Saturday, January 16, 2016

இயல்பெனும் காமம் (NYMPHOMANIAC)

தான் உண்மை என உணர்ந்ததை எந்த வித சமரசமும் இல்லாமல் முன் வைப்பவன் படைப்பாளி. கலையை பொழுதுபோக்காக இல்லாமல், உண்மை தேடலுக்கான கருவியாக கொள்ளும் ஒரு ரசிகன் அவ்வுண்மைக்கு முன் பணிபவனாக இருக்கிறான். அப்படியாக நான் லார்ஸ் வான் டையரின் முன் ரசிகனாக பணிகிறேன்.
                                               

நிம்போமேனியாக் என்ற சொல்லின் அர்த்தம் அதீத காம உணர்வுடைய பெண், காமப் பைத்தியம் என்பது தான் சரி. அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையே படமாகிறது. இரண்டு வால்யூம்களாக (பாகங்கள்) படம் வந்துள்ளது. இரண்டு வால்யூம்களும் சேர்த்து படம் ஐந்து மணி நேரம் நீளம் வருகிறது. ரோட்டில் அடிப்பட்டுக் கிடப்பவளை ஒரு ஐம்பதுவயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டுக்கழைத்துச் சென்று படுத்துக் கொள்ள இடமளிக்கிறார். அவரிடம் இப்பெண் தான் ஒரு நிம்போமேனியாக் என்று ஆரம்பித்து தன் வாழ்க்கையைச் சொல்லுகிறாள். இதுவே கதையாக விரிகிறது- இரு வால்யூம்களுக்கும். 

படத்தை பார்க்கும் பெரும்பாலானோர் இப்படத்தை PORN FILM எனக் கொள்ள வாய்ப்புண்டு. இது போர்ன் மூவியா? இல்லை. போர்ன் படங்கள் காமத்தை காட்சிப்பொருளாக்குவது. கலை காமத்தை ஆராய்வது. மனிதன் தன்னுள் இருக்கும் பிரதான இயற்கை விசை இரண்டு- ஒன்று பசி, மற்றொன்று காமம். ஒருவனுள் இருக்கும் காமம் , அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் விதிகள்- இவ்விரண்டும் முரண்படுகையில் உண்டாகும் கேள்வி, திகைப்பு முக்கியமானவை. அக்கேள்வியைத் தொடர்ந்து மேலும் மேலும் கேள்விகளை அடுக்கினால் பொத்தம் பொதுவான, மானுடம் ஓயாது எழுப்பும்அடிப்படைக் கேள்வியான "இதெல்லாம் என்ன?" வரை ஒருவனால் பயணிக்க முடியும், இக்காரணத்தாலேயே காமம் இலக்கியம் , கலை இவற்றின் நிலையான ஒரு பேசுபொருளாக நீடிக்கிறது. நிம்போமேனியாக் அறிவியல் ரீதியாக தத்துவ ரீதியாக ஒரு நிம்போமேனியாக்கை ஆய்கிறது. என்னற்ற கூறூகளால் நல்ல கலைப்படைப்பாகவும் திகழ்கிறது. ஒரு நிம்போமேனியாக்கின் மனநிலையை ஆய்ந்து செல்கையில் நிர்வாணமும் பிறப்புருப்புகளையும் காட்சிப்படுதுவதில் பிழையில்லை. ஆனால் இப்படம்,  காமத்தை இசையுடன் இயற்கையுடன் என்று ஒப்பிட்டுச் செல்கிறது. நிர்வாணக் காட்சிகளின் வழி படம் சென்றடைவது முற்றிலும் வேறான ஒரு தளத்தை. ஜோ மூவகை ஆண்களுடன் புணர்வதை விவரிக்கையில், வெண்முகில் நகரம் (வெண்முரசு) நாவலில் பாண்டவர்கள் உடனான திரௌபதியின் முதல் இரவுகள் நினைவுக்கு வந்தது.

