்பதோடு சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மாறியான ஒரு இருவது நிமிடம் வருகிறது. பிரபஞ்சத்தின் தோற்றத்தை காட்டுகிறார்,  நெருப்புப் பிழம்பாயிருந்து மெல்லக் கனிந்து பூமி உருவாகிறது, முதல் உயிர் தோன்றுகிறது, டைனோஸ்ர்கள் காண்பிக்கப்படுகின்றன, அதிலும் ஒரு டைனோஸர் அடிபட்டுக்கிடக்கும் குட்டி டைனோஸார் ஒன்றை வேட்டையாடும் நோக்குடன் வந்துவிட்டு அதன் தலையை காலால் தரையோடு இருமுறை அழுத்திவிட்டு செல்லும் காட்சி உயிரின் பரிணாமத்தோடு கருணையின் பரிணாமத்தையும் காண்பிக்கிறார். இந்த இசையுடன் கூடிய இருவது நிமிடங்கள் திகைப்பில் நம்மை ஆழ்த்திச் செல்கிறது. ஒரு மரணத்தின் பின் அது எழுப்பிய ஒரு கேள்வியிலிருந்து பிரபஞ்சத்தின் உருவாக்கம் அதன் பரிணாமம் நோக்கிச் செல்கிறார். கார்ல் ஸெகனின் "தி காஸ்மோஸ்" இவ்வரிகளுடன் துவங்குகிறது "The Universe is all that is ever was ever will be". நாமும் பிரபஞ்ச்சத்தின் துளிதான் இங்கிருக்கும் அனைத்தும் பிரபஞ்சம்தான் எனில், இவ்வேதனை மரணம் தரும் வேதனையின் வேர் என்ன, நம் உறவுகளின் அதன் சிக்கல்களின் நம் ஆணவங்களின் அது புண்படும் வலிகளின் தீர்வுதான் என்ன? 

படம் நேராக அன்றாடத்தின் சிக்கல்களுக்குள் இறங்குகிறது. மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஓ ப்ரனுயனுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. எத்தனை அழகான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மிஸ்டர் ப்ரயன் சிசுவின் பாதங்களை தன் கைகளுக்குள் ஏந்தியிருக்கும் காட்சி எவ்வளவு அழகானது கவித்துவமானது. 
மிஸ்டர் ப்ரயன் வாழ்வை அதன் சிக்கல்களை அதன் தோல்விகளை, புற உலகின் நிதர்சனமற்ற கோரிக்கைகளை எதிர்கொண்டு தோற்று வென்று சென்று, அவமானங்களை சுமந்து பிறருக்கு அவமானங்களை கொடுத்து.... இம்மதிரியான ஒரு வாழ்க்கைக்கு தன் பிள்ளைகளை தயார் செய்கிறார். மிஸஸ் ப்ரயன் அன்பின் பாதையை முன் வைப்பவள். அவள் சொற்களில்தான் தீர்வு இருக்கும் திசையை காட்டும் வெளிச்சம் இருக்கிறது. 

                                                      

பிரபஞ்ச உருவாக்கத்தின் வியப்பிலிருந்த்து அன்றாட சிக்கலின் தளத்திற்கு வெகு லகுவாக படம் பயணித்து வருகிறது. அக்குடும்பத்தின் மூத்த குழந்தை ஷியான் பென். ஒரு நாற்பது வயது மனிதனாய் தான் வேலை பார்க்கும் வானுயர் கட்டிடங்களிலும் அலைகழிக்கும் கேள்விகளுடன் சுற்றித்திரிகிறான்.

ஒரு பாறைக்குன்றில் ஒரு நிலை (கதவு நிலை) மட்டும் நிற்கிறது. ஒரு பெண் வழிநடத்தி முன் செல்கிறாள். அவன் அந்நிலையைக் கடக்கவும் அவன் (ஷியான் பென் கதாபாத்திரம்) ஒரு கடற்கரையில் நிற்கிறான். அங்கு மனிதர்கள் ஆசுமாசமாய் நடந்தலைகிறார்கள். அங்கு தன் இறந்த தம்பியைப் பார்க்கிறது ஷியான் பென் கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரயன் இருக்கிறார். மிஸஸ் ப்ரையன் இறந்த தன் குழந்தையை அள்ளி அணைத்து கண்ணீராகிறாள். எல்லோரிலும் மாறாத புன்னகை. அது அன்பின் நிலம். அந்நிலத்தில் அப்பெருங்கடல் முன் மண்டியிடுகிறது அக்கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரையன் தன் முதல் குழந்தையின் பாதத்தை தன் கைகளில் ஏந்தும் போது ஒரு நெகிழ்வு தோன்றூமே அப்படியான நெகிழ்வால் மட்டும் ஆன அன்பின் நிலம் அது என்பது என் பார்வை. நம் அன்றாடத்தின் அத்தனை சிக்கலுக்கும் அங்குதான் தீர்வு. 

                                   

படத்தின் முதல் காட்சியாக வருவது வெறும் கருப்புத் திரை. அதில் மெல்ல ஒரு சிவப்பு நிற ஒளிப்பிழம்பு தோன்றுகிறது. படத்தில் நான்கைந்து இடங்களிலும் படத்தின் இறுதிக் காட்சியாகவும் தோன்றும்  இச்சிவப்பு ஒளிப்பிழம்பு படைப்புச் சக்தியின் உருவகம். இதைப் பொலொரு கற்பனை திரையில் காட்டப்படுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

                                 

பிரபஞ்சத்தின் பரிணாமத்தை உயிர்களின் பரிணாமத்தை காட்சியாக்கி, அவற்றின் மாயத்தை சொல்லும் வகையில் படைப்புச்சக்தியை ஒரு சுடர் போன்ற சிவப்பு நிற படிமமாக்கி, அங்கிருந்து நம் அன்றாடத்தின் உறவின் சிக்கல்களுக்குள் நுழைந்து, அதற்கு அன்பினை இயற்கையை வியக்கும் ஒரு தரிசனத்தை தீர்வாக முன்வைத்து இப்படியான ஒரு பயணத்தை நிகழ்த்தும் படத்தை நான் திரையில் பார்ப்பது இதுவே முதல்முறை. திரையில் நிகழ்வதும் இதுவே முதல்முறை.

Friday, April 3, 2020

பேரெழில் முன்

கடல்முன் நிற்பது எல்லோரையும்போல் எனக்கும் பிடித்த ஒன்று. நீர்ப்பெருவிரிவு மெல்ல உள்நுழைந்து ஏதோ ஒன்றை இலகச் செய்யும். மலைகளும் அப்படித்தான். பல்லத்தாக்குள், பெரும்பசுமை, பேருந்து ஜன்னல் வழி காட்சியாகும் தூரத்து அருவி எல்லாம் நம்மை திகைக்க வைக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது இயற்கை வர்ணனைகள். கம்பன் கார்கால வருகையை ஐம்பதற்கும் மேலான பாடல்களில் சித்தரிக்கிறான். சினிமாவில் நீங்கள் பார்த்த ஏதோ ஒரு இயற்கை காட்சி உங்கள் மனம் நீங்காமல் இப்பொழுதும் இருக்கும். எதற்கு இயற்கை மீண்டும் மீண்டும் பாடப்படுகிற்து? அது நம்மை சிறியதாக்குகிறது என்பதே பதிலாகப் படுகிறது. அல்லது நம் சிறு வாழ்க்கையை மீறி நிற்கும் பிரம்மாண்டம் இயற்கை.

டெரென்ஸ் மாலிக்கின் "தி ஹிட்டட் லைப்" உண்மை நிகழ்வை ஒற்றி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த Franz என்ற ஒரு மனிதன் மட்டும் போருக்கு செல்வதில்லை, போருக்கு நிதி உதவி செய்வதில்லை என முடிவெடுக்கிறான்.  ஊர் அவனை விலக்குகிறது. உடன் வாழும் மனைவியும் குழந்தைகளும் அம்மாவும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும் உறுதியாய் நிற்கிறான் franz. தன் தொழிலான விவசாயத்தை தன் குடும்பத்துடன் செய்து கொண்டு இக்காலகட்டத்தை கடந்து விட எண்ணுகிறான். ஆனால் போருக்கு அவனை அழைத்து ஆணை வருகிறது. முதலில் தடுமாற்றம். பின் அவனாக சிறை தேடி சென்றுவிடுகிறான். "Hail Hitler" என்ற வாக்கியத்தை சொல்ல மறுக்கிறான். பின் பெர்லினில் உள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்கென்று அமர்த்தப்பட்ட லாயர் சொல்கிறார் " நீ போருக்குச்  செல்ல வேண்டாம். மருத்துவமனையில் வார்ட் பாயாக செயல்படு போதும்". Franz கேட்கிறான் "நான் ஹிட்லருக்கு பணிய வேண்டுமா. என் விசுவாசத்தை ஹிட்லருக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டுமா?". "ஆம்" அப்படியெனில் முடியாது என மறுத்துவிடுகிறான்.