படத்தின் நாயகி ஜோ (joe). அதீத உடல் இச்சை கொண்டாவளாக இருக்கிறாள். தோழியுடன் ஜெம்ஸ் போற மிட்டய்க்காக, போட்டியிட்டு அதிக ஆண்களைப் புணர்கிறாள். இது குறித்த குற்ற உணர்வுமில்லை. அவளின் இயல்பு இயற்கை அப்படி. அவள் தந்தை மரணப்படுக்கையில் கிடக்கிறார். இவளதான் அவரருகில் இருக்கிறாள். தந்தை மலத்தில் புரள்வதை காணுமிவள், மருத்துவமனியிலேயே ஒருவனைக் தேடிக் கண்டு அவனுடன் புணர்கிறாள். தன் தந்தையின் நிலை பரிதாபமாக ஆக ஆக அவள் உடல் புணர்ச்சியை நாடுகிறது. மரணத்தை மனமும் உடலும் ஏர்ப்பதில்லை. தான் காண உறுதியாய் நின்ற தன் தந்தை மலத்தில் புரள்வதை, மகளாக அல்ல, ஒரு சக உயிர் ஏற்க மறுக்கிறது. முழு வீரியத்துடன் இயங்கத் துடிக்கிறது. தந்தை இறக்கையில், அவளுக்கு காம நீர் சுரக்கிறது. இப்படியாக அதீத மனநிலைகளை அவற்றிற்கான காரணங்களை உள்ளடக்கியபடி முன் செல்கிறது படம். Bachக்கினுடைய இசைக்கு, காமத்தை ஒப்புமையாக்குமிடம் அழகு.
                                 

பாகமிரண்டும் நிம்போமேனியாக்கின் அனுபவங்களாகவே தொடர்கிறது. காதல் எனும் ஒரு உணர்வு அவ்வப்போது வந்து போவதாக இருக்கிறது அவளுக்கு. Love is the key to sex இவளுக்கு பொருந்தாது போகிறது. இவள் காம் உணர்வை இழக்கிறாள். பின் அவள் காதலன் காம உணர்வை இழக்கிறான். குழந்தைப் பாசமும் அவளுக்கு உண்டு.  ஆனால் காதல் குழந்தைப் பாசம் யாவற்றையும் கடந்து அவள் காமத்தால் இயக்கப்படுகிறாள்ஜோ தனக்துத்தானே கருகலைப்பு செய்து கொள்ளும் காட்சி - கருவிலிருந்த குழந்தை சிறு சதையைப்போல் வெளிவந்து விழுகிறது. தலைமுடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அய் அய் என்று விநோத ஒலிகள் எழுப்பிய படி பார்த்தேன் இக்காட்சியை. 

ஒரு புள்ளியில் க்ரிமினல் கூட்டத்தோடு இணைந்துகொள்கிறாள். பணம் படைத்த மனிதர்களிடம் உள்ள காமம் சர்ந்த முறைபிறழ்வுகளை அறிந்து கொண்டு மிரட்டி பணம் பரிக்கிறாள். அப்படியாக பணம் பரிக்கையில், ஒரு Paedophileஐ(குழந்தைகள் மீது காம உணர்வு கொண்டவர்கள்) சந்திக்க நேர்கிறது. அவன் மீது இரக்கம் கொள்கிறாள். தன்னையும் அவனையும் Sexual outcasts என்று கூறுகிறாள். காம உணர்வுகளை வெளிப்படுத்த இடமில்லாமல் வெளிப்படுத்தினால் குற்றமாகிவிடும் நிலையில் கடினமான ஒரு வாழ்க்கை வாழ்பவர்கள் மீது உண்டாகும் இரக்கமே அவன் மீது தனக்கு உண்டானதாகக் கூறுகிறாள். 

படத்தின் முக்கியமான ஆழமான காட்சியாக நான் கருதுவது ஒரு மலையின் உச்சியில் நிற்கும் அவளோடு சேர்த்து மலையுச்சிப்பாறையில் வளர்ந்த தனித்து நிற்கும் மரத்தையும் காட்சிப்படுத்தியிருக்குமிடம். இயற்கையில் விநோதங்கள் இயல்பு, அந்த மலையுச்சிப்பறையில் வளர்ந்து நிறகும் மரத்தைப் போல. அவளும் அப்படியே. இயற்கையின் விநோதம்.  அவ்வளவே. விநோதத்தின் இன்னொரு துருவமாக அவளிடம் கதை கேட்பவரான ஸெலிக்மன் காம உணர்வில்லாதவர். இயற்கை! அவ்வளவே!