FRANZக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது "நீ ஒருவன் இப்படி செய்வதால் போர் நின்றுவிடாது. உன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. யாரும் உன்னை ஏரிட்டு நோக்கப்பபோவதில்லை" .. இப்படி ஆயிரம் சொன்னாலும் FRANZ உறுதியாய் இருந்துவிடுகிறான். ஒரு சாமனியனின் மன உறுதி அவன் நம்பிக்கை. உலகின் தீமைக்கு எதிராய் தன் எதிர்ப்பை சற்றும் தளர்த்திகொள்ள முடியாத அவன் உறுதி அவன் குடும்பத்தை பெறும் இடருக்குள்ளாக்குகிறது. ஆனாலும் மறுத்துவிடுகிறான். அவனுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீள்கிறது. சுருக்கி காட்சிகளை அடக்கினால் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லிவிடக்கூடிய கதைதான். அப்படியெனில் கூடுதலாக டெரென்ஸ் மாலிக் செய்வதென்ன?
இயற்கையை காட்சிப்படுத்துகிறார். முதல் 45 நிமிடங்க்கள்  ப்ரான்ஸும் அவன் குடும்பமும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதும் காட்சிப்படுத்தப்படுகிறது. அது ஒரு மலைக்கிராமம். இவ்வளவு எழிலுக்கு மத்தியில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. பைன்மரங்க்கள் அடர்ந்த மலைகள். ஆயிரம் நெளிவுகளுடன் ஓடும் நதி. விரிந்த்து கிடக்கும் புல்வெளி. FRANZ உம் அவன் மனைவி  FANY  உம் ஒரு காட்சியில் புல் வெளியில் அணைத்துகொண்டு படுத்திருப்பார்கள். பின்புலத்தில் மலை. அவர்கள் லேசாக சரிய கேமிரா அவர்களுடன் சரியவும் அவர்கள் கைகள் கோர்த்திருப்பது வானமும் மலையும் பின்புலமாக அமைய காட்சிப்படுதப்பட்டிருக்கும். அத்தனை அழகான காட்சி. அதே நேரம் அவர்கள் உறவின் அழகையும் ஆழத்தையும் சொல்லிவிடுகிறது.

டெரென்ஸ் மாலிக்கின் காட்சி மொழி  இசை, மொழி, காட்சி இவற்றை பினைத்து உருவாக்கும் கனவு போன்ற ஓட்டத்தை உடையது.  சினிமா என்ற கலைவடிவின் பெரும்பலம் அது மற்ற எல்லா கலைவடிவங்களையும்  பயன்படுத்திகொள்ளலாம் என்பதுதான். அதனை முழுமையாக செய்கிறார் டெரென்ஸ் மாலிக். படம் முழுவதும் தொடர் இருப்பாக் இசை ஒழுகிச்செல்கிரது. பின்னணிக்குரல்வழி உணர்வை வெளிப்படுத்தும் பாணி தொடர்ந்து டெரென்ஸ் மாலிக் பயன்படுத்துவது. கவித்துவமான வரிகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் துவங்குவதே "நான் நினைத்திருந்தேன் நம் கூட்டை ஓர் மரத்தின் உச்சியில் கட்டிக்கொள்ளலாம் என. அங்கிருந்து நாம் மலைகளை நோக்கி பறந்து செல்லலாம் என", இவ்வழகான வரிகளுடன். ஒழுகிச் செல்லும் இசை, கவித்துவமான வரிகள், இயற்கை இவையெல்லாம் பிணைந்துகொள்கையில் டெரென்ஸ் மாலிக்கின் படங்கள் க்ளாசிக் அனுபத்தை எட்டுகின்றன.

கதை, மானுடம் இருள் நோக்கிச் செல்ல அதனை எதிர்த்து நிற்கும் தனி மனித  உறுதி பற்றியது. ஆனால் இயற்கை படம் முழுதும் காட்சிப்படுத்தப்பட்டு படம் முடிவடைகையில் இவ்வளவு ஆட்டத்தினையும் மௌன சாட்சியாக இயற்கை பார்த்திருப்பதாக தோன்றிவிடுகிறது. படம் முடிவை  எட்டும் போது "எத்தனை சிறிய ஆட்டம் நம்முடையது" எனும் வரி மனதில் ஓடிகொண்டே இருந்தது. ஒட்டு மொத்த மானுடத்தின் ஆட்டத்தினை சிறியதாக்கும் இயற்கையும், மானுடத்தின் சிறு ஆட்டத்தில் ஒளியை தொடர்ந்த்து செல்லும் ஒருவனின் உறுதியும், ஒருவர் ஆழத்தை மற்றவர் புரிந்துகொண்ட அன்பும் டெரென்ஸ் மாலிக்கின் "THE HIDDEN Life"  என தொகுத்துக்கொள்கிறேன்.

(பின் குறிப்பு : இரண்டு வகை படங்கள். ஒன்று, பார்வையாளனின் எந்தப் பிரயத்தனத்தையும் கோராமல் அவனை உள்ளிழுத்துக்கொள்பவை. இரண்டு, படைப்பாளி தன் போக்கில் தான் கண்ட உண்மையை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டு பார்வையாளனை ஈர்ப்பதை இரண்டாம் பட்சமாகக் கொண்டவை. THE HIDDEN LIFE இரண்டாம் வகை. )

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...