படத்தின் இறுதியில்,  மலையுச்சிப்பாறையின் மரத்திடமிருந்து ஒரு பாடம் கொண்டதாகச் சொல்கிறாள். வேறெந்த மரமும் போலல்லாமல் அது மலையுச்சியில் போராடி வளர்ந்து நிற்பது போல், தானும் வாழ்வை நிலைநிறுத்தப்போவதாகச் சொல்கிறாள். இயற்கையை எதிர்த்துப் போராடுவதான மானுட இயல்பைக் கொள்கிறாள். பின்பு ஒரு எதிர்பாராத நிகழ்வுடன் கதை முடிகிறது.  அவளிடம் அவ்வளவு நேரம் கதை கேட்ட ஸெலிக்மன் அவளுடன் சேர்க்கையில் ஈடுவட முயல்கிறார். ஜோ தடுக்கிறாள். "But you fucked tonnes of men" என்கிறார். பின்பு அவரை தன்னிடமிருக்கும் பிஸ்டலால் சுட்டுவிட்டு தப்புக்கிறாள் ஜோ. அவளுக்கு துப்பாக்கியை இயக்கச் சொல்லிகொடுத்ததே அவர்தான். வேண்டுமென்றெ புகுத்தப்பட்ட காட்சியாக கருதலாம் ஒரு சிலர். என் வரையில் அப்படி இல்லை. மனதின் உச்சமான விநோதத் தன்மை வெளிப்படுமிடமாக இதை நான் கொள்கிறேன். மேலும் லார்ஸ் வான் டையர் ஒரு நேர்காணலில் "எனக்கு வாழ்க்கையில் எதைக் கண்டாலும் பயம். படம் எடுப்பதைத் தவிர" எனச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கை மீதான அவருடைய நம்பிக்கையிமையே இக்காட்சியில் வெளிப்பட்டுள்ளது. ஜோ தன் வாழ்க்கையை ஒழுங்கு பட அமைத்துக் கொள்ள முனைகிறாள். தன் மகனை சந்தித்தாலும் சந்திபேன் என்கிறாள். ஆனால் வாழ்க்கை குழப்பக் கிடங்கு. அது அவளை விடவில்லை.

என்னைப் பொறுத்து வரையில் இயற்கையின் விநோத இயல்புகளின் வழி ஒரு நிறைவான பயணம் நிம்போமேனியாக்.






அழிவின் தீவிரம் (Melancholia)

MELANCHOLIA- 1. Deep sadness or Gloom
                                2. Clinical depression, characterized by irrational fears, guilt and apathy

நண்பன் அச்சுதன், அரை ட்ரவுஸருடன் கணிணி முன்னிருக்கும் சேரில் சரிந்து அமர்ந்து கொண்டு வலது கையால் மவுஸை பிடித்த்துக்கொண்டு, சிறு சிறு கட்டங்களை திரையில் வரைந்தபடி, அவனுடைய ஸ்க்ரீன்ஸேவரைக் காண்பித்தான். 
மெலன்கோலியா படத்தில் வரும் காட்சியை- இரவில் ஒரு பக்கம் நிலவும் மறு பக்கம் அந்த மெலன்கோலியா ப்ளானட்டும் நடுவில் பெண் ஒருவள் நின்றிருக்கும் காட்சியை- ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவன் கண்ணினியில் ஸ்க்ரீன்ஸேவராக வைத்திருந்தான். அதைக் காண்பித்து “அங்க பாரு என்ன மாதிரி ஸீன் தெரியுமா இது?” என்பான். நினைத்து பார்க்க முடியாத பேரழிவு, நாம் நினைப்பது நினைக்காத்து எல்லாம் ஒரு பொறுட்டேயல்ல என்பது போல் நம்மை அணுகும் கணம் அந்த ப்ரேமில் பதிவாகியிருக்கும். மானுடம் அவ்வழிவுக்கு.... அழிவல்ல....அழிவு என்பது மானுடக் கண்களில், அந்த இயக்கம்...ஆம் இயக்கம் தான் சரியான வார்த்தை.. அப்பேரியக்கத்தின் முன்பாக மொத்த மானுடமும் சிறுத்து காற்றில் திரியும் தூசு. வரவிருக்கும் சர்வ நாஸத்தை முன்னரே உணர்ந்து கொள்கிறாள் நாயகி. மானுடம் அடையப்போகும் அழிவை தெரிந்த்துகொண்டவள், மானுடம்வரைந்திருக்கும் எல்லைகளைக் கடக்கிறாள். அன்று மணமான தன் கணவனுடன் உடலுறவுக்கு மறுக்கிறாள். தன்னை அழைக்க வரும் பணியாளன் ஒருவனை நடு மைதானத்தில் புணர்கிறாள். நடு மைதானத்தில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறாள். இப்படி வரம்பில்லா செயல்கள் யாவும், அவள் மனதில் வரம்புகள் அர்த்தமற்றுப்போனதன் விளைவு. 

உருவகக் காட்சிகள் ஏராளம். படத்தின் தொடக்கமே நாயகியின் காய்ந்து வெடிக்கக் காத்திருக்கும் நிலம் போன்ற உணார்ச்சியற்ற வெளிறிய முகம், பின்புலத்தில் பறவைகள் இறந்து விழுகின்றன. பூமியை மெலன்சோலியா கிரகம் மோதும் காட்சி. குதிரை ஒன்று சரிந்து விழும் காட்சி. இலைகள் உதிரும் காட்சி. இதெல்லாவற்றுடனும் வயலின் இசை. மெலங்கோலிக் இசை. உருவகக் காட்சிகளை உடைத்துப் பார்த்து அர்த்தம் சொல்லுவதில் பயனில்லை. அந்த இசையுடன் சேர்ந்து அக்காட்சி உருவாக்கும் அதிர்வலைகளே போதும். எனக்குக் குறிப்பாக ரொம்பவும் பிடித்த காட்சி, நாயகி திருமண உடையுடன் கையில் பூச்செண்டுடன் நடக்க முயல, அவள் கால்கள் குவியலான கருமை நிற ஜவ்வு போன்ற ஏதோ ஒன்றுடன் பிணைந்திருக்கும். இயல்பையும் கனவையும் அறியாமையையும் நினைவுறுத்துகிறது.



மொத்த கதையும் ஒரு பெரிய எஸ்டேட் பில்டிங் போன்றொரு ஒதுக்குப்புறாமான வீட்டிற்குள் நிகழ்ந்துவிடுகிறது. நாயகி அவள் அக்காவுடன் தங்கியிருக்கிறாள். அக்காவின் கணவன், மனைவியை குழந்தையை மெலன்கோலியா பற்றி அறிய இடம் கொடாமல் பார்த்துக் கொள்கிறான். அந்த கிரகம் பூமியை நெருங்கி வந்து விலகிவிடுமென்று கூறி வருகிறான். அதேபோல் கிரகம் நெருங்கி வந்து விலகிவிடுகிறது. ஓரிரவு கடந்து தூங்கி எழுகையில், அக்கிரகம் பூமியை அணுகி வரத்தொடங்க்குகிறது. கணவன் குதிரை லாயத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். அக்கா தன் குழநையுடன் தப்பித்து அருகிலிருக்கும் டவுனுக்குள் செல்வதான எளிய மானுட அறிவுடன் செயல்படுகிறாள். அச்சமும் அழுகையும் பீடித்தவளாக குழந்தையுடன் அங்கு மிங்கும் ஓடி ஒரு வழியுமின்றி வீடடைகிறாள். நாயகி இவ்வளவுக்கும் இடையில் சலனமின்றி இருக்கிறாள். தன் அக்காவின் மகனை அமைதிபடுத்த, குகை ஒன்றை தயார் செய்து அதனுள் அமர்ந்து கொண்டாள் போதுமென்றும் தப்பித்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கிறாள். ஒரு மேடான பகுதியில், நாலைந்து ஆள் உயர குச்சிகளை ஒன்றாக குவித்து நிறுத்தி, அதனிடையில் அமர்ந்து கொள்கிறார்கள். மூவரும் கைகோர்த்து அமர்ந்திருக்க, பின்புலத்தில் பிரம்மாண்டமாய் மெலன்கோலியா அணுகி நெருங்கி உலகம் அழிகிறது.



மெலன்கோலியா என்பதன் அர்த்தம் ஆழ்ந்த துக்கம். அவ்வார்த்தையையும் கடந்து படம் உயிரச்சத்தை விதைக்கிறது. நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ, நாம் எதன் அங்கமோ, தத்துவம், அறிவியல் அன யாவும் எதன் கருவியோ, அது அர்த்தமிழக்கிறது. மானுடமில்லாது, பிரபஞ்ச வெளியில் மிதக்கப்போகும் உலகம் பற்றிய கற்பனை பெறும் வெறுமையை உமிழ்கிறது. 

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